என் மலர்
இந்தியா

மும்பை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவியை துறந்தவர்.. யார் இந்த சிவராஜ் பாட்டீல்?
- இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
- ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.
வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லாத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.
1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சிவராஜ் பாட்டீல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்
1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.
1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை மக்களவைத் தலைவராகவும் 2004 முதல் 2008 ஆம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகவும் சிவராஜ் பாட்டீல் பணியாற்றினார்
1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராகப் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்தில், நாடாளுமன்ற நூலகக் கட்டிடம் கட்டுதல், மக்களவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புதல் போன்ற முக்கியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2004 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சிவராஜ் பாட்டீல், மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று 2008 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2010 முதல் 2015 வரை பஞ்சாப் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.






