என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
- ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குஜராத் மாடல் என்றால் அது வளர்ச்சி அல்ல, வாக்கு திருட்டு தான் என்று மக்கள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் இன்று பீகார் மாநிலத்தில் வெளிப்படையாக கூறியிருப்பது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மக்களின் நம்பிக்கையை பறித்து ஆட்சியைப் பிடிக்கும் பாசிச ஒன்றிய அரசின் முகமூடியை கிழித்து எறியும் வலிமையான வார்த்தைகளாக இது திகழ்கிறது.
இந்திய ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தில் இவ்வாறு வெளிப்படையான நிலைப்பாடு எடுக்கும் ராகுல் காந்தி அவர்களின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனமுவந்து வரவேற்கிறது.
நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கும் உண்மையான மாற்றத்தின் குரல் என்றும், ஜனநாயகத்தின் காவலன் என்றும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய பின்னலாடை துணிகளை இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
- ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
திருப்பூர்:
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரி விதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.
அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி கடுமையாக பாதி க்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாநகரில் இருந்தே நடக்கிறது. 1980 முதல் 90ம் ஆண்டுகளில் இங்கு வளர்ந்த பின்னலாடை ஏற்றுமதி தொழில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சந்தைகளை வசப்படுத்தி ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி என்ற அளவில் ஏற்றுமதி நடக்கிறது.
இந்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்கான பின்னலாடைகள் திருப்பூரில் இருந்து அமெரி க்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஏற்றுமதியை நம்பி சிலநூறு பெரிய பின்னலாடை நிறுவனங்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்த 50 சதவீத அபராத வரியானது திருப்பூர் பின்னலாடை தொழிலை ஸ்தம்பிக்க செய்துள்ளது.
இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு 25 சதவீத வரி ஒரு மாதமாக இருந்து வந்த நிலையில், இன்று (27-ந்தேதி) முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னதாக பெறப்பட்ட பின்னலாடை ஏற்றுமதிக்கான ஆடைகளை பழைய விலையில் பெற்று விற்பது என்பது அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு இயலாத விஷயமாகி விட்டது.
அதாவது கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பின்னலாடை ஒன்றை 10 டாலருக்கு விற்ற ஒரு இறக்குமதியாளர், டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக இன்று முதல் அதை 16 முதல் 18 டாலர் மதிப்பில் தான் விற்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால் இந்திய பின்னலாடை துணிகளை இறக்குமதி செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூரில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது போல, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
50 வரி விதிப்பு மூலம் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தினசரி ரூ.500 கோடி முதல் ரூ.700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும்.மேலும் அமெரிக்காவின் 50 சதவீத அதீத வரி திருப்பூர் பின்னலாடைத்தொழிலை நேரடியாக பாதிப்புக்கு ஆளாக்கும் என்பது உண்மை. சில நிறுவனங்கள் நேரடியாகவும், சில நிறுவனங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பாதி உற்பத்தியில் இருக்கக்கூடிய ஆடைகள் நிலை குறித்து இறக்குமதி வர்த்தகர்களிடம் பேசி வருகிறோம்.
இரு தரப்பும் இந்த வரிவிதிப்பால் ஏற்படும் இழப்பை பரஸ்பரம் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று பேசி வருகிறோம். இந்த நிலை நீடித்தால் மாதத்திற்கு ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், அமெரிக்கா நம் மீது விதித்துள்ள வரியால் போட்டி நாடுகளுக்கு சாதகமாக அமையும். ஆடைகள் உற்பத்தி பாதியாக குறைவதுடன், திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
புதிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் மேற்கொள்வது, அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற விஷயங்கள் நடைபெற வேண்டும். அரசு சலுகைகளும் வழங்க வேண்டும். அதுவரை தாக்குப்பிடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம், மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. திருப்பூர் பின்னலாடை துறையில் உள்ள 10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை முன்வைத்து நேரடியாக பிரதமர் மோடியை சந்தித்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
இதனிடையே அமெரிக்காவால் ஏற்பட்ட பாதிப்பை சரி கட்ட ஐரோப்பா, அரபுநாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடைகளை அதிக அளவு உற்பத்தி செய்து கொடுக்க திருப்பூர் உற்பத்தியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 1% பாதிப்பு ஏற்படலாம்.
- பல ஏற்றுமதி சார்ந்த முக்கிய துறைகள், குறிப்பாக MSME-கள், பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி உங்கள் அன்பு நண்பர் ட்ரம்ப் ஆட்சி" இன்று முதல் இந்தியாவுக்கு 50% சுங்கவரி விதித்துள்ளார். இந்த சுங்கவரியின் முதல் பாதிப்பாக, 10 துறைகளில் மட்டும் நாம் சுமார் ₹2.17 லட்சம் கோடி இழப்பைச் சந்திக்க உள்ளோம்.
நமது விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் காக்க எந்த "தனிப்பட்ட விலையையும்" செலுத்தத் தயார் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள்.
ஆனால் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்த பாதிப்பைக் குறைக்கவும் நீங்கள் எதுவும் செய்யவில்லை.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) பரிந்துரைப்படி, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 1% பாதிப்பு ஏற்படலாம், மேலும் இதனால் சீனா பயனடையும் என்று கூறப்படுகிறது.
பல ஏற்றுமதி சார்ந்த முக்கிய துறைகள், குறிப்பாக MSME-கள், பெரும் வேலை இழப்புகளை எதிர்கொள்ள உள்ளன.
ஒரு சிறிய பகுதி- இது பனிப்பாறையின் முனை மட்டுமே- கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்துகிறது:
இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறையில் சுமார் 5,00,000 வேலைகள் (நேரடி மற்றும் மறைமுக) இழப்பு ஏற்படலாம்.
ரத்தினங்கள் மற்றும் நகைத் துறையில், சுங்கவரி தொடர்ந்தால் 1,50,000 முதல் 2,00,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன.
ஏப்ரல் முதல், அமெரிக்காவில் 10% அடிப்படை சுங்கவரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சௌராஷ்டிரா பகுதியில் வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டலில் ஈடுபட்ட சுமார் 1,00,000 தொழிலாளர்கள் ஏற்கனவே வேலையை இழந்துள்ளனர்.
சுமார் 5,00,000 இறால் விவசாயிகளின் நேரடி வாழ்வாதாரமும், மறைமுகமாக மேலும் 25,00,000 பேரின் வாழ்வாதாரமும் பெரும் ஆபத்தில் உள்ளது.
இந்திய தேசிய நலன் மிக உயர்ந்தது. ஒரு வலிமையான வெளியுறவுக் கொள்கைக்கு உள்ளடக்கமும் திறமையும் தேவை. ஆனால் உங்கள் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கை ஈடுபாடுகள்- புன்னகைகள், கட்டிப்பிடிப்புகள் மற்றும் செல்ஃபிகள் - நமது நலன்களைப் பாதித்துள்ளன.
நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள். இப்போது நமது நாட்டைக் காக்கவும் தோல்வியடைந்து வருகிறீர்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மருந்துகள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலியம் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு தொடரும்.
- நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 'மருந்துகள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலியம் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு தொடரும். அதே நேரம், இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருள்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான வங்கதேசம், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் பொருள்களுக்கு வரவேற்பு பெருகும். இதனால், இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தனர்.
- இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீகார் தான்.
- சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பீகாருக்கு சென்றுள்ளார்.
புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பீகாரின் புத்த கயாவில் தான் இருந்தது.
அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பீகார் தான்.
இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீகார் தான்.
அத்தகைய சிறப்புமிக்க பீகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.
சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம் என தெரிவித்துள்ளார்.
- திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார்.
- நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது.
திருச்சி:
தே.மு.தி.க. பொத்ச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களின் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் 2-வது கட்டம் வருகிற 5-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இடம் மற்றும் தேதிகளை விரைவில் தலைமை அறிவிக்கும். இந்த ரத யாத்திரை மக்கள் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது.
திருச்சிக்கு வெகு விரைவில் வர இருக்கிறோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தே.மு.தி.க. வரவேற்கிறது.
அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும்போது, நாட்டுக்கும் மக்களுக்கும் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் என நம்புகிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வேறு. எங்களது பயணம் வேறு.
நாங்கள் காலையில் பூத் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறோம் மாலையில் ரத யாத்திரை நடத்துகிறோம். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாகவும், யாருடன் கூட்டணி என்பதையும் வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம்.
இப்போது கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறோம். எம்.ஜி.ஆருக்கு பின்னர் மக்கள் தலைவராக திகழ்ந்தவர் விஜயகாந்த். ஆகவே அவரைப்பற்றி அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் பேசாமல் இருக்க முடியாது. அது எங்களுக்கு சந்தோஷம்தான்.
விஜய் கட்சி மாநாட்டில் ரேம்ப் வாக்கில் குதித்து ஏறும்போது பவுன்சர்கள் தொண்டர்களை தள்ளி விட்டது எல்லா கட்சியிலும் நடப்பது தான். திட்டமிட்டு யாரும் செய்வதில்லை. காவல்துறைக்கு அடையாளமாக திகழ்ந்தவர் விஜயகாந்த்.
ஆனால் இன்றைக்கு தே.மு.தி.க. கொடி பிளக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததாக எங்கள் மாவட்ட செயலாளர் கூறினார். அனுமதி கொடுத்தால் எல்லாருக்கும் அனுமதி கொடுங்கள். இல்லை என்றால் யாருக்கும் அனுமதி கொடுக்காதீர்கள்.
திரை உலகில் 50 ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார். அவருக்கு முதல் ஆளாக நானும் தேமுதிகவும் வாழ்த்து தெரிவித்தோம். 50 ஆண்டுகள் கதாநாயகனாக நடிப்பது இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. விஜயகாந்த் இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பார்.
நடிகர் சங்கமோ, அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அது அவர்களின் விருப்பம்
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்கள் டி.வி.கணேஷ், சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
- ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.
சிட்னி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தோல் புற்று நோய் என்பது உண்மையான ஒன்று. இன்று எனது மூக்கில் இருந்த கேன்சரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி இருக்கிறார்கள். நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.
உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய விஷயத்தில், நோய் வருவதற்கு முன்பே காத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்ததாக உள்ளது. நான் தொடர்ந்து சிகிச்சைகள் எடுத்து வருகின்றேன். ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.
என்னுடைய மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அகற்றி விட்டார்கள்.
என்று கிளார்க் கூறியுள்ளார்.
கிளார்க், 115 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8643 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் 28 சதம் அடங்கும். இதேபோன்று 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7981 ரன்கள் அடித்துள்ளார்.
2015-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2015 ஆஷஸ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மு.க.ஸ்டாலின் உடன் எடுத்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன்.
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரயின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி SELIFE எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படத்தை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது சகோதரர் மு.க.ஸ்டாலினை பீகாருக்கும், வாக்காளர் அதிகார யாத்திரைக்கும் வரவேற்கிறேன். உங்களுடைய வருகையும், சோரிக்கு எதிரான எங்கள் வாக்குச் சேகரிப்பு போராட்டத்திலும் பங்கேற்றது வலுப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் பட்டியலில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமா, இல்லையா?
- இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா?
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை சரியா, தவறா? என்பது குறித்து பொதுமக்களிடம் தேர்தல் ஆணையம் கருத்துக்களை கேட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமா, இல்லையா? இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா? வாக்காளர் பட்டியலில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களை கொண்டவர்களின் பெயர்கள் ஒரே இடத்தில் மட்டுமே இருக்க வேண்டுமா, இல்லையா? வெளிநாட்டினரின் பெயர்களை நீக்க வேண்டுமா, இல்லையா? இதில் பதில் ஆம் என்றால் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் தேர்தல் ஆணையத்தின் முயற்சியின் வெற்றிக்குப் பங்களிக்க முன்வாருங்கள் என்று தெரிவித்து உள்ளது.
- ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
- மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
பீகாரில் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தர்பங்காவில் திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றார். பேரணியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ராகுலின் கண்களில் ஒருபோதும் அச்சம் இருந்தது இல்லை.
* இந்தியா கூட்டணிக்கான அடித்தளம் பாட்னாவில் தான் இடப்பட்டது.
* பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் ஒருநாள் பறிப்பார்கள்.
* தேர்தலுக்கு முன்னதாகவே பீகாரில் உங்களின் வெற்றி உறுதியாகி உள்ளதால் பேரணியை தடுக்க பார்க்கின்றனர்.
* ராகுல் காந்தி இந்தியாவின் வழக்கறிஞராக இருக்கிறார்.
* மக்கள் சக்தியே உயர்ந்தது என காட்டியிருக்கிறார் தேஜஸ்வி யாதவ்.
* ராகுல், தேஜஸ்வியை வெல்ல முடியாததால் கொல்லைப்புறமாக நுழைய பார்க்கிறது பா.ஜ.க.
* மக்களவை தேர்தலில் 400 இடங்கள் என கனவு கண்டவர்களை 240-ல் அடக்கியது இந்தியா கூட்டணி.
* பீகாரில் பெறும் வெற்றி தான் இந்தியா கூட்டணி அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.
* மக்களின் வாக்குகளை பறிப்பவர்களை மக்கள் பறிப்பர் என்பதற்கு அடையாளம் தான் இங்கு கூடிய கூட்டம்.
* மெஜாரிட்டி மெஜாரிட்டி என கூறிக் கொண்டிருந்தவர்களை மைனாரிட்டியாக மாற்றிக்காட்டியது இந்தியா கூட்டணி.
* பீகார் சட்டசபையில் வெற்றி பெற்றதற்கான விழாவில் விரைவில் நான் பங்கேற்பேன்.
* மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை பீகார் மக்கள் நிரூபிக்க வேண்டும்.
* அரசியலுக்காக பேசுபவர் அல்ல ராகுல், உண்மையின் குரலாக இருப்பவர், அவர் கண்களில் உண்மையும் தைரியமும் உள்ளது.
* பீகாரில் பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள்.
மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில் அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தயாராகி வருகிறார். விஜய் பிரசாரம் செய்வதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரசார வேன் பஞ்சாப் மாநிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வெடுக்கும் வசதி, நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வேனில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேனுக்குள் லிப்ட் வசதியும் உள்ளது.
பிரசாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசவும், பொது மக்களை சந்திக்கவும் இந்த லிப்ட் வழியாக வேனின் மேல் பகுதிக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரசார வேன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) விஜய் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரசாரத்தை அவர் திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார். இதை உறுதிப்படுத்திய திருச்சி நிர்வாகிகள் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கு தயாராகி வருகிறார்கள்.
விஜய்யின் சுற்றுப் பயண திட்டங்களை முக்கிய நிர்வாகிகள் தயார் செய்து வருகிறார்கள். 234 தொகுதிகளையும் உள்ளடக்கி சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்யும்படி விஜய் கூறி இருக்கிறார். அதற்கு ஏற்ப பயண திட்டங்கள் தயாராகி வருகிறது.
- காங்கிரசை ஆதரிக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள்.
- கூட்டணி தொடர்பாக சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க புது வியூகத்தை வகுத்து இருக்கிறார்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் விஜய் இந்த கூட்டணிகளில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க அவர் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசிலும் கோரிக்கை உள்ளது. அதற்காக சிலர் டெல்லியிலும் காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் வாக்கு திருட்டை கண்டித்து ராகுல் காந்தி பிரசார பயணம் செய்து வருகிறார். 16 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள காங்கிரஸ் அழைத்துள்ளது.
காங்கிரசை ஆதரிக்கும் திரை பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காங்கிரசுடன் கைகோர்க்கும் முயற்சியில் விஜய் இறங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கூட்டணி தொடர்பாக சில சிறிய கட்சிகளுடன் விஜய் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் வலுவான கூட்டணியாக இருக்கும் என்று கருதுகிறார். இதற்காக ராகுலை சந்தித்து பேச விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கு ஒரு முன்னோட்டமாக ராகுலின் பீகார் பிரசார பேரணியில் கலந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
விஜய் பா.ஜ.க.வை எதிர்ப்பவர். ராகுலும் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரத்தை தான் மேற்கொண்டுள்ளார். எனவே அந்த பிரசார பேரணியில் பங்கேற்பது தமிழக வெற்றி கழகத்துக்கு பலன் அளிப்பதாகவே இருக்கும் என்று விஜய் நம்புகிறார். அது மட்டுமல்ல இந்த பேரணியில் பங்கேற்பதன் மூலம் ராகுலுடனான சந்திப்பு எளிதாகும். அதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சை தொடங்கவும் வாய்ப்பாக இருக்கும் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த நகர்வு தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று கூறும் காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த மாதிரி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் மிகப்பெரிய மோசடியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் முயற்சியை ராகுல் மேற்கொண்டுள்ளார். நாட்டை காக்கும் இந்த போராட்டத்தை ஆதரிக்கும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கும்.
இதை வைத்து கூட்டணி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.






