search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல்படுத்திய பாடு: விமான கடத்தல் மிரட்டலால் சிக்கிய வைர வியாபாரி
    X

    காதல்படுத்திய பாடு: விமான கடத்தல் மிரட்டலால் சிக்கிய வைர வியாபாரி

    டெல்லியில் இருக்கும் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் ஆசைப்பட்டு விமானம் கடத்தப்பட்டதாக மிரட்டி கம்பி எண்ணப்போகும் வைர வியாபாரியை பற்றி அறிந்து கொள்வோமா?
    அகமதாபாத்:

    டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 9W339 என்ற விமானம் 115 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதிகாலை மூன்று மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தின் கழிவறையில் ஓர் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    விமானம் கடத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கி திருப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த விமான சிப்பந்திகள் உடனே பைலட்டிடம் விஷயத்தை கூற விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.

    இதனையடுத்து, விமானத்தை முழுவதுமாக சோதனையிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தும் வகையிலான பொருட்கள் எதையும் கண்டெடுக்கவில்லை. இதனையடுத்து, விமானிகள், சிப்பந்திகள் மற்றும் 115 பயணிகளையும் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தினர்.

    விசாரணையின் போது, விமானம் கிளம்பியதும் கழிவறையில் டிஷ்யூ பேப்பர்கள் காணமல் போனதால், புதிய டிஸ்யூ எடுக்க சிப்பந்தி சென்றுள்ளார். இடைப்பட்ட நேரத்தில், குஜராத்தை சேர்ந்த பிர்ஜு கிசோர் சல்லா(37) என்ற வைர வியாபாரி மட்டுமே கழிவறையை பயன்படுத்தியுள்ளார். புதிய டிஷ்யூ வைக்க சிப்பந்தி வரும் போது ஒரு துண்டுச்சீட்டு கிடந்துள்ளது. அந்த சீட்டில் தான் மேலே கண்ட மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தாக சிப்பந்திகள் கூறினர்.

    மிரட்டல் கடிதத்தை சல்லா தான் எடுத்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, விமான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டார்.

    கடந்த ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த இந்த சட்டப்பிரிவு விமான பணியாளர்கள், பைலட்கள், காவலாளிகள் மற்றும் பயனாளிகளை கடத்தினால் ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் திருத்தப்பட்டது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் சல்லா பிர்ஜு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் இணை ஆணையர் ஜே கே பாட் கூறுகையில், “மிரட்டல் கடிதத்தை திட்டமிட்டு சல்லா கொண்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வேறு ஏதும் சமூக விரோதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்பதை விசாரித்து வருகிறோம். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கோரிக்கை விடும் பட்சத்தில் இந்த வழக்கு அவர்கள் வசம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்” என அவர் கூறினார்.

    இந்நிலையில், அந்த விமானத்துக்கு பிர்ஜு மிரட்டல் விடுத்தது ஏன்? என்பது தொடர்பாக விசாரணையின்போது சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரியும், பெரும் கோடீஸ்வரருமான பிர்ஜுவுக்கு திருமணமாகி ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளன. தொழில் நிமித்தமாக மும்பையில் குடும்பத்துடன் வசித்துவரும் இவர் அடிக்கடி விமானம் மூலம் டெல்லிக்கு சென்று வருவதுண்டு.

    இதற்கிடையில், டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் சல்லாவுக்கு காதல் மலர்ந்துள்ளது. வேலையை காரணம் காட்டி அந்தப் பெண் மும்பைக்கு வந்து சல்லாவுடன் வாழ மறுத்துள்ளார். எனவே, மும்பை - டெல்லி இடையிலான ஜெட் ஏர்வேஸ் சேவையை நிறுத்திவிட்டால், அந்தப் பெண்ணின் வேலை பறிபோய் விடும்.

    வேறு வழியின்றி மும்பைக்கு வரும் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ்வாள் என்ற நப்பாசையில் இந்த மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றிய பிர்ஜு, விரைவில் ஆயுள் தண்டனை கைதியாக கம்பி எண்ணுவதற்கு காத்திருக்கிறார்.



    சில மாதங்களுக்கு முன்னர் விமானம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக சல்லா பிர்ஜு புகார் எழுப்பி பரபரப்பை கிளப்பியிருந்தார். ஆனால், வேகவைக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி வேகாமல் இருந்துள்ளதை சுட்டிக்காட்டிய சிப்பந்திகள் இது நாடகம் போல தெரிகிறது என கூறியிருந்தனர். அதனால் இவ்விவகாரம் பெரிய பிரச்சனை ஆகாமல் பேசி சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×