என் மலர்
இந்தியா
- ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாடுகிறார்.
- நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
கொல்கத்தா:
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி சிலை திறப்பு விழா நடக்கிறது. அங்குள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்லும் மெஸ்ஸி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோரை சந்திக்கின்றார்.
அதன்பின், நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியும் விளையாடுகிறார். மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது.
தொடர்ந்து, மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அருண் ஜெட்லி மைதானத்தில் மினர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
- சமீப காலமாக சசி தரூர் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார்.
- இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சசி தரூர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
- சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவிஜயபுரம்:
சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.
வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.
சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.
ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
- பனிப்பொழிவு பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ .11,718 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ், 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு ரூ.11,718.24 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது இந்தியாவில் நடத்தப்படும் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது முறையாக எடுக்கப்படுகிறது. முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஏப்ரல் மற்றும் செப்டம்பர்க்கு இடையில் நடத்தப்படும். இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு , பிப்ரவரி 2027 இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு பகுதிகளான லடாக், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் பகுதிகளில் அடுத்தாண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மேலும் அடுத்தாண்டு தொடங்கவுள்ள கணக்கெடுப்பு இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பு ஆகும். மொபைல் போன்கள் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் முழு செயல்முறையையும் நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் வெப் போர்டல் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.
- கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
- 2011-19 க்கு இடையில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய குடியுரிமை தொடர்பான நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தத் தரவை மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.
அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
2011-19 க்கு இடையில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் வளைகுடா நாடுகளில் வேலை கிடைப்பதாக போலியான வேலை வாய்ப்புகளால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு, கடத்தல் கும்பல்களுக்கு இரையாகி வருவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
- காற்றுமாசை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துகிறது இந்தியா
- உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன
பல்வேறு அமைப்புகளால் வெளியிடப்படும் உலகளாவிய காற்று தர தரவரிசை பட்டியல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்றும், உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று தர வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன எனவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த IQAir நிறுவனத்தின் உலக காற்று தர தரவரிசை, WHO -ன் உலகளாவிய காற்று தர தரவுத்தளம், யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகம் இணைந்து வெளியிடும் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் The Lancet வார இதழின் உலகளாவிய நோய் சுமை (GBD) போன்ற உலகளாவிய குறியீடுகளில் இந்தியாவின் நிலை குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் இந்த பதிலை அளித்துள்ளது சுற்றுசூழல் அமைச்சகம்.
இந்தியா, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே 12 மாசுபடுத்திகளுக்கான தேசிய சுற்றுப்புற காற்று தர தரநிலைகளை நிறுவியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு உலகளாவிய அமைப்பும் நாடுகளை தரவரிசைப்படுத்துதல் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றும், இந்தியா தேசிய தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், 131 நகரங்களில் காற்று மாசை கட்டுபடுத்தி, நகரங்களை மதிப்பிடுவதற்கும், தரவரிசைப்படுத்துவதற்கும் சொந்தமாக வருடாந்திர கணக்கெடுப்பை நடத்துவதாகவும் தெரிவித்தார்.
- ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
- பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இதற்கு எதிராகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியும் கரூர் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சென்னை ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 'அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன? சென்னை ஐகோர்ட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் சில தவறுகள் உள்ளன. சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம்.
மதுரை அமர்வு விசாரித்து வந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு பிரதான அமர்வு விசாரித்தது எப்படி? மதுரை கிளை விசாரித்து இருக்க வேண்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் பதில் அளித்துள்ளார். அது ஏன்' என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
அதற்கு தமிழக அரசு சார்பில், 'அருணா ஜெகதீசன் ஆணையத்தை தொடர அனுமதிக்க வேண்டும். அதற்கான தடையை நீக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை ஒருநபர் ஆணையம் வழங்கும். எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழக்கை எப்படி எடுத்தது என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தர உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
- இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் இளைஞர் அண்மையில் ரெயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ரெயிலில் பயணித்த சில நபர்கள் அவரைத் தவறான நோக்கத்துடன் பார்த்ததாகவும், சங்கடமான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
இதனைக் கண்ட கோலு யாதவ் உடனடியாக அப் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டினார்.
அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அந்தப் பெண்ணைத் தன்னுடன் பக்சரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வீடு திரும்பியதும், அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் இளைஞர் தெரிவித்தார்.
அவரது மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்கள், அந்த அனாதைப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
- பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 10 மணி பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
வட இந்தியாவில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் அதிக பனிப்பொழிவை எதிர்கொள்ளும் மாதங்கள் ஆகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன.
காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக மாறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அங்குள்ள பல நீர் நிலைகள் மற்றும் அருவிகள் உறைந்துபோய் பனிக்கட்டிகளாக காட்சி அளிக்கின்றன.
டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மூடுபனி போல் உள்ளதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி வாகனங்கள் செல்கின்றன.
மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், வடக்கு ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துகாணப்படுகிறது. வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் வட மாநிலங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு காலை 10 மணி பள்ளி தொடங்கும் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களில் வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது. இப்போதே வாகனங்கள் காலையில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி தான் சாலையில் பயணிக்கின்றன. இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீர் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
மக்கள் குளிர் காய்ச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொடர்ந்து உடலை சூடாக வைத்துக்கொள்ளவும், அதிகமாக வெளியில் பயணிப்பதை தவிர்க்கவும், வாகனங்களில் மெதுவாக செல்லவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வரும் நாட்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
- ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.
வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லாத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.
1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சிவராஜ் பாட்டீல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்
1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராகவும் 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகவும் சிவராஜ் பாட்டீல் பணியாற்றினார்
1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராகப் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்தில், நாடாளுமன்ற நூலகக் கட்டிடம் கட்டுதல், மக்களவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புதல் போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.
- மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.
- தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.
வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.
மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.
1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
- அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது.
- திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
புதுடெல்லி:
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது:-
ரஜினிகாந்த் அவர்களின் 75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் அவருக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.






