என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar worship"

    • உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல்.
    • விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர்.

    நாளை ஞாயிற்றுக்கிழமை தூர்வாஷ்டமி தினமாகும். அருகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை நாளை லட்சுமி சொரூபமாக பாவித்து வணங்க வேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது. தூர்வையை ஆராதிக்கும் தினமாக நாளைய தினம் கருதப்படுகிறது. ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியை துர்வாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

    தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.

    'அருகம்புல்' என்பதன் மற்றொரு பெயர், 'தூர்வா' என்பதாகும். விநாயகர் பூஜையில் இது முக்கியமான ஒன்றாகும். தூர்வா மூன்று கத்திகளைக் கொண்டது போல் இருக்கும். இது முதன்மைக் கடவுளரான சிவன், சக்தி, விநாயகர் ஆகிய மூவரையும் குறிப்பதாகும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்தும், ஆற்றலைக் கொடுக்கும் தன்மையும் கொண்டது.

    ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்குப் பிறகு வரும் அஷ்டமி, 'தூர்வாஷ்டமி' ஆகும். தூர்வா (அருகம்புல்)வுக்கு அளிக்கப்படும் வழிபாடு தனித்துவமுடையதாகும். இதன் மூலம் ஒருவரது வாழ்வில் செழிப்பு, மன அமைதி என அனைத்தும் கிடைக்கும். வங்காளத்தில் இது, 'தூர்வாஷ்டமி ப்ராடா' என பிரபலமாகக் குறிப்பிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு வங்கம் போன்ற இடங்களில் மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தூர்வாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

    இந்த தூர்வாஷ்டமி விரதம் குறிப்பாகப் பெண்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பாகவே பெண்கள் எழுந்து குளித்து முடித்து, புதிய ஆடையணிந்து சுத்தம் செய்த அருகம்புல்லை பூஜை அறையில் தட்டில் வைத்து ஸ்வாமிக்கு மலர்களைத் தூவி ஸ்லோகம் சொல்லி வழிபடுவார்கள். சிவன் மற்றும் விநாயகரை வணங்கி வழிபடுவார்கள்.

    இந்து மதத்தில் தூர்வா (அருகல்புல்) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மகாவிஷ்ணுவின் கைகளிலிருந்து விழுந்த சில முடிகளெனவும், சமுத்திர மந்தனுக்குப் பிறகு தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை எடுத்துச் செல்கையில் ஒருசில துளிகள் தூர்வா புல் மீது விழுந்ததாகவும் நம்பப்படுகிறது. முழு மனதுடன் பூஜை செய்ய, வரும் தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெற்று வாழ்க்கையில் மன அமைதி உண்டாகி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    அனலாசுரன் என்கிற அரக்கன் பூமிக்கு வந்து முதலில் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் சாப்பிட்ட பிறகு தேவலோகம் சென்றான். தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவை தஞ்சம் அடைய, விநாயகரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியுமென அவர் கூறவும், அவ்வாறே அவர்கள் செய்தனர்.



    விநாயகப்பெருமான், அனலாசுரனை விட பிரம்மாண்ட வடிவெடுத்து, அசுரனைப் பிடித்து விழுங்கி விட, விநாயகரின் வயிறு வெப்பத்தால் நிறைந்தது. அந்த எரிச்சல் தேவர்கள் மற்றும் உலக உயிர்கள் அனைத்தின் வயிற்றிலும் எரிய ஆரம்பித்தது. விநாயகரின் உடல் குளிர்ச்சியடைந்தால்தான் அனைத்து உயிர்களும் சரியாகுமென தேவர்கள் உணர்ந்தனர். இந்திரன், சந்திரன் ஆகியோர் விநாயகரின் தலையில் அமிர்தத்தை விட்டபோதும், மகாவிஷ்ணு, விநாயகரை தாமரை மலரால் அர்ச்சித்தபோதும் பலனளிக்கவில்லை. இறுதியில் அங்கிருந்த எண்பதாயிரம் முனிவர்களும் ஒரு முடிவெடுத்தனர்.

    ஒவ்வொரு முனிவரும் 21 தூர்வா புற்களைக் கொண்டு விநாயகரின் உடலை மூட ஆரம்பித்தனர். அதிசயமாக விநாயகரின் உடலில் உஷ்ணம் மெதுவாகத் தணிந்து இயல்பு நிலைக்கு வர, அதே நேரத்தில் மற்ற உயிர்களின் வெப்ப உஷ்ணமும் சரியாகி விட்டது.

    உடல் சூட்டை தணிக்கும் குணமுடையது அருகம்புல். விநாயகருக்கு எந்த மலர் கொண்டு அர்ச்சித்தாலும், கூடவே தூர்வா புல்லினால் அர்ச்சனை செய்தால்தான் அது முழுமையடையும். அத்தகைய பெருமைகளைக் கொண்ட தூர்வா புல்லுக்கு தூர்வாஷ்டமி தினத்தன்று பூஜை செய்து மனதார வழிபடுவது நல்ல பலன்களையும் அமைதியையும் அளிக்கும்.

    • பூக்களை கிள்ளி விநாயகருக்கு அர்ச்சனை செய்தத கிளிகள்.
    • ரஜினி நிற்பது போன்று ஜெயிலர் விநாயகர் செய்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊத்துக்குளி சாலை, புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் வசித்து வரும் மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கன்ட்ரோலராக பணியாற்றி வருகிறார். மனைவி கிருத்திகாதேவி டிவைன் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் நுண்கலை பயிலகம் நடத்தி வருகிறார். மகன் தர்ஷன் 11ம் வகுப்பும், மகள் சாய்ஸ்ரீ 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் அம்முலு-ராதா என்ற 2 கிளிகளை வளர்த்து வருகின்றனர். 2 கிளிகளுக்கும் மகள் சாய்ஸ்ரீ பேசவும், பாடவும் பயிற்சி அளித்துள்ளார். 2 கிளிகளும் விநாயகர் சதுர்த்தி அன்று குடும்பத்தினர்கள் விநாயகரை வழிபாடு செய்ததைப் பார்த்து தாங்களும் பூக்களை கிள்ளி விநாயகருக்கு அர்ச்சனை செய்தது. இதைக் கண்ட குடும்ப உறுப்பினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    சாய்ஸ்ரீ கூறுகையில், கடந்த4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் இருந்த கிளியை எடுத்து வந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்தினோம். "அம்முலு" எனும் பெயர் சூட்டி வீட்டில் வளர்க்க ஆரம்பித்தேன். அதன்பின் கிளி வெளியே சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும். இன்னொரு கிளியை நான் தினமும் பள்ளிக்குச் செல்லும்போது, கணக்கம்பாளையம் அருகே உள்ள ஒரு இறைச்சிக் கடையில் கோழிகளுக்கு நடுவே இருந்ததைப் பார்த்தேன். கறிக்கடைக்காரர் கோழியை போல் கிளியையும் ஏதாவது செய்து விடுவார் என்ற அச்சத்தில் அழுது, புலம்பி எனது பெற்றோருடன் நேரில் சென்று அந்தக் கிளியை தனக்கு தருமாறு கேட்டு வாங்கி வந்தேன். இதற்கு "ராதை" எனும் பெயரை சூட்டினேன். அதன்பின் இரண்டு கிளிகளும் எங்களது வீட்டில் நண்பர்களாக வளர்ந்து வருகிறது. இரு கிளிகளுக்கும் பேசவும், பாடவும் பயிற்சியளித்துள்ளேன். விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரும் வழிபடுவதைப் பார்த்து அம்முலுவும், ராதையும் பூக்களைத் தூவி அர்ச்சனை செய்தது எங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்றார்.

    அத்திக்கடவு விநாயகர்

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறும் வகையிலும் 1,045 குளம், குட்டைகள் நிரம்பும் வகையிலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி நடந்து வருகிறது.

    திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தும் போராட்டக் குழு சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்திக்கடவு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில் ஒழலகோவில் என்ற இடத்தில், 5½ அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

    போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், இத்திட்டம் மூலம் குளம், குட்டைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து அத்திக்கடவு விநாயகர் சிலை வைத்து வழிபடுகிறோம். தற்போது 96 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சிய பணிகளும் வேகமாக முடிந்து திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்து இரண்டாவது திட்டம் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இம்முறை சிலை வைத்து பூஜை செய்தோம் என்றார்.

    ஜெயிலர் சிலை

    திருப்பூர் மாவட்டம்உ டுமலை அருகே உள்ள பூளவாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மந்திராச்சலம் - காளியம்மாள் தம்பதி. இவர்கள் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 4 மகன்கள். இதில் 3பேர் பெயிண்ட்டிங் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    4-வது மகன் ரஞ்சித் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு அதன் பிறகு சரியாக படிக்க முடியாததால் படிப்பை நிறுத்தி விட்டு தனது தந்தையுடன் இணைந்து மண்பாண்டம் செய்வதை கற்றுக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக பானை, உருவார பொம்மைகள், அகல் விளக்கு ஆகியன செய்து வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் நாடகம், நடிப்பு என உள்ளூர் விழாக்களில் ரஜினி வேடமிட்டு பங்கு பெறுவது என இருந்த இவர் ரஜினியின் தீவிர ரசிகர் எனக் கூறப்படுகிறது.

    அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை களிமண்ணில் செய்து பழகி கடந்த 2016 -ம் ஆண்டு படையப்பா சிலையை தனது திறமையால் களிமண்ணால் செய்து சென்னையில் அதனை‌ ரஜினியிடம் கொடுக்க பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. ரஜினியை சந்திக்க முயற்சித்தது பற்றி ரஞ்சித், பூளவாடி டூ போயஸ் கார்டன் ரசிகனின் பயணம் என்ற குறும்படத்தையே இயக்குமளவு சென்றுள்ளது.

    அதன்பின்னர் ஒரு வழியாக 2016-ல் முதலில் லதா ரஜினிகாந்தை சந்தித்து தான் செய்த சிலையை அவரிடம் காண்பித்து, சூப்பர் ஸ்டாரை சந்திக்க வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையாக படையப்பா சிலையை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ரஞ்சித்துக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் " வணக்கம் ரஞ்சித் நீங்க செஞ்ச என்னுடைய அருமையான பொம்மையை பார்த்தேன். என்ன ஒரு கை வண்ணம். நீங்க ரொம்ப ரொம்ப மிக பெரிய திறமைசாலி. நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நான் ஆண்டவனை வேண்டுகிறேன். நிச்சயமா நான் உங்களை ஒருநாள் சந்திக்கிறேன் நல்லா இரு கண்ணா ,நன்றி என அவர் ஆடியோ அனுப்பியிருந்தார். தற்போது விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரிய அளவு விநாயகர் சிலைகளை செய்து கொடுத்துள்ளார்.மேலும் ரஞ்சித் தனது கதாநாயகன் ரஜினி நடித்து வெளிவர உள்ள ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரஜினி நிற்பது போன்று ஜெயிலர் விநாயகர் செய்துள்ளார்.இவர் செய்துள்ள களிமண்ணால் ஆன இந்த விநாயகர் சிலை படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திதிகளுக்கு உகந்த பிள்ளையாரை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் எந்த திதியில் எந்த பிள்ளையாரை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    திதிகளுக்கு உகந்த பிள்ளையாரை வணங்கினால் நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் எந்த திதியில் எந்த பிள்ளையாரை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம்.

    பிரதமை    - பாலகணபதி
    துவிதியை    - தருண கணபதி
    திருதியை    - பக்தி கணபதி
    சதுர்த்தி    - வீர கணபதி
    பஞ்சமி    - சக்தி கணபதி
    சஷ்டி    - துவிஜ கணபதி
    சப்தமி    - சித்தி கணபதி
    அஷ்டமி    - உச்சிஷ்ட கணபதி
    நவமி    - விக்ன கணபதி
    தசமி    - ஷப்ர கணபதி
    ஏகாதசி    - ஹேரம்ப கணபதி
    துவாதசி    - லட்சுமி கணபதி
    திரயோதசி    - மகா கணபதி
    அமாவாசை    - விஜய கணபதி
    பவுர்ணமி    - கிருத்தகணபதி
    ×