search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகா புயல்
    X
    மகா புயல்

    ‘மகா’ புயல் தீவிரம் அடைகிறது - தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் தீவிரம் அடைவதால் தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ‘மகா’ புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இரவு பகலாக மழை கொட்டி தீர்த்தது.

    23 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களுக்கு கூறியதாவது:-

    அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘மகா’ புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி லட்சத்தீவுக்கு மேலே திருவனந்தபுரத்தில் இருந்து 380 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயல் மாலத்தீவில் இருந்து விலகி வடக்கு வடமேற்கு திசையில் செல்கிறது. இது அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    இந்த நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அரபிக்கடலின் உள்பகுதிக்கு புயல் செல்வதால், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும். குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை தற்போது இல்லை.

    மழை நிலவரம்

    சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் படிப்படியாக மழை குறைந்து விடும். கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நாகையில் 5 செ.மீ., சென்னை விமான நிலையத்தில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழையின் தாக்கம்தான் இருக்கும். மேகங்கள் திரண்டு வருவதைப் பொறுத்து மழை பொழியும். புயலின் தாக்கம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×