என் மலர்tooltip icon

    இந்தியா

    • கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • ராகுல் காந்தி மக்களவையில் மேற்கோள் காட்டி பேசினார்.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே தனது புத்தகத்தில் கல்வான் தாக்குதலில் மத்திய அரசின் முடிவுகள் குறித்து எழுதிய விஷயங்கள் சர்ச்சை ஆனது.

    இன்னும் வெளியிடப்படாத இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசியதால் அவையில் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் புத்தகம் எழுதுவது குறித்து புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

    புதிய விதிகளின்படி, முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் அல்லது அதிகாரிகள் ராணுவம் தொடர்பான புத்தகங்களை எழுதுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் முறையான முன்னனுமதி பெற வேண்டும்.

    புதிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது அனுமதி பெறாமல் புத்தகம் எழுதினால், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிய விதிகளில் வரையறை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    பாதுகாப்பு அமைச்சகத்தில் இது குறித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

    • 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையா சிக்கியுள்ளார்.
    • 2016-இல் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.

    பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று விசாரித்தது.

    அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்யாமல் வழக்கை விசாரிக்க முடியாது எனத் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றால், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையா, நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த டிசம்பர் மாதமே நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

    தற்போது அவருக்கு இது தொடர்பாகப் பதிலளிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் சந்திரசேகர் மற்றும் கௌதம் அங்கட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

    மல்லையா இந்தியா திரும்புவாரா என்பது குறித்த எழுத்துப்பூர்வமான பதிலை வரும் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சுமார் 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, 2016-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.

    அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.  

    • கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
    • அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

    புதுடெல்லி:

    சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பா.ஜ.க. கைப்பற்றி அசத்தியது.

    45 ஆண்டாக இடதுசாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சி முதல் முறையாக பா.ஜ.க. வசமாகியது.

    இதற்கிடையே, கேரளாவில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், கேரள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரக் குழு மற்றும் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் பிரசாரக் குழுவிற்கு ரமேஷ் சென்னிதலா தலைவராகவும், சசி தரூர் இணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தேர்தல் அறிக்கை குழுவையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    • கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மும்பையின் தர்மவீர் பகுதியில் இந்தியாவின் முதல் "மெலோடி சாலை" திறக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் முதல் இசை சாலை திறக்கப்பட்டுள்ளது. தர்மவீர் பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பிரீச் கேண்டி வரையிலான பகுதியில் வாகனங்கள் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற "ஜெய் ஹோ" பாடல் தானாகவே ஒலிக்கும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மும்பை மாநகராட்சிக்குட்பட்ட இந்த சாலையை நேற்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர். ஹங்கேரி நாட்டு நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், சாலையை இசைக்கருவிப்போல மாற்றியுள்ளது.

    எவ்வாறு சாலையில் ஒலி எழும்பும்?

    சாலையில் மின்னணு ஸ்பீக்கர்களுக்குப் பதிலாக 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மணிக்கு 70–80 கி.மீ. என்ற வேகத்தில் இந்தப் பள்ளங்களின் மீது உருண்டு செல்லும்போது, அதன் உராய்வினால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகள் ஒலி அலைகளை உருவாக்கி, எந்தப் பாடல் பொருத்தப்பட்டுள்ளதோ அப்பாடலின் குறிப்பிட்ட இசைப்பகுதி ஒலிக்கும்.

    கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் ஒரு புது அனுபவத்தை தருகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய உலகின் ஐந்தாவது நகரமாக மும்பை உள்ளது. இதேபோல ஹங்கேரி, ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த யோசனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷெவாலேவால் முன்மொழியப்பட்டது.

    • இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது.
    • கடந்த ஆண்டு 26 கடற்படை ரக விமானங்களுக்கான ஆர்டரையும் இந்திய கடற்படை வழங்கியுள்ளது.

    பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.  செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகைதரவுள்ள நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

    தயார்நிலையில் உள்ள 18 விமானங்கள் தற்போது வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலின் ஒப்புதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும். 

    இந்த விமானங்கள் வாங்குவதன்மூலம் இந்தியாவின் மொத்த ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 176-ஆக உயரும். இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு 26 கடற்படை ரக விமானங்களுக்கான ஆர்டரையும் இந்திய கடற்படை வழங்கியுள்ளது.  

    • 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'
    • தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் தாய்மொழியில் பேசுங்கள்

    இந்தியை யார்மீதும் திணிக்கக்கூடாது, அதேசமயம் கண்மூடித்தனமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பட்டமளிப்பு விழா ஒன்றில் மாணவர்களிடையே பேசிய அவர்,

    "இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணம் கொள்ளாதீர்கள், அதே சமயம், இந்தித் திணிப்பு இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்; திணிப்பை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் நீங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பினால், இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.

    அதேபோல், ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி என்றாலும், அது ஒரு சர்வதேச இணைப்பு மொழியாக இருப்பதால், மாணவர்கள் அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், அதில் புலமை பெறுங்கள். ஆனால் அதே சமயம் இந்தி மற்றும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வது எதிர்காலத்திற்கு உதவும்.

    முதலில் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள், அதன் பிறகு மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் தாத்தா பாட்டியுடனும், அண்டை வீட்டாருடனும் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ளுங்கள். அதுவே மொழியைப் பாதுகாப்பதற்கான வழி.   

    நீங்கள் ஆச்சர்யப்படலாம். நான் பொறியியல் கல்லூரிக்கு வந்துள்ளேன், பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளேன், ஆனால் தாய்மொழி குறித்துப் பேசுகிறேன் என்று. ஆம், ஒருவர் தனது தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும். முதலில் தாய்மொழி அதன் பிறகு சகோதர மொழி (அண்டை மாநில மொழிகள்), அதன்பின் பிற மொழிகள். இதுவே உங்கள் அனைவருக்கும் நான் வழங்கும் அறிவுரை. உங்களால் முடிந்தவரை அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். 

    தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் பேசும்போது உங்கள் மொழியைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். கோவில் அல்லது வழிபாட்டுத் தலங்கள் என நீங்கள் எங்கு சென்றாலும், அவர்களிடம் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள். தாய்மொழியை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அதுவே ஒரு வழி.

    இரண்டாவது உங்களால் முடிந்தவரை பல மொழிகளைக் கற்க முயற்சி செய்யுங்கள். நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல. ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், ஆங்கிலத்தைக் கற்பதற்கு முன்பாக மற்ற மொழிகளை, அதாவது இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அசாமி, பஞ்சாபி, சந்தாலி என நம்மிடம் அழகான மொழிகள் உள்ளன. நம் நாட்டில் அழகான மொழிகள் பல உள்ளன. நம்மிடம் இந்தியும் உள்ளது.

    இந்தியை நாம் எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணத்தில் நீங்கள் இருக்க வேண்டாம். இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன். 'திணிப்பு வேண்டாம்' என்று நான் எப்போதும் கூறுவேன். நான் அப்படிச் சொல்லும்போது சில நேரங்களில் குழந்தைகள் கைதட்டுகிறார்கள். பிறகு நான் சொல்கிறேன், 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'. இதுதான் என்னுடைய கருத்து. அதுதான் உங்களுடைய நிலைப்பாடாகவும்  இருக்க வேண்டும். 

    உங்களுக்கு அண்டை மாவட்டமான நெல்லூரிலிருந்து நான் வருகிறேன். தொடக்கத்தில், நான் இந்தி கற்கவில்லை. பின்னர், நான் டெல்லிக்குச் சென்றபோதுதான் இந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஏனெனில், நீங்கள் ஒரு தேசிய அளவிலான தலைவராக மாற விரும்பினால், பிற மாநிலங்களில் பணியாற்ற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தொடர விரும்பினால், நீங்கள் இந்தியையும் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். 

    பிறகு, மனிதர்கள் மற்றும் உலக விஷயங்களைப் பற்றிய உங்கள் பொது அறிவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இது எனது இரண்டாவது அறிவுரை. முதலாவது - தாய், தாய்நாடு, ஆசிரியர் மற்றும் நீங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தை மதியுங்கள்" எனப் பேசினார். 

    • மொத்தமுள்ள 88 ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் அடங்கும்.
    • 96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.

    இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில், 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது. மொத்தம் 114 விமானங்களில், 88 ஒற்றை இருக்கை கொண்டவை, 26 இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள் ஆகும்.

    18 விமானங்கள் பிரான்ஸிலிருந்து நேரடியாக வாங்கப்படுகிறது. மீதமுள்ள 96 விமானங்கள் இந்தியாவில் டாடா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.

    இந்த விமானங்களில் 30% முதல் 60% வரை இந்தியத் தயாரிப்பு பாகங்கள் மற்றும் ஆயுதங்களை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது ரபேல் விமானங்கள் காட்டிய அபார செயல்திறன் மற்றும் சீனாவின் ஏவுகணைகளை முறியடித்த விதம் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

    இந்தத் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இதற்கான இறுதி அங்கீகாரத்தை வழங்கும்.

    மேலும், பிப்ரவரி 19-20 தேதிகளில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வரும்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்.

    • திருப்பத்தில் செல்லும்போது, ​​பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது.
    • ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை ஓட்டுநர் ஏற்படுத்தியுள்ளார்

    பெங்களூருவின் தனிசந்திரா பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியதில், 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டி ஆர்ம்டு ரிசர்வ் பிரிவில் காவலராகப் பணியாற்றும் நாகனாகவுடா என்பவர் நான்கு நாட்களுக்கு முன்புதான் ராய்ச்சூரில் இருந்து தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக மாமாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகள் மற்றும் அண்ணன் மகளை அழைத்துக்கொண்டு கடைக்கு பால்வாங்கச் சென்றுள்ளார். அப்போது தனிசந்திரா காவல் குடியிருப்பு அருகே, திருப்பத்தில் செல்லும்போது, பள்ளிப் பேருந்து எதிரே வந்துள்ளது. இதனால் ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார் நாகனாகவுடா. ஆனால் பேருந்து ஓட்டுநர் ப்ரேக் போடாமல் அதேவேகத்தில் வந்து எதிரே நின்ற ஸ்கூட்டர்மீது மோதினார்.

    இதில் ஸ்கூட்டரில் முன்பகுதியில் நின்றுக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் பேருந்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தனர். மேலும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் முழுவதும் அருகிலுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் நாகனகவுடாவுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தொடர்ந்து ஹென்னூர் போக்குவரத்து போலீசார் பேருந்து ஓட்டுநர் மாரப்பாவை கைது செய்துள்ளனர். ஆட்டோ ஒன்றின் மீது மோதிவிட்டு தப்பிக்க முயன்றபோது இந்த விபத்தை அவர் ஏற்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால்இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி
    • NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

    செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

    குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.

    இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், AI தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், Wipro, TCS, Infosys, L&T போன்ற இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. NIFTY IT பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு 5% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.

    'ஆந்த்ரோபிக்' நிறுவனத்தின் புதிய கிளாவுட் AI-ன் அறிமுகத்தால், IT நிறுவனங்கள் கதிகலங்கிப் போயுள்ளன. இந்நிறுவனங்களின் Outsourcing சேவைகளை இந்த Al Chatbot-கள் மிகத் துல்லியமாகச் செய்து முடித்து, அதை நேரத்திற்குத் தகுந்தவாறு மேம்படுத்திக் கொள்வதால் மனிதர்கள் தலையீடு தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    • பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதை சுட்டிக்காட்டி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    இந்தநிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் திரண்டனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் தர்மேந்திரா யாதவ், ஜெயா பச்சன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வின் சுதாம பிரசாத் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்திய நலனில் மத்திய அரசு சரண் அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக எழுதப்பட்ட வாசகத்தை வைத்து இருந்தனர். மேலும், பிரதமர் மோடி சரண் அடைந்துவிட்டார் என்ற வாசகத்தையும் அவர்கள் கையில் வைத்து இருந்தனர்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி மேல்சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டார்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 16 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

    1980 மற்றும் 90-களில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி. அவரது குரல்வளம், தெளிவான உச்சரிப்பு மற்றும் செய்தி வழங்கும் முறைக்காக மக்களிடையே மிகவும் ஐக்கியமானவர்.

    கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சி காலத்திலிருந்து வண்ணத் தொலைக்காட்சி காலம் வரை தூர்தர்ஷனில் அவர் ஒரு முக்கிய முகமாக இருந்தார். செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி எழுத்தாளர், கவிஞர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பன்முகங்களைக் கொண்டவர் சரளா மகேஸ்வரி. மேற்கு வங்கத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 16 புத்தகங்களை எழுதியுள்ளார்.

    இந்நிலையில் 71 வயதான அவர் இன்று டெல்லியில் காலமானதாக கூறப்படுகிறது.  அவரது மறைவிற்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது.
    • பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.

    லூனா 9 (Luna 9) என்பது நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலமாகும். இது சோவியத் ஒன்றியத்தால் (தற்போதைய ரஷியாவால்) ஏவப்பட்டது. இந்த விண்கலம் 1966-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அன்று நிலவின் 'மழைக்கடல்' (Oceanus Procellarum) பகுதியில் மென்மையாகத் தரையிறங்கியது.

    நிலவின் மேற்பரப்பில் இருந்து முதன்முதலில் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது லூனா 9 விண்கலமே ஆகும். நிலவின் மேற்பரப்பு மிகவும் மென்மையானது அல்ல, அதில் விண்கலங்கள் புதையாமல் நிற்க முடியும் என்பதை நிரூபித்தது.

    இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது. இவை விரிந்து விண்கலத்தைச் சமநிலைப்படுத்த உதவின.இந்த விண்கலம் தரையிறங்கிய பின் சுமார் மூன்று நாட்களுக்கு இது பூமியுடன் தொடர்பில் இருந்து தகவல்களை வழங்கியது. அதன்பின்னர் பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.

    இந்த நிலையில், லூனா 9 விண்கலத்தை கண்டுபிடிக்க இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.

    நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் (LRO) மூலம் சந்திர மேற்பரப்பின் படங்களை ஸ்கேன் செய்ய, அவர்கள் YOLO-ETA (You-Only-Look-Once-Extraterrestrial Artifact) எனப்படும் மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தினர்.

    லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த லூயிஸ் பினால்ட் தலைமையிலான குழு, npj விண்வெளி ஆய்வு இதழில் முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவின் சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து புதிய அவதானிப்புகளைப் பயன்படுத்தி அவர்களின் மாதிரியின் கணிப்புகள் விரைவில் சோதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    ×