என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- இதுவரை தன்னுடைய தாமதத்திற்கான காரணத்தை அவர் விளக்கவில்லை.
- 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்'
வேலூரில் இன்று நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் தன்மீது பழி போட்டிருந்ததாக பேசியிருந்தார். கூட்டத்தில் பேசிய அவர்,
"எனக்கொரு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது யாரு தெரியுமா? முதலமைச்சர் அவர்கள்தான். 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்' என்று சொன்னார் முதலமைச்சர். அப்படியிருக்க, கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா? நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு அனுமதியோ இடமோ ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? அனைத்தையும் நீங்களே செய்துவிட்டு அப்படியே போறபோக்கில் எதாவது பேசுகிறீர்களா?" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,
"முதலமைச்சர் அவரை குற்றம் சொல்லவில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் யார் வேண்டுமானாலும் அவர் மீது குற்றம் சுமத்துவார்கள், யார் வேண்டுமானாலும் அவரைப் பழிப்பார்கள். நண்பகல் 12 மணிக்கே அங்கு வந்து கூட்டத்தில் உரையாற்றுவேன் என்று சொல்லிவிட்டு, கொளுத்தும் வெயிலில் தண்ணீரோ உணவோ இல்லாமல் மக்களை இரவு 7:30 மணி வரை காத்திருக்க வைக்கும் போது, மக்கள் இறக்கின்றனர். இதற்கு யார் காரணம்? ஏன் அவர் 12.30 மணிக்கு வரவில்லை? இதுவரை அவர் விளக்கவில்லை.
அவர் குடித்திருந்தாரா? நான் அதை கேட்க விரும்பவில்லை. ஆனால் 12 மணிக்கு வருகிறேன் எனக்கூறிவிட்டு ஏன் 7.30 மணிக்கு வந்தார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
- கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது.
- பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மாமல்லபுரம் வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளின் கண்களில் முதலில் படுவது, அங்குள்ள 100-ஆண்டிற்கு மேல் பழமையான பாரம்பரிய கலங்கரை விளக்கம் தான். இதன் மேல் ஏறி உச்சியில் நின்று, கடற்கரை நகரமான மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பாறை மற்றும் குடவரை கோவில்களின் அழகை வான்வழி பார்வையில் பார்த்து ரசிப்பார்கள்.
இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தின் பழங்காலத்து கட்டுமானத்தை பலப்படுத்த சீரமைப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான சாரம் கட்டும் பணிகள் முன்அறிவிப்பு இல்லாமல் திடீரென நேற்று நடந்ததால் அதனை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.
இந்த பராமரிப்பு பணிகள் 2-வாரத்திற்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென கலங்கரை விளக்கம் மூடப்பட்டதால் விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
- SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது.
- ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 பேரும் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.
பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக்கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அதன்படி SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும் பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் இப்போதும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
- தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு!
- தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் போர்!
வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார்.
இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டெல்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.
விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
- தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
- பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.
45 நாட்களுக்கு தற்காலிகமாக மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
ஆனாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
தலைமைச் செயலகம் வழியாக 8 பஸ்கள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பஸ்கள், ராயபுரம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 27 பஸ்கள், பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பஸ்கள் என மொத்தம் 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
இது தவிர எழும்பூர் நிலையம் வழியாக பஸ்கள் மாற்றிவிடப்பட்டுள்ளது. தீவுத்திடல், ராயபுரத்தில் இருந்து புறப்படக்கூடிய பஸ்கள் சென்ட்ரல், தலைமை செயலகம், சிந்தாதிரிப்பேட்டை வழியாக எழும்பூர் நிலையம் சென்று அங்கிருந்து அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,
"தினமும் 3 ஆயிரத்து 588 பஸ்கள் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. எழும்பூரில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில் அங்கிருந்து முக்கிய பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக எந்தெந்த பகுதிகளுக்கு சேவை தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப பஸ் வசதி அளிக்கப்படுகிறது. 101 வழித்தடத்தில் கூடுதலாக மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது" என்றார்.
- தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
- இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-
"இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல் தொகுதியாக இருப்பது கொளத்தூர் தொகுதி. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை வளர்த்து எடுத்துள்ளோம்.
ஏதோ தேர்தல் வரும் போது மட்டும் ஒன்று, இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கவில்லை. கடந்த 5 வருடமாக பார்க்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் வந்து உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து கொண்டு வருகிறோம். இங்கு பல்கலைக்கழகம் போன்று கபாலீசுவரர் கல்லூரியை உருவாக்கி உள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் உருவாக்கி உள்ளோம். கல்வி எனும் கடவுள்தான் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்களை மையப்படுத்தி மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகிற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயர் எடுத்துள்ளது.
இந்த நல்லாட்சி தொடர, நம்ம கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது.
- இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன்.
வேலூர்:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-
இப்போ நம்ம ஸ்டாலின் சார் அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்குனாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறார். அந்த கொள்ளை அடிச்சி வெச்சியிருக்குற பணத்துல ஒரு பங்கு கொடுத்து அதற்கு பெயர் கல்லாப்பெட்டி கூட்டணியை கஷ்டப்பட்டு சேர்த்து இருக்கார்.
ஆனா அவருக்கு நான் சொல்றேன். அருத பழைய கூட்டணி கணக்குகளோ, இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது. ஏன் என்றால் இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன். உங்களோடு நான் இருக்கிறேன். நம்மோடு நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். Confident ஆ இருங்க நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என்றார்.
- போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
- தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.
த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
* இப்பவும் சொல்றேன், உறுதியாக சொல்றேன், சாத்தியமா சொல்றேன், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்முடைய ஆட்சியில் நம்பர் ஒன்னாக இருக்கும்.
* சட்டம் ஒழுங்கு ரொம்ப ரொம்ப கண்டிப்பா இருக்கும்.
* அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளும் முதல் தரமா இருக்கும்.
* போட்டித்தேர்வுகளுக்குன்னு லட்சங்களை கொட்டி தனியா படிக்கணும்னு அவசியம் இருக்காது. ஏன்னா அரசு பள்ளி, கல்லூரி சிலபஸ்கள் போட்டித் தேர்வுகளை எளிமையா சந்திக்கிற மாதிரி மாற்றி அமைக்கப்படும்.
* உயர்நிலை பாடத்திட்டங்களிலேயே அடிப்படை அரசியல், சாசன சட்டம் சேர்க்கப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும்.
* அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் கதவுகள் பொருத்தப்பட்ட Rest Roomகள் அமைப்பது உறுதி செய்யப்படும்.
* போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்..
* மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம்.
* மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிரசவம் பார்க்கும் வசதியுடன அமைக்கப்படும்.
* பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
* ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ, டாக்சி மற்றும் லாரி டிரைவர்களுக்கென அவர்களின் நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.
*தென்தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.
* விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கருத்துகளை அறிந்து அவர்களுக்கான திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்.
- அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
- இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய பிளவை உருவாக்கியது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி பற்றிய கேள்விக்கு த.வெ.க. நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையே வலுவான கூட்டணி இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறினார். கடந்த ஒரு மாதத்தில் நாம் காணக்கூடியது என்னவென்றால், தி.மு.க. அமைச்சர்களும், தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும் காங்கிரசை பற்றி தவறாக பேசுகிறார்கள். இது இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய பிளவை உருவாக்கியது.
தி.மு.க.வின் வழிமுறை அவர்களின் கூட்டணி கட்சியை அச்சுறுத்துவதோடு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், கூட்டணியில் தொடர்ந்தாலும், தி.மு.க. தங்கள் கூட்டணியில் போட்டியிடும் அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் தேர்தலில் தோல்வியடைவதை உறுதி செய்யும் என்று பேசுவதை என்னால் காண முடிந்தது," என்றார்.
- முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது.
- சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும்.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டனர். முன்னதாக வரைவு வாக்களர் பட்டியல் டிச.19 அன்று வெளியிடப்பட்டது. சென்னையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து விடுப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.
அதன்படி தற்போது சென்னையின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28,30,936. இதில் ஆண்கள் 13,65,763, பெண்கள் 14,64,344 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 829 பேர். சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி பெரம்பூர் ஆகும். பெரம்பூரில் 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகத்தில் 1,16,896 வாக்களர் உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் சேவை இணையதளம் (voters.eci.gov.in) அல்லது தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் (elections.tn.gov.in) சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம்
- கார் டிரைவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த மகளால் ஆத்திரம்!
- கார் டிரைவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ததால் பழிக்கு பழி நடந்த கொலை?
சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து "கடவுள் தந்த அழகிய வீடு" என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை விஷ்ணு பிரியா. சென்னை திருவான்மியூரை சேர்ந்த சூர்ய நாராயணன் என்பவரின் மகளான நடிகை விஷ்ணு பிரியாவுக்கு ரமேஷ் கிருஷ்ணா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே, கணவர் ரமேஷ் கிருஷ்ணாவுக்கு உடல்நலம் பாதித்ததையடுத்து, சிகிச்சைக்காக தந்தையுடன் கொடைக்கானல் சென்றார். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பின்புறம் தந்தைக்கு சொந்தமான பங்களாவில் தங்கி 2018-ம் ஆண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். அப்போது கார் டிரைவர் பிரபாகரன் என்பவருடன் விஷ்ணு பிரியாவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. அந்த உறவில் இருந்து வெளிவற தந்தை சூர்ய நாராயணன் பலமுறை அறிவுறுத்தியும், டிரைவர் பிரபாகரனுடனான விஷ்ணு பிரியாவின் உறவு தொடர்ந்து நீடித்துள்ளது.
இந்தநிலையில் டிரைவர் பிரபாகரன் படுகொலை செய்யப்படார். விஷ்ணு பிரியாவின் தந்தை சூர்ய நாராயணன்தான் கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்ய நாராயணன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் சூர்ய நாராயணன் கொடைக்கானலில் உள்ள அவரது தங்கும் விடுதியுடன் கூடிய பங்களாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, சூர்ய நாராயணனின் பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் என்பவர், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்துவந்த கொடைக்கானல் போலீசார், சூர்ய நாராயணனின் பங்களாவிற்குள் செல்ல முயன்றபோது வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது.
பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றபோது, பங்களாவில் வேலை பார்த்துவந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில், நாற்காலியில் அமர்ந்தபடி உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சூர்ய நாராயணன் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மற்றும் முரளியிடம் விசாரணையை தொடங்கினர். 2 நாட்களுக்கு முன்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த 5 பேர் விடுதிக்கு தங்க வந்ததாக அவர்கள் கூறினர். மேலும், 5 பேரும் ஆவணங்கள் ஏதும் கொடுக்காமல் விடுதியில் தங்கியதும், விடுதியை விட்டு அவர்கள் 2 தினங்களாக வெளியில் எங்கும் செல்லாததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை, ஆறுமுகம் மற்றும் முரளியை கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்த அந்த கும்பல், மறு அறையில் சூர்ய நாராயணனை நாற்காலியில் அமரவைத்து, உடல் முழுவதும் டேப்பை இறுக்கமாக சுற்றியுள்ளனர். இதில் சூர்ய நாராயணன் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், 5 பேர் கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. அப்போது விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை திருடி சென்றதோடு, சூர்ய நாராயணன், ஆறுமுகம், முரளி ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இதில் நெடுநேரம் போராடி, ஆறுமுகம் கயிற்றை சிறிது கழற்றி காப்பாற்றுமாறு கூச்சலிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டிரைவர் பிரபாகரன் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கவே சூர்ய நாராயணன் கொலை நடைபெற்றிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இந்தக்கொலை பழிதீர்க்க நடத்தப்பட்டதா? இல்லை நகைக்காக நடத்தப்பட்டதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
- எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வீட்டில் உயிராய் உணர்வாய் இருக்கும் நான் எல்லாரையும் உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க ஆசைப்படுகிறேன்
தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்கள் எல்லாரையும் சந்திப்பேன்
தங்களுக் பாதுகாப்பு இல்லை என பெண்களே கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
சட்டம்-ஒழுங்கு குறித்து நான் பேசுவதால் முதல்வருக்கு சங்கடம். திமுகவை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும்.
எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.






