என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு போன்ற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பயணிகள் பெறலாம்.
    • தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரில் டிக்கெட்டுகளை பெறலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறுவதில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது.

    சிஎம்ஆர்எல் மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை பெற்று பயணிக்குமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் தகவல் வரும் வரை பயணிகள் கவுண்டரிலும் டிக்கெட்டுகளை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.
    • வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

    மத்திய அரசு, தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும், தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளது.

    இதேபோல வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10, 11-ந்தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை பரிசாக இந்த வசதி அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

    'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ஸ்ருதிஹாசன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    • இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.
    • காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    பீகார் மாநிலம் தர்பாங்காவில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பா.ஜ.கவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி கட்சியினரின் இந்த செயலுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரதமர் மோடியும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்து இருந்தார்.

    பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரசார் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

    ஏ.ஐ.வடிவிலான அந்த வீடியோவில் பிரதமரின் அரசியல் பயணத்தை, அவரது தாயார் கண்டிப்பது போன்று பிரதமர் கனவு காண்பதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பிரதமரின் தாய், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு அவமானம் என பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியதாவது:-

    காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி பிரதமரின் தாயாரை தொடர்ந்து அவமதிக்கிறது. இந்த செயல்கள் அனைத்தும் ராகுல்காந்தியின் கட்டளைப்படியே நடந்து வருகிறது.

    தொடர்ந்து பீகாரின் தாய்மார்கள், சகோதரிகளை கேலி கிண்டல் செய்து வரும் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டிக்கு வருகிற தேர்தலில் பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

    ஒரு கட்சி இந்தியாவின் ஏழைகளை இவ்வளவு வெறுப்பது உணர்ச்சியற்றது மட்டுமல்ல. வேதனையானது. காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது, நாட்டின் ஏழை மக்களை வெறுக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பா.ஜ.க.வை சேர்ந்த ஷேசாத் பூனவாலா என்பவர் கூறும்போது, காங்கிரஸ் மீண்டும் பிரதமரின் தாயாரை அவமதித்துள்ளது. இது இனி காந்தியின் காங்கிரஸ் அல்ல என தெரிவித்தார்.



    • கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில், தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்தவரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.
    • துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    அமெரிக்காவில் மோட்டல் விடுதி ஒன்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்தவர் 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா என அடையாளம் காணப்பட்டுள்ளார். டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் கடந்த 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.

    மோட்டலில் பணியாற்றிய கோபோஸ் மார்டினெஸ் தனது பெண் சக ஊழியருடன் மோட்டலில் ஒரு அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சந்திரமௌலி அங்கு சென்றார்.

    ஏற்கனவே உடைந்திருந்த சலவை இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இருப்பினும், சந்திரமௌலி இதைப் பற்றி கோபோஸிடம் நேரடியாகச் சொல்லாமல், அருகில் இருந்த பெண் ஊழியரிடம் சொன்னபோது, கோபோஸ் மிகவும் கோபமடைந்தார். சந்திரமௌலி தன்னை அவமானப்படுத்தியதாக உணர்ந்த கோபோஸ் கத்தி ஒன்றை எடுத்து வந்து சந்திரமௌலியைத் தாக்கினார்.

    உயிருக்கு பயந்து சந்திரமௌலி மோட்டல் பார்க்கிங் இடத்திற்குள் ஓடினார். இருப்பினும் கோபோஸ் அவரைத் துரத்திச் சென்று கொடூரமாகத் தாக்கினார்.

    அலறல் சத்தம் கேட்டு, மோட்டல் முன்னறையில் இருந்த சந்திரமௌலியின் மனைவியும் மகனும் விரைந்து அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் கோபோஸ் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு சந்திரமௌலியின் தலையை துண்டித்தார். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை இரண்டு முறை உதைத்து குப்பைத் தொட்டியில் வீச முயன்றார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரமௌலியை கத்தியால் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ப்ளாக்மெயில்

    வாரம் வாரம் தமிழ் சினிமா துறையில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சிலவை ஹிட்டாகிரது சில திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் இன்ரு வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை இப்பதிவில் பார்ப்போம்.

    ப்ளாக்மெயில்

    ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகாந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம். இப்படத்தை மு மாறன் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார். இது ஒரு அதிரடி கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

    பாம்

    விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் உருவாகியுள்ளது பாம் திரைப்படம். இது ஒரு நகைச்சுவையான திரைப்படமாக வெளியாகியுள்ளது.

    தணல்

    அறிமுக இயக்குநரான ரவீந்தர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் தணல் திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் அதிரடி திரில்லராக உருவாகியுள்ளது.

    யோலோ

    சாம் எஸ் இயக்கத்தில் தேவிகா, ஆகாஷ் மற்றும் கிரி த்வாரகிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ளது யோலோ திரைப்படம்.

    குமாரசம்பவம்

    பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன் தங்கராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் பாயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், பால சரவணன் , கி.எம் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டீமன் ஸ்லேயர்

    ஜபானிய மாங்கா தொடரின் அடுத்த பாகமாக டீமன் ஸ்லேயர் படத்தை உருவாக்கியுள்ளனர். அனிமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. 

    இத்திரைப்படங்களுடன் மிராய், காயல், உருட்டு உருட்டு போன்ற திரைப்படங்களும் வெளியாகியுள்ளது.

    • பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மக்கள் தொகை, வாகன நெரிசல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளதால் அதற்கேற்ப பொது போக்குவரத்து வசதியையும் அரசு கூடுதலாக செய்து வருகிறது.

    இதையொட்டி சிறிய தெருக்களிலும் பஸ்கள் செல்வதற்காக மினி பஸ் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அரசு அறிமுகம் செய்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    தமிழக அரசின் திட்டத்தின்படி 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயங்கும் வகையில் குறைந்தது 5 ஆயிரம் மினி பஸ்கள் இப்போது தேவைப்படுகிறது.

    இந்த சூழலில் மினி பஸ் சேவைக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பலரும் தங்கள் பகுதிக்கு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    குக்கிராம மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    அதன்படி மினி பஸ்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனியார் வேன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினி பஸ்களாக இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் பஸ்களை போன்று இந்த வேன்களில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்யும் வாகனங்களில் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம்.

    இப்போது வேன்களை மினி பஸ்களாக இயக்குவதற்காக பொதுப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ. என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

    இனி நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ. உயரமும், அமர்ந்து கொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ. உயரமும் இருக்கலாம்.

    இந்த தளர்வு மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினி பஸ் திட்டத்தில் இணைய உதவும்.

    இதுபற்றி போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர்.கஜலட்சுமி கூறுகையில், 'இதன் மூலம் இம்மாத இறுதிக்குள் 2000 வேன்கள் பொதுப்போக்குவரத்து சேவையில் இணையும் என எதிர்பார்க்கிறோம். முக்கியமாக இந்த வகை வேன்களின் உயரம் குறைவாக இருக்கும் என்பதால் நின்று கொண்டு பயணிக்க அனுமதி கிடையாது.

    இது மலைப் பகுதிகள் மற்றும் குறுகிய சாலைகள் கொண்ட கிராம பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இந்த புதிய திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில், வேன்களை மினி பேருந்துகளாக மாற்றி பயன்படுத்தும் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யுங்கள். இதுபற்றி விரிவான அறிக்கையை அடுத்த ஒரு மாதத்தில் சமர்பிக்க வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மினி பஸ் வசதிகள் தேவைப்படுகின்றன என்பது பற்றி விவரங்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வேன்களை மினி பஸ்களாக மாற்றும் திட்டத்தின் மூலம் பள்ளி வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவை பொதுப் போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேசமயம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகப்படியானோரை ஏற்றி செல்லக் கூடாது. தொங்கி கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

    • பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம்.
    • அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார்.

    சென்னை:

    பா.ம.க.வில் இருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவித்ததோடு பிரச்சனை முடிந்து விடவில்லை. கட்சி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.

    அடுத்த கட்டமாக அன்புமணியை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை ராமதாஸ் வகுத்துள்ளார். அரசியல் ரீதியாக அன்புமணிக்கு ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும் கள நிலவரத்தை ராமதாஸ் ரகசியமாக ஆய்வு செய்து வருகிறார்.

    பா.ம.க.வின் தாய் அமைப்பு வன்னியர் சங்கம். அதில் இருந்துதான் அரசியல் இயக்கமாக பா.ம.க. உருவானது. எனவே வன்னியர்கள் ஆதரவை பெற ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். வன்னியர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ். இதனால் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு ராமதாசுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதேநேரம் இளைய தலைமுறையினரும் புதிதாக அரசியலுக்கு வந்தவர்களும் அடுத்தகட்டமாக பா.ம.க.வை அன்புமணி தான் வழி நடத்த முடியும் என்று கருதுகிறார்கள். எனவே அவர்கள் மத்தியில் அன்புமணிக்கு ஆதரவு இருக்கிறது.

    இந்த சூழலில் அரசியல் ரீதியாக அன்புமணியை ஒரு கைபார்த்து விடுவது என்ற ரீதியில் ராமதாஸ் களம் இறங்கி உள்ளார். வருகிற 14-ந்தேதி முதல் வன்னியர்கள் பகுதியில் கிராமம் கிராமமாக செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக வடதமிழக மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார்.

    இந்த மாவட்டங்களில் செல்லும்போது வன்னியர்களுக்கான தனது உழைப்பை எடுத்து சொல்லி அனுதாப அலையை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

    • முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார்.
    • சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.

    ஜனாதிபதி திரௌபதி முர்மு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மந்திரிகளும் முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி முன்னிலையில் காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்.

    குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில் , அப் பதவிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தப்பட்டது.

    இதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிட்டனர்.

    இதில், சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.

    துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளதை ஒட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன் தான் வகித்து வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.  

    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்டவர் இளையராஜா. தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் பழைமையான கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து ஞானதேசிகன் எனும் இயற்பெயர் பெற்றவர்.

    இவர் இசை மீது கொண்ட இயல்பான ஆர்வம் இவரை கருணாநிதி போற்றியது போல், இசைஞானி என உலகிற்கு உயர்த்தியுள்ளது. இவர் பிறந்து வளர்ந்த கிராமிய சூழ்நிலைகளோடு கிராமப்புறப் பாடல்களைப் பாடி, புகழ் பெறத் தொடங்கியவர்.

    முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையமைத்து, பதிவு செய்து, நேரடியாக நிகழ்த்திய முதல் ஆசியர், முதல் இந்தியர், முதல் தமிழர் ஆவார் . அவர் சிம்பொனியில் திருவாசகத்தையும் இயற்றிய பெருமைக்குரியவர்.

    இசைஞானி இளையராஜா தமது இசைவாழ்வில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2012-ம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனைப் பணிகளுக்காக, இயல் இசை நாடக விருதைப் பெற்றுள்ளார்.

    2010-ம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 2018 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதையும் பெற்றவர்.

    ஒரு குக்கிராமத்தில் பிறந்து இசைத்திறனால் உலகப் புகழ் குவித்துள்ள இளையராஜாவின் இல்லத்திற்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, 8.3.2025 அன்று லண்டன் மாநகரில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில் அவரைப் பாராட்டி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து, லண்டன் மாநகர் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி வெற்றியுடன் சென்னை திரும்பிய நிலையில் 13.3.2025 அன்று இளையராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று நன்றி தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பிய இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை தமிழக அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்." ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை)மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்தப் பாராட்டு விழாவின் தொடக்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி-இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாத் தலைமை உரை ஆற்றுகிறார்.

    நடிகர்கள் கமல்ஹாசன் எம்.பி., ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் முதலானோரும் பங்கேற்கிறார்கள்.

    நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிம்பொனி கலைஞர்கள் 86 பேர் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்று சென்னை வந்துள்ளனர்.

    • மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர்.
    • தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மவுலா கா சில்லாவை சேர்ந்தவர் முகமது சல்மான். இவரது மகள் ஜெனப் (வயது 3). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.

    மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர். வேலை முடிந்த பிறகு பாதாள சாக்கடை குழியை மூடாமல் சென்றனர்.

    நேற்று காலை ஜைனப் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். இதனைக் கண்ட அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை பாதாள சாக்கடையில் இருந்து காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த வீடியோவை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு காயம் ஏதாவது ஏற்பட்டதா என விசாரணை நடத்தினர். மேலும் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    ×