என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • "காசா எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் காசா முழுவதும் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    "காசா பற்றி எரிகிறது" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    "பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸை தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்" என்று காட்ஸ் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னதாக காசா நகரை முழுமையாக கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.
    • ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

    சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான திரைப்படம் அட்டகாசம்.

    இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. தல போல வருமா உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி என கமெர்சியல் ரீதியாக அட்டகாசம் ரசிகர்களை கவர்ந்தது.

    இந்நிலையில், இந்தப் படம் வரும் அக்.31ஆம் தேதி ரீரிலீஸ் ஆக உள்ளதாக அதிர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐஎஃப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் படத்தை ரீரிலீஸ் செய்கிறார்.

    கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.

    தற்போது கார் ரேஸிங்கில் அஜித் பிஸியாக இருப்பதால் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் அட்டகாசம் ரீரிலீஸ் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.  

    • இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும்.
    • ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மோசடி குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2026 பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டபோது, மெஹபூபா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒரே முகவரியின் கீழ் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

    ஜெய்த்பூர் கிராம பஞ்சாயத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், வீட்டு எண் 803 இல் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும். வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தபோது பிழை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல ஜெய்த்பூருக்கு அருகிலுள்ள பன்வாரி நகரில், 996 ஆம் எண் வீட்டில் 243 பேரும், 997 ஆம் எண் வீட்டில் 185 பேரும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது

    இருப்பினும், மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஆர்.பி. விஸ்வகர்மா, வாக்காளர்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முகவரிகள் மட்டுமே தவறாக உள்ளிடப்பட்டுள்ளன என்றும், அந்தத் தவறுகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட பிழை மற்றும் கிராம மக்களின் தெளிவற்ற பதிவுகள் இதற்குக் காரணம் என்று விஸ்வகர்மா தெரிவித்தார்.

    இருப்பினும், எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

    • தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது
    • முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.

    அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் .

    டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் ஊழல் நிறைந்த செய்தித்தாள்களில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது நான் 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். அது தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.

    "நியூயார்க் டைம்ஸ் நீண்ட காலமாக என்னைப் பொய் சொல்லி அவதூறு செய்ய முடிந்தது. இது மீண்டும் நடக்காது. புளோரிடாவில் வழக்குத் தொடரப்படுகிறது" என்று அவர் கூறினார்.

    முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிறுவனங்கள் பின்னர் டிரம்புடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு கண்டன. வரவிருக்கும் டிரம்ப் நூலகத்திற்கு $15 மில்லியன் நன்கொடையாக வழங்குவதற்க ஏபிசி முன்வந்ததால் அதற்கு ஈடாக தனது வழக்கை டிரம்ப் கைவிட்டார்.  

    • காதலனை மரத்தில் கட்டி வைத்து, கும்பலில் இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
    • பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி புவனேஸ்வரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் மூன்று ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    ஒடிசாவில் 19 வயது தலித் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    பூரி மாவட்டத்தில்  கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலிஹர்சந்தி கோயில் அருகே கடந்த சனிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்தது.

    மாணவி தனது காதலனுடன் கோவிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, இளைஞர்கள் கும்பல்  அவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டுள்ளது.

    பணம் கொடுக்க மறுத்ததால், காதலனை மரத்தில் கட்டி வைத்து, கும்பலில் இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதன்பின் கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பாக மாணவி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது குற்றவாளியை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதேபோல், கடந்த வாரம் புதன்கிழமை, பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி புவனேஸ்வரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் மூன்று ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்காக ஆளும் பாஜக அரசை பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

    • உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
    • இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.

    இந்திய பொருட்களுக்கு கடந்த மாதம் 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.

    ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.

    இந்நிலையில் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நேற்று (செவ்வாய்க்கிழமை) பிராடன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு டெல்லி விரைந்து இந்திய குழுவுடன் பேச்சுவராத்தை நடத்தியது.

    இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.

     "இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிராடன் லிஞ்ச் மற்றும் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் இடையே நடந்த விவாதங்கள் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

    இருப்பினும், இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது நடைபெறவில்லை, மாறாக ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே நடந்தன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
    • முன்னதாக ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது

    ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் அங்கு 12 தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்கப் போவதாக இஸ்ரேல் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. 

    ஹவுதிக்களின் ராணுவ கட்டமைப்புடை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாகவும் ஹொடைடா துறைமுகத்தில் உள்ள மக்களும் கப்பல்களும் தங்கள் பாதுகாப்பிற்காக உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தனது எச்சரிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக கடந்த செப்டம்பர் 10 அன்று ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசி 33 பத்திரிகையாளர்களைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

    • புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.
    • உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்

    பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில் அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"எனது நண்பர் அதிபர் டிரம்ப், எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன்.

    உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்." என்று பதிவிட்டுள்ளார்.

    இந்திய பொருட்கள் மீது டிரம்ப் கடந்த மாதம் 50 சதவீதம் வரிவிதித்த பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல் நிலவி வந்த நிலையில் இதன்பின் முதல் முறையாக பிரதமர் மோடி - டிரம்ப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
    • ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது.  வங்கதேச அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.

    தொடக்க ஆட்டக்காரர்களான அடல் மற்றும் குர்பாஸ் முறையே ரன் எதுவும் எடுக்காமல் மற்றும் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் விளைவாக, வங்காளதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.
    • அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது.

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12வது சீசன் புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

    நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய போட்டியில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் மோதின.

    தமிழ் தலைவாஸ் அணி 35-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதி முடிவில், பெங்களூரு புல்ஸ் அணி 20-14 என்ற கணக்கில் வலுவான முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தியது.

    இரண்டாம் பாதி தொடங்கியதும், தமிழ் தலைவாஸ் அணி மீண்டு வந்து இறுதியில் வெற்றியை சுவைத்தது.

    இறுதியில் அர்ஜுன் தேஷ்வால்லின் 'சூப்பர் 10' தமிழ் தலைவாஸ்க்கு கை கொடுத்தது. இதன் மூலம் பெங்களூரு புல்ஸ்சின் தொடர் வெற்றிக்கு தமிழ் தலைவாஸ் புல் ஸ்டாப் வைத்துள்ளது.

    முன்னதாக நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 41-37 புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.     

    • ‘குட் பேட் அக்லி’ உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

    ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் அஜித் நாயகனாக நடித்த 'குட் பேட் அக்லி'.

    இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது.

    'குட் பேட் அக்லி' உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே இசையமைப்பாளர் இளையராஜா, தமது மூன்று திரைப்படப் பாடல்கள் படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் அதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அதை ஏற்ற நீதிபதி பாடல்களை அப்படத்தில் இடைக்காலத் தடை விதித்து இருந்தார்.

    இருப்பினும் நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா குற்றம்சாட்டினார்.

    நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் நீக்கப்படாமல் இருந்தது.

    எனவே குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளையராஜா மைத்ரி மூவீ மேக்கர்ஸ்கு அண்மையில் நோடீஸ் அனுப்பினார்.

    இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு மத்தியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.  

    • ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.

    ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியப் படைகள் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

    இந்தப் போரில் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

    சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஒரு இனக்குழுவினரை குறிவைத்து கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, அந்த இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.

    இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துகளும் இராணுவத்தின் செயல்களும் அவர்களின் இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல இஸ்ரேல் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.  

    ×