என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது.
- எனவே, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி கடந்த 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி மற்றும் மென்பொருள் துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, அமெரிக்காவைத் தனது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகக் கொண்டுள்ளது.
கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது. இந்தியா முழுவதும் அது 20 சதவீதம் மட்டுமே. எனவே, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது.
அமெரிக்க அரசின் இந்த வரி உயர்வுபோல் முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை. இதனால் அனைத்துத் துறைகளின் ஏற்று மதியாளர்களிடமும் அச்சம் நிலவுகிறது. கடும் சுங்கவரி உயர்வுகள் ஏற்கனவே பெறப்பட்ட பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட காரணமாகியுள்ளன. இந்த உயர்வுகள் எங்கள் தயாரிப்புகளை உலகளவில் போட்டியிட முடியாதவையாக மாற்றியுள்ளன.
இந்த கடின சூழ்நிலையில் மத்திய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை. தமிழ்நாடு அரசு தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தாலும், ஒரு மாநில அரசால் செய்யக் கூடியவற்றுக்கு வரம்புகள் உள்ளன. எனவே, மத்திய அரசு தன் பங்கை உணர்ந்து, குறிப்பாகத் துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu) நடத்திய பகுப்பாய்வுப்படி, அமெரிக்காவின் 50 சதவீத சுங்கவரி விதிப்பால் மாநிலத்தின் கணிக்கப்பட்ட இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும். அதிகம் பாதிக்கப்படுபவை துணிநூல், இயந்திரங்கள், வைரம் மற்றும் நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொழில் துறைகளே.
இந்தத் துறைகளில் வேலை இழப்பு 13 சதவீதத்திலிருந்து 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது.
கேள்விக்குறியாகும் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இந்தியாவின் துணிநூல் ஏற்றுமதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 28 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாட்டின் துணிநூல் துறை கோடிக்கணக்கான குடும்பங்களைப் பாதுகாக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், துணிநூல் தொழிலாளர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள். பல பத்தாண்டுகளாக மக்கள் வாழ்க்கையை மாற்றிய சமூக-பொருளாதாரச் சூழல் இது. திருப்பூரே கடந்த ஆண்டு சுமார் ரூ.40,000 கோடி வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டியது. ஏற்றுமதியைத் தாண்டி, இந்தத்துறை நிறைய துணைத் தொழில்களை உருவாக்குகிறது – நிறைவு, போக்குவரத்து, பொதியிடல், இயந்திர உற்பத்தி என நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கச் சுங்க வரிகள் துணிநூல் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் கவலைக்கிடமானது. 50 சதவீத சுங்கவரியில், இந்தத் துறையின் சாத்தியமான இழப்பு ஏறத்தாழ 1.62 பில்லியன் டாலர் வரை இருக்கும் என எங்கள் மதிப்பீடுகள் காட்டுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களின் வேலைகள் உடனடியாக ஆபத்தில் உள்ளன.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டதாக முதல்வர் கூறுகிறார்.
- 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில் பச்சைப்பொய்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு திரட்டுவதற்கான 922 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், தாம் கையெழுத்திட்ட அனைத்து முதலீட்டு ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுக அரசு கையெழுத்திட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வராத நிலையில், அனைத்து முதலீடுகளும் நடைமுறைக்கு வந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை விட பச்சைப் பொய் எதுவும் இருக்க முடியாது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வரப்போவதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு 9 நாள் பயணமாக சுற்றுலா சென்றிருக்கிறார். அதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "'திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம். இதன்மூலம் 32 இலட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
தாம் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் அப்பட்டமான பொய்; பொய்யைத் தவிர வேறெதுவுமில்லை.
திமுக அரசின் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டுக் கதைகள் எந்த அளவுக்கு பொய்யானவை என்பதை கடந்த சில ஆண்டுகளில் பலமுறை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், கோயபல்ஸ் கொள்கையை கடைபிடிக்கும் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே பொய்யை மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் இந்த பொய்யை நம்ப மாட்டார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலின் சிங்கப்பூர் பயணம் குறித்து கடந்த 20ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கையெழுத்திடப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும், 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 80% செயல்பாட்டுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்பின் 10 நாள்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், எவ்வாறு மீதமுள்ள 20 விழுக்காடு ஒப்பந்தங்களும் செயல்பாட்டுக்கு வந்தன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 631 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அவற்றின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு திரட்டப்படும் என்றும் திமுக அரசு அறிவித்தது. ஆனால், ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களின் பெயர்கள், விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கூட திமுக அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த விவரங்களை திமுக அரசு ரகசியமாக வைத்திருப்பதில் இருந்தே உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
80% முதலீடு வந்து விட்டது, 100% முதலீடு வந்து விட்டது என நாளொரு பொய்யையும், பொழுதொரு கதையையும் திமுக அரசு கூறிவரும் நிலையில், உண்மை நிலை என்ன? என்பதை விளக்க சில புள்ளி விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதிக முதலீடு செய்ய முன்வந்த 10 நிறுவனங்களின் பட்டியலை மட்டும் தமிழக அரசு வெளியிட்டது. அவற்றில் டாடா பவர் நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த நிறுவனம் இதுவரை ரூ.3800 கோடி மட்டுமே முதலீடு செய்துள்ளது.
அதுவும் கூட முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன் 04.07.2022ஆம் நாள் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது ஆகும். முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.70,000 கோடியில் ஒரு ரூபாய் முதலீடு கூட வரவில்லை.
அதேபோல், அதானி குழுமம் உறுதியளித்த ரூ.42,768 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ உறுதியளித்த ரூ.12,000 கோடி, ஹுண்டாய் உறுதியளித்த ரூ.6180 கோடி ஆகியவற்றிலிருந்து ஒரு பைசா கூட வரவில்லை.
வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்த நிலையில் ரூ.4000 கோடி மதிப்பில்தான் தூத்துக்குடி மகிழுந்து ஆலையை அமைத்திருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.37,538 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், அதன் பசுமை அமோனியா ஆலைக்கு அண்மையில்தான் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள நிறுவனங்கள் குறித்து எந்த விவரங்களையும் வெளியிட மு.க.ஸ்டாலின் அரசு மறுக்கிறது. திமுக அரசின் முதலீட்டு ஒப்பந்தங்கள் இந்த நிலையில் உள்ள நிலையில், அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் திமுக அரசு பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது.
திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் திமுக அரசு இப்படித்தான் பொய்யுரைத்து வந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுவார்; அடுத்த நிகழ்ச்சியில் 90% என்று கூறுவார்; இப்போது 98% என்று கூறி வருகிறார். அதேபோல்தான் இப்போது தொழில் முதலீடு தொடர்பான விவகாரங்களிலும் 77%, 80%, 100% என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் கதைகளை கூறி வருகிறார்கள். இவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை வெகுவிரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என 4 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. திமுக அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அந்த விவரங்களை வெளியிட்டு, தாங்கள் ஈர்த்த முதலீடுகளின் அளவை நிரூபிக்கலாம். ஆனால், அதை திமுக அரசு செய்யாது. காரணம் பொய் மட்டும்தான் திமுகவின் முதலீடு. திமுகவின் இந்த மோசடிகள் வெகுவிரைவில் அம்பலமாகும். அப்போது திமுக அரசை ஆட்சியிலிருந்து தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
- விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.
'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.
இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.

விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.
ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.
உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.
- உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் ரூ.37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்,.
- மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.
காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் 37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்! மகாராஷ்டிரா முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்நாவிஸ் அவர்கள், டாவோஸ் பயணத்தில் ₹15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ₹6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை! சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் நிலுவையில் உள்ளன.
மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை! 2024-இன் அமெரிக்கப் பயணத்தில் ₹7.500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், லஞ்சம். முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும்.
இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்?" என்று தெரிவித்துள்ளார்.
- டிவிஎஸ் ஆர்பிட்டர் 3.1 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
- ஓலா S1 X+ (ஜென் 3) 4 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமும் செய்துள்ளது. டிவிஎஸ் ஆர்பிட்டர் (Orbiter) என அழைக்கப்படும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் புளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் என ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் மாடல் ஓலா நிறுவனத்தின் S1 X+ மற்றும் விடா VX2 பிளஸ் ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.
டிவிஎஸ் ஆர்பிட்டர் Vs ஓலா S1 X+ Vs விடா VX2 பிளஸ்: அம்சங்கள்
டிவிஎஸ் ஆர்பிட்டர் 3.1 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 158 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 68 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
ஓலா S1 X+ (ஜென் 3) 4 kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இது 242 கிலோமீட்டர் ரேஞ்ச், 14.75 hp பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 125 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
விடா VX2 பிளஸ் 3.4 kWh பவர் யூனிட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கிலோமீட்டர் வரை செல்லும். இது வெறும் 3.1 வினாடிகளில் மணிக்கு 0-40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
டிவிஎஸ் ஆர்பிட்டர் Vs ஓலா S1 X+ Vs விடா VX2 பிளஸ்: விலை
டிவிஎஸ் ஆர்பிட்டர் ரூ.99,900 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஓலா S1 X+ ரூ.1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
விடா VX2 பிளஸ் ரூ.82,790 (எக்ஸ்-ஷோரூம்)
- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி முடிவடைந்த நிலையில், ஆர்ஆர் அணியில் இணைந்தார்.
- இவரது தலைமையில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9ஆவது இடத்தை பிடித்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட், அந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் உறுதி செய்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2025ஆம் ஆண்டுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். போட்டிக்கு முன்னதாக அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இருந்தபோதிலும் லீல் சேரில் அமர்ந்தவாறு பணியாற்றினார்.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வீரர், பயிற்சியாளர் என்ற வகையில் நீண்ட கால உறவு இருந்து வந்த நிலையில், தற்போது அந்த அணி உடனான உறவு முடிவுக்கு வருகிறது.
அணியில் தலைமை பயிற்சியாளரை தாண்டி மிகப்பெரிய பொறுப்பு வழங்க உரிமையாளர்கள் ஆஃபர் தெரிவித்த நிலையில், தற்போது மறுக்கப்பட்டதால் ராகுல் டிராவிட் இந்த முடிவை எடுதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று 9ஆவது இடத்தை பிடித்து ஏமாற்றம் அடைந்தது.
- ராமதாஸ்- அன்புமணி இடையிலான சண்டை விரைவில் தீர்ந்து விடும்.
- நம்முடைய கூட்டணிக்குதான் வருகிறார்கள் என இ.பி.எஸ். உறுதிப்பட கூறியதாக தகவல்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் வேகப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கூட்டணி பற்றி பேசும்போது, அதிமுக கூட்டணி பாமக கட்டாயம் வரும் என உறுதிப்பட தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக-வில் டாக்டர் ராமதாஸ்-க்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் அவர்களுடைய குடும்ப சண்டை. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வந்துவிடும். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நம்முடைய கூட்டணிக்குதான் வருகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியை மேலும் வலுவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் சிறிய கட்சிகள் இருந்தால், அவற்றை அதிமுக-வுடன் கொண்டு வந்து இணைக்கும் பணிகளை பாருங்கள் எனவும் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- மிகுந்த வயலன்ஸ் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக "பாகி 4" {Baaghi 4 } உருவாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷெராப் மற்றும் சஞ்சய் தத் இணைந்து நடிக்கும் மிகுந்த வயலன்ஸ் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக "பாகி 4" {Baaghi 4 } உருவாகியுள்ளது.
இந்த படத்தை சாஜித் நதியாட்வாலா எழுதி தயாரித்திருக்கிறார். படத்தை ஹர்ஷா இயக்கியுள்ளார். படத்தில் ஹர்னாஸ் சந்து, சோனம் பாஜ்வா, ஷ்ரேயாஸ் தல்பதே, சௌரப் சச்தேவா, உபேந்திர லிமாயேஉள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.டிரெய்லர் முழுவதும் ரத்தக் களரியாக அமைந்துள்ளது.
டிரெய்லரில் டைகர் வில்லன்களை அரிவாளால் நறுக்குவது, தலையை அறுப்பது, ஒருவரின் உடலை இரண்டாக வெட்டுவது போன்ற கொடூர ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சஞ்சய் தத்தும் அதேபோல் வன்முறையுடன் காட்சியளிக்கிறார்; ஒரு காட்சியில் துண்டிக்கப்பட்ட விரல்களுடன் விளையாடுகிறார்.
தொழில்நுட்பக் குழு
திரைக்கதை & உரையாடல்கள்: ரஜத் அரோரா
ஒளிப்பதிவு: ஸ்வாமி ஜே கவுடா
எடிட்டிங்: கிரண் கவுடா, நிதின் FCP
இசை: பாத்ஷா, தனிஷ்க் பாக்சீ, பயல் தேவ் உள்ளிட்ட பலர்
"பாகி 4" வரும் செப்டம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில் **விவேக் அக்னிஹோத்ரியின் "தி பெங்கால் ஃபைல்ஸ்"** படமும் வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய போட்டி காத்திருக்கிறது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
- இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதோடு இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் மோடி இன்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா புறப்பட்டார்.
சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். சீன அதிபரையும் சந்தித்துப் பேச திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை.
- நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது, தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் என் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த தேவையற்ற விவாதங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படாதா? என பலர் காத்திருப்பதால் அதற்கு இடம் தந்து விடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் வேகப்படுத்துமாறும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது "எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- திராவிட மாடல் அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஊக்கத் தொகை மட்டும் 2 ஆயிரத்து 31 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்.
- நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதே திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கங்களில் ஒன்று என்று விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.
மத்திய அரசு 2025-2026-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையைவிட விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்கும் திட்டத்தை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார்.
கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் நலம் காத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு இந்த ஆண்டில் நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545 என உயர்த்தி உள்ளார். அதே போல, பொதுரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500 என உயர்த்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 1.9.2025 முதல் 31.8.2026 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.
இதற்கான முதலமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு 29-ந்தேதி அன்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இந்த ஆண்டில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதில் சன்ன ரக நெல் 30 லட்சம் மெட்ரிக் டன். பொதுரக நெல் 12 லட்சம் மெட்ரிக் டன்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் 2024-2025 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுஉள்ளது.
முதல்-அமைச்சரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் திராவிட மாடல் அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஊக்கத் தொகை மட்டும் 2 ஆயிரத்து 31 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரும்பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற உன்னத லட்சியத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை திறந்தவெளியில் வைத்திடக் கூடாது என்பதற்காக 827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்களைக் கட்டிஉள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இருவரும் இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
- வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
மதுபான உற்பத்தியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட குழு உலகில் சிறந்த பீர் வகைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலிடம் பிடிக்கும் பீர் வகைகளுக்கு தங்க பதக்கமும், 2- வது வகைக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடிக்கும் பீருக்கு வெண்கல பதக்கம் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில் உலக பீர் வகைகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிம்பா பீருக்கு சிறந்த சுவைக்கான விருது கிடைத்துள்ளது.

சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பான சிம்பா விட்டிற்கு வெள்ளி பதக்க விருதும், சிம்பா ஸ்டவுட் பீர் வகை வெண்கல பதக்க விருதும் பெற்றுள்ளது.
இதில் சிம்பா விட் பெல்ஜியம் விட் பாணியில் தயாரிக்கப்படுகிறது. மிக குறைந்த கசப்பு தன்மையுடன் ஆரஞ்சு தோல், கொத்தமல்லி, கோதுமை மால்ட் உள்ளிட்டவைகள் அடங்கிய பொருட்களும் சிறந்த நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகிறது.
வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் கிடைத்ததன் மூலம் இந்தியாவில் மதுபான துறை வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது. உலக அளவிலும் இந்திய தயாரிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.






