என் மலர்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு முதலீடுகள்"
- தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.
- ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' முதல் கட்ட எழுச்சிப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கினார்.
இந்த எழுச்சிப்பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான இன்று திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார்.
முதலில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் உரைரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. குடிநீர் வரி, கடை வரி, குப்பை வரியிலும் முறைகேடு செய்திருக்கிறார்கள். இதை நாம் சொல்லவில்லை. அரசு நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது, அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. அதிமுக அரசு வந்தவுடன் முழு விசாரணை நடத்தி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். 3 மாதத்துக்கு முன்பாக புதிய டிஜிபிக்கள் பட்டியல் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்த பட்டியலில் இருந்து மூன்று பேரை பரிந்துரைப்பார்கள். அந்த மூவரில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்வுசெய்து டிஜிபியாக அறிவிக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்த பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் குறித்த காலத்தில் டிஜிபி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்துகொள்ளவில்லை. இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு ஒரு டிஜிபி, தீயணைப்புத் துறைக்கு ஒரு டிஜிபி என 8 டிஜிபிக்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு உள்ளது. அப்படி பொறுப்புமிக்க 8 டிஜிபிக்கள் விழாவில் பங்கேற்கவில்லை என்றால் இந்த அரசு எப்படி நடக்கும்? காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல்துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது. தகுதிவாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை.
ஸ்டாலின் இப்போது வெளிநாடு போயிருக்கிறார், இந்த முறையும் சைக்கிள் ஓட்டாமல் இருந்தால் சரி. அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை முதலீட்டாளர் மாநாடு நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு, லட்சக்கணக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10 லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
திமுக அரசும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது, அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை கொடுக்கவில்லை. தொழிற்துறை அமைச்சர் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன என்கிறார், பிறகு ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்கவில்லை..?
எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாக நினைக்கிறார் என்று அமைச்சர் ராஜா பேசுகிறார். ஆம் நான் ஸ்பூனில் சாப்பிட்டதை பெரிதாகத்தான் நினைக்கிறேன்.
ஏனென்றால் நானெல்லாம் ஒரு விவசாயி. உங்கள் அப்பா மத்திய அமைச்சர் என்பதால் நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்கிறீர்கள். உங்கள் தலைவரின் அப்பா முதல்வராக இருந்தவர். அதனால் நீங்கள் எல்லாம் தங்க ஸ்பூனிலும், வெள்ளித் தட்டிலும் சாப்பிடலாம். நான் மக்களோடு மக்களாக இருந்து வந்தவன், எனக்கு கையில் எடுத்து சாப்பிடத்தான் தெரியும்.
எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிப் பேசுவார்..? நாம் எல்லோரும் ஸ்பூனிலா சாப்பிடுகிறோம்? கையில் சாப்பிடுவதற்கே சாப்பாடு கிடைக்காமல் மக்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள், அதற்காகத்தான் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. மக்களுடைய பிரச்னை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.
மக்கள் வேலைக்காக, உணவுக்காகப் ராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அம்மா உணவகத்தை கூட மூடப்பார்க்கிறார்கள். முழுமையாக பொருட்கள் கொடுப்பதில்லை, ஊழியர் எண்ணிக்கை குறைத்தனர். இவர்களா ஏழை மக்களைக் காப்பாற்றுவார்கள்?
2011க்கு முன்பு திமுக ஆட்சியையும், 2011க்கு பின் அதிமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பாருங்கள். இன்று போதை பொருள் விற்காத இடமே இல்லை. போதை பொருள் தாராளமாகக் கிடைக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள், நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருவாகிவிட்டது.
மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். உதயநிதி போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின் இப்படி பேசுவதான் மூலம் என்ன பயன்? ஆனால், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிவிட்டனர் என்பதை முதல்வர் ஸ்டாலினே ஒப்புக்கொண்டுவிட்டார். நாங்கள் சொல்லும்போதே தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இப்போது எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக டாஸ்மாக் பணியாளரே சொல்கிறார், அந்த மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியே வசூலிக்கிறார்கள். அப்போதும் மின்சார வாரியம் கடனில்தான் தத்தளிக்கிறது. குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
ஆனால், முதல்வருக்கு அவரது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்தனை. அவர் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. 51 மாத காலத்தில் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா, புயல், வறட்சி ஆகியவற்றிலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டது அதிமுக அரசு. எம்ஜிஆர், அம்மா ஏழைகளை நேசித்தார்கள், எப்போதெல்லாம் துன்பம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து விடுபடும் அளவுக்கு ஆட்சி செய்தார்கள்.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது. தினமும் கொலை நிலவரம்தான் செய்திகளில் வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். 46 பிரச்னைகள் மக்களுக்கு இருப்பதையே முதல்வர் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா?
நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். மாணவர்கள், தொழிலாளர்கள், மக்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் அதிமுக ஆட்சியில்தான் நன்மைகள் கிடைக்கப்பெற்றது.
ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
திருப்பரங்குன்றம் தொகுதியில், 24 மணிநேரம் அரசு மருத்துவமனை, பள்ளிகள் தரம் உயர்த்துதல், முல்லைப் பெரியாறு திட்டம், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு, பொறியியல் கல்லூரி, மருத்துவ ஆராய்ச்சி நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என்று நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலைக்கு ரோப் கார் வசதி செய்வதாக திமுகவினர் சொன்னார்கள். அதை செய்யவில்லை, கிரிவலப்பாதை மேம்படுத்தப்படும் என்றார்கள், செய்யவில்லை. அவனியாபுரம் பைபாஸ் முதல் நெல்பேட்டை வரை உயர்மட்ட பைபாஸ் பாலம் கட்டப்படும் என்றார்கள், செய்யவில்லை. விரகனூர் ரவுண்டானா உயர்மட்ட பாலம் கட்டுவோம் என்று சொன்னார்கள், செய்யவில்லை. திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைவுபடுத்தி முடித்துக்கொடுக்கப்படும்.
இந்த பகுதியில் மல்லிகைப் பூ சாகுபடி அதிகம் நடக்கிறது. சில காலகட்டத்தில் மல்லிகைப் பூ விலை வீழ்ச்சி அடைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த விலை வீழ்ச்சியை சரிக்கட்ட உங்கள் ஆதரவுடன் அடுத்தாண்டு அதிமுக அரசு அமைந்ததும், இப்பகுதியில் மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்.
இவ்வாறு கூறினார்.
- உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் ரூ.37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்,.
- மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.
காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் 37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்! மகாராஷ்டிரா முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்நாவிஸ் அவர்கள், டாவோஸ் பயணத்தில் ₹15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ₹6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை! சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் நிலுவையில் உள்ளன.
மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை! 2024-இன் அமெரிக்கப் பயணத்தில் ₹7.500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், லஞ்சம். முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும்.
இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்?" என்று தெரிவித்துள்ளார்.
- மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும்.
- உள்நாட்டில் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத் தொடக்கத்திலோ இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வியடைந்து விட்ட நிலையில், மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு அவர் விடையளிக்க வேண்டும்.
எந்தவொரு மாநிலமும் தொழில் துறையில் வளர்ச்சி அடைந்தால் தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும்; வேலைவாய்ப்புகளை பெருக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஆனால், புதிதாக எந்தவொரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு முன்பாக, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதேபோன்ற திட்டங்களால் ஏற்பட்ட பயன்கள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
அதேபோல், விரைவில் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அதற்கு முந்தைய வெளிநாட்டு பயணங்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 நாள் பயணமாக துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்திய பேச்சுகளின் அடிப்படையில், லூலூ நிறுவனம் மூலம் ரூ.3500 கோடி, நோபுள் ஸ்டீல்ஸ் ரூ.1000 கோடி, ஒயிட் ஹவுஸ் ரூ.500 கோடி உட்பட மொத்தம் ரூ.6100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த முதலீடுகளின் வாயிலாக 15,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
அதன்பின் 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் மேற்கொண்ட பயணத்தில் ரூ.1342 கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அவற்றின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
2024-ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் ஸ்பெயின் நாட்டில் 14 நாள்கள் பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி, எடிபன் நிறுவனம் ரூ. 540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ. 400 கோடி என மொத்தம் ரூ. 3,440 கோடி தொழில் முதலீடுகள் கையெழுத்திடப்பட்டன. இதில் ஒரு ரூபாய் கூட இன்னும் வரவில்லை; அதனால் யாருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.ஸ்டாலின் அவர்கள் மொத்தம் 17 நாள்கள் பயணமாக சென்றார். இப்பயணத்தின் போது ரூ.7616 கோடிக்கும் முதலீடுகள் திரட்டப்பட்டதாகவும் அதன்மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், நடக்கவில்லை.
இதுவரை 4 கட்டங்களாக 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவற்றின் மூலம் மொத்தம் ரூ.18,498 கோடி முதலீடு கிடைக்கும்; ஸ்பெயின் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் முதலீடுகளின் வாயிலாக மட்டும் 28,516 பேருக்கு முதலீடு கிடைக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், முதலமைச்சர் உறுதியளித்தவாறு எதுவும் நடக்கவில்லை என்பதால், கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும் தோல்வியடைந்து விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, உள்நாட்டில் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகளின் நிலையும் திருப்தியளிப்பதாக இல்லை. அண்மையில், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு உள்பட கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம் 32.78 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் 10% கூட தொழில் திட்டங்களாக மாற்றப்படவில்லை. 5 விழுக்காடு அளவுக்குக் கூட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
மேலும் தமிழக அரசு கூறும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 10.62 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ரூ.18,498 கோடி தான். இது மொத்தமாக கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மதிப்பில் வெறும் 1.72% மட்டும் தான். தமிழக அரசு வெளியிட்ட தரவுகளின்படி பார்த்தாலும் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் படுதோல்வி என்பது உறுதியாகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை நியாயப்படுத்த வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது? முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களின் வாயிலாக எவ்வளவு முதலீடு திரட்டப்பட்டுள்ளது. இவற்றில் எவ்வளவு முதலீடுகள் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன? எவ்வளவு பேர் வேலை பெற்றுள்ளனர்? என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் வெளியிட வேண்டும். அதன்பிறகே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எந்தவொரு நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
- விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்.
- விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்; விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!
பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு "நம்பர் ஒன்" மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன.
ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ?
விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.
நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினின் சாதனை.
இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று.
இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே.
- ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப்பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணித் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேற்று பேட்டி அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்து உள்ளது. இதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.
மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
எனவே, தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






