என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
    • துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    அமெரிக்காவில் மோட்டல் விடுதி ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்தவர் 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா என அடையாளம் காணப்பட்டுள்ளார். டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் கடந்த 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

    மோட்டலில் பணியாற்றிய கோபோஸ் மார்டினெஸ் தனது பெண் சக ஊழியருடன் மோட்டலில் ஒரு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சந்திரமௌலி அங்கு சென்றார்.

    ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இருப்பினும், சந்திரமௌலி இதைப் பற்றி கோபோஸிடம் நேரடியாகச் சொல்லாமல், அருகில் இருந்த பெண் ஊழியரிடம் சொன்னபோது, கோபோஸ் மிகவும் கோபமடைந்தார். சந்திரமௌலி தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்த கோபோஸ் கத்தி ஒன்றை எடுத்து வந்து சந்திரமௌலியைத் தாக்கினார்.

    உயிருக்கு பயந்து சந்திரமௌலி மோட்டல் பார்க்கிங் இடத்திற்குள் ஓடினார். இருப்பினும் கோபோஸ் அவரைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கினார்.

    அலறல் சத்தம் கேட்டு, மோட்டல் முன்னறையில் இருந்த சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் கோபோஸ் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சந்திரமௌலியின் தலையை துண்டித்தார். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரமௌலியை கத்தியால் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ப்ளாக்மெயில்

    வாரம் வாரம் தமிழ் சினிமா துறையில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சிலவை ஹிட்டாகிரது சில திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் இன்ரு வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை இப்பதிவில் பார்ப்போம்.

    ப்ளாக்மெயில்

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம். இப்படத்தை மு மாறன் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். இது ஒரு அதிரடி கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

    பாம்

    விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் உருவாகியுள்ளது பாம் திரைப்படம். இது ஒரு நகைச்சுவையான திரைப்படமாக வெளியாகியுள்ளது.

    தணல்

    அறிமுக இயக்குநரான ரவீந்தர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் தணல் திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் அதிரடி திரில்லராக உருவாகியுள்ளது.

    யோலோ

    சாம் எஸ் இயக்கத்தில் தேவிகா, ஆகாஷ் மற்றும் கிரி த்வாரகிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ளது யோலோ திரைப்படம்.

    குமாரசம்பவம்

    பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் பாயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், பால சரவணன் , கி.எம் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டீமன் ஸ்லேயர்

    ஜபானிய மாங்கா தொடரின் அடுத்த பாகமாக டீமன் ஸ்லேயர் படத்தை உருவாக்கியுள்ளனர். அனிமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. 

    இத்திரைப்படங்களுடன் மிராய், காயல், உருட்டு உருட்டு போன்ற திரைப்படங்களும் வெளியாகியுள்ளது.

    • பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதற்கேற்ப பொது போக்குவரத்து வசதியையும் அரசு கூடுதலாக செய்து வருகிறது.

    இதையொட்டி சிறிய தெருக்களிலும் பஸ்கள் செல்வதற்காக மினி பஸ் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    தமிழக அரசின் திட்டத்தின்படி 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கும் வகையில் குறைந்தது 5 ஆயிரம் மினி பஸ்கள் இப்போது தேவைப்படுகிறது.

    இந்த சூழலில் மினி பஸ் சேவைக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குக்கிராம மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    அதன்படி மினி பஸ்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினி பஸ்களாக இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் பஸ்களை போன்று இந்த வேன்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்யும் வாகனங்களில் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம்.

    இப்போது வேன்களை மினி பஸ்களாக இயக்குவதற்காக பொதுப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ. என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

    இனி நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ. உயரமும் இருக்கலாம்.

    இந்த தளர்வு மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினி பஸ் திட்டத்தில் இணைய உதவும்.

    இதுபற்றி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர்.கஜலட்சுமி கூறுகையில், 'இதன் மூலம் இம்மாத இறுதிக்குள் 2000 வேன்கள் பொதுப்போக்குவரத்து சேவையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக இந்த வகை வேன்களின் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க அனுமதி கிடையாது.

    இது மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த புதிய திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பஸ் வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வேன்களை மினி பஸ்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் பள்ளி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை பொதுப் போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியானோரை ஏற்றி செல்லக் கூடாது. தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

    • பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம்.
    • அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார்.

    சென்னை:

    பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்ததோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.

    அடுத்த கட்டமாக அன்புமணியை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை ராமதாஸ் வகுத்துள்ளார். அரசியல் ரீதியாக அன்புமணிக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும் கள நிலவரத்தை ராமதாஸ் ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார்.

    பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம். அதில் இருந்துதான் அரசியல் இயக்கமாக பா.ம.க. உருவானது. எனவே வன்னியர்கள் ஆதரவை பெற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். வன்னியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். இதனால் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு ராமதாசுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதேநேரம் இளைய தலைமுறையினரும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்களும் அடுத்தகட்டமாக பா.ம.க.வை அன்புமணி தான் வழி நடத்த முடியும் என்று கருதுகிறார்கள். எனவே அவர்கள் மத்தியில் அன்புமணிக்கு ஆதரவு இருக்கிறது.

    இந்த சூழலில் அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார். வருகிற 14-ந்தேதி முதல் வன்னியர்கள் பகுதியில் கிராமம் கிராமமாக செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வடதமிழக மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

    இந்த மாவட்டங்களில் செல்லும்போது வன்னியர்களுக்கான தனது உழைப்பை எடுத்து சொல்லி அனுதாப அலையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

    • முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார்.
    • சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.

    ஜனாதிபதி திரௌபதி முர்மு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மந்திரிகளும் முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.

    குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் , அப் பதவிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது.

    இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர்.

    இதில், சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.

    துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதை ஒட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன் தான் வகித்து வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.  

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்டவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் பழைமையான கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து ஞானதேசிகன் எனும் இயற்பெயர் பெற்றவர்.

    இவர் இசை மீது கொண்ட இயல்பான ஆர்வம் இவரை கருணாநிதி போற்றியது போல், இசைஞானி என உலகிற்கு உயர்த்தியுள்ளது. இவர் பிறந்து வளர்ந்த கிராமிய சூழ்நிலைகளோடு கிராமப்புறப் பாடல்களைப் பாடி, புகழ் பெறத் தொடங்கியவர்.

    முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையமைத்து, பதிவு செய்து, நேரடியாக நிகழ்த்திய முதல் ஆசியர், முதல் இந்தியர், முதல் தமிழர் ஆவார் . அவர் சிம்பொனியில் திருவாசகத்தையும் இயற்றிய பெருமைக்குரியவர்.

    இசைஞானி இளையராஜா தமது இசைவாழ்வில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனைப் பணிகளுக்காக, இயல் இசை நாடக விருதைப் பெற்றுள்ளார்.

    2010-ம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 2018 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதையும் பெற்றவர்.

    ஒரு குக்கிராமத்தில் பிறந்து இசைத்திறனால் உலகப் புகழ் குவித்துள்ள இளையராஜாவின் இல்லத்திற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, 8.3.2025 அன்று லண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில் அவரைப் பாராட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, லண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று நன்றி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பிய இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்." ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை)மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்தப் பாராட்டு விழாவின் தொடக்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி-இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.

    நடிகர்கள் கமல்ஹாசன் எம்.பி., ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் முதலானோரும் பங்கேற்கிறார்கள்.

    நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிம்பொனி கலைஞர்கள் 86 பேர் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்று சென்னை வந்துள்ளனர்.

    • மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர்.
    • தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மவுலா கா சில்லாவை சேர்ந்தவர் முகமது சல்மான். இவரது மகள் ஜெனப் (வயது 3). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

    மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர். வேலை முடிந்த பிறகு பாதாள சாக்கடை குழியை மூடாமல் சென்றனர்.

    நேற்று காலை ஜைனப் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். இதனைக் கண்ட அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை பாதாள சாக்கடையில் இருந்து காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த வீடியோவை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு காயம் ஏதாவது ஏற்பட்டதா என விசாரணை நடத்தினர். மேலும் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    • சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.
    • இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று கூறினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே துப்பாக்கி வன்முறை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட அவர் மேடையில் சரிந்து விழுந்தார்.

    இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.

    சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

    இந்நிலையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் சந்தேக நபரின் இரண்டு படங்களை FBI வெளியிட்டுள்ளது.

    துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் கூரையிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து குதித்து தப்பிச் சென்றதாக FBI தெரிவித்துள்ளது.

    குற்றம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் இருந்து ஒரு உயர் சக்தி கொண்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக FBI சிறப்பு முகவர் ராபர்ட் போல்ஸ் தெரிவித்தார்.

    இது தவிர, அங்கிருந்து ஷூ ரேகைகள் மற்றும் கை ரேகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை விசாரணைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

    சந்தேக நபர் கல்லூரி பயிலும் வயதுடையவராகத் தோன்றியதாகவும், அவரது பல காட்சிகளைப் போலீசார் பெற்றுள்ளதாகவும் உட்டா டிபிஎஸ் ஆணையர் பியூ மேசன் தெரிவித்தார். 

    மேலும் புகைப்படத்தில் இருப்பவரை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 100,000 டாலர் (சுமார் 88 லட்சம் ரூபாய்) சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,240-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 142 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    • இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
    • மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும்.

    இனி பாலஸ்தீன நாடு என்ற ஒன்று இல்லை, அந்த நிலம் தங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தில் நேற்று நேதன்யாகு கையெழுத்திட்டார். மேலும் மேற்கு கரையில் மாலே அடுமிம் குடியேற்றத்தை நேரில் பார்வையிட்டார்.

    இதன் பின் பேசிய நேதன்யாகு, "எங்கள் வாக்குறுதிகள் நிறைவேறி வருகின்றன. இனி பாலஸ்தீன நாடு இல்லை. இந்த நிலம் எங்களுடையது மட்டுமே. இங்கு இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்படும். நமது கலாச்சாரம், நிலம் பாதுகாக்கப்படும். மேற்குக் கரையின் மக்கள் தொகை இரட்டிப்பாகும். இங்கு பல சிறந்த விஷயங்கள் நடக்கும்" என்று கூறினார்.

    இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.

    மேற்குக் கரையின் மாலே அடுமிம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுடன் இணைக்கும் இந்தத் திட்டம், கிழக்கு ஜெருசலேமிலிருந்து உள்ள பாலஸ்தீனியர்களிடமிருந்து மேற்குக் கரையை முற்றிலுமாகத் துண்டிக்கும்.

    சர்வதேச அழுத்தத்தால் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த E-1 திட்ட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கியது. பாலஸ்தீனியர்களுக்காக பிரத்தியேகமாக வடக்கு மற்றும் தெற்கு மேற்குக் கரைகளை இணைக்கும் சாலையை அமைக்கும் திட்டத்தை இஸ்ரேல் இதன் மூலம் தொடங்கியது. இது பாலஸ்தீனியர்கள் பிரதான நெடுஞ்சாலையில் நுழைவதைத் தடுக்கும்.

    தற்போதைய நிலவரப்படி, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள 300 சட்டவிரோத குடியிருப்புகளில் சுமார் 700,000 இஸ்ரேலிய குடியேறிகள் உள்ளனர். 

    • அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது.
    • குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம்.

    நரேந்திர மோடி 'இலவச ரீசார்ஜ் திட்டம்' பற்றிய தகவல்கள் தவறானவை என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது.

    "SaoudKiTech" என்ற யூடியூப் சேனலில் பரவும் ஒரு வீடியோ, இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மொபைல் பயனர்களும் ஒரு வருட இலவச ரீசார்ஜ் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறது. இந்த கூற்று முற்றிலும் போலியானது என்பதை பத்திரிகை தகவல் பணியகம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்ற தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.

    அரசுத் திட்டங்கள் குறித்த துல்லியமான விவரங்களுக்கு, myscheme.gov.in பார்க்குமாறு பயனர்களை பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்துகிறது. கூடுதலாக, மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செய்திகள், படங்கள் அல்லது வீடியோக்களை எக்ஸ் வழியாகவோ அல்லது +918799711259 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ நேரடியாக பத்திரிகை தகவல் பணியகத்துக்கு புகார் அளிக்கலாம்.

    குடிமக்கள் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை மட்டுமே நம்பலாம் என்றும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ஆன்லைனில் பகிர வேண்டாம் என்றும் பத்திரிகை தகவல் பணியகம் அறிவுறுத்தி உள்ளது.

    • இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது

    ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.

    இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.

    வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.  

    இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

    அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.

    இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.

    இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    ×