என் மலர்tooltip icon

    இந்தியா

    • ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
    • சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?

    சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கேரள பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

    ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த ஒரு சில ஆவணங்கள் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது. 

    நீதிமன்ற ஆவணங்களின்படி, 2019 ஜூலை 19 அன்று அகற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பலகைகளின் எடை 42.8 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டது.

    மறுநாள் (ஜூலை 20, 2019) பலகைகள் உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரின் பொறுப்பில், முலாம் பூசும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இவை 39 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.

    சென்னை நிறுவனத்தில் பலகைகள் பதிவு செய்யப்பட்டபோது, அவற்றின் எடை 38.25 கிலோகிராம் எனப் பதிவாகியிருந்தது. இதன் மூலம், பயணத்தின் போது சுமார் 4.54 கிலோகிராம் தங்கம் அல்லது தங்க முலாம் பூசிய செம்பு குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.

    பலகைகள் சென்னைக்குச் செல்லும் வழியில் நேரடியாக கொண்டு செல்லப்படாமல் வழியில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

    பலகைகள் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் கோயில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்கள், பெங்களூருவில் உள்ள அய்யப்பா ஆலயம் மற்றும் கேரள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு ஒரு தனியார் பூஜைக்காகவும் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும், இந்த கவசங்களுக்கு நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

    உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி 2019 இல் அனுப்பிய மின்னஞ்சலில், தங்கத்தை ஒரு திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?. திரும்பக் கொண்டுவரப்பட்ட பலகைகள் அசல் துண்டுகள்தானா, அல்லது அதுபோன்ற பிரதிகள் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கேரள அரசு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஆறு வாரங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதன் பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
    • நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

    ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.

    மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

    கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.

    இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

    முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்கள் விற்கப்பட்டுள்ளது.
    • மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து சட்ட விரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்றனர். இதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் இதற்கு திருச்சி மற்றும் பெரம்பலூரில் செயல்பட்ட 2 தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக செயல்பட்டதாக தெரியவந்தது.

    மேலும் குறிப்பிட்ட 2 மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் இதில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் கோர்ட்டு பதிவாளர், அதிகாரிகளை நாங்களே தேர்வு செய்வோம் என்று கூறுவதில் தான் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது' என வாதிட்டார்.

    காரணம் விசாரணை அதிகாரிகளை ஆங்காங்கே இருந்து தேர்ந்தெடுத்து ஒரு குழுவை அமைப்பது நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விசாரணைக்கு தேவையான 10 அதிகாரிகளை அரசே பரிந்துரை செய்யும் என்றும், அதில் இருந்து சிறப்பு குழுவை கோர்ட்டு நியமிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என தமிழக அரசு வாதிட்டது.

    அதற்கு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் இருந்து மட்டும் ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை பொருத்தவரை முதலில் சி.பி.ஐ. விசாரணை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் கோர்ட்டு அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

    அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல்கள் விசாரணை குழு விசாரணை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணை குழுவில் இடம் பெறும் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு விசாரணை குழுவை அமைத்தால் சரியானதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை என தெரிவித்தனர்.

    மேலும் தற்போது கோர்ட்டு தேர்ந்தெடுத்து இருக்கக்கூடிய அதிகாரிகள் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்ற மாவட்டத்தில் இருந்து 200 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் உள்ள அதிகாரிகள் ஆவர். இவர்கள் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளதால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தும்.

    எனவே அரசு தரப்பில் அதிகாரிகள் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு குழுவை அமைக்கட்டும் என்றதோடு கிட்னி திருட்டு நடந்திருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள சிறந்த அதிகாரிகளின் பெயர்களை வழங்குகிறோம். அதிலிருந்து கோர்ட்டு தேர்ந்தெடுத்தால் சரியானதாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

    ஆனால் சிறுநீரக மோசடி நடைபெற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு முரண்படுகிறது என்றதோடு இந்த கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், அதே வேளையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

    • கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
    • தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.

    புதுடெல்லி:

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மூத்த வக்கீல்கள் கோபால் சுப்பிரமணியம், ஆர்யமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

    கரூரில் போலீசார் அறிவுறுத்தலின்படியே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேறினார். விஜய் அங்கு இருந்திருந்தால் நிலைமை மேலும் சிக்கல் ஆகி விடும் என்று போலீசார் தெரிவித்தனர். விஜய் தப்பி ஓடியதாக அரசு தரப்பு கூறியது முற்றிலும் தவறானது.

    கூட்ட நெரிசலுக்கு பிறகு போலீசார் கட்டாயப்படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை. ஆனால் கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு விஜய் தப்பி ஓடி விட்டதாக ஐகோர்ட்டு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க த.வெ.க. நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை.

    இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழகமோ, விஜய்யோ எதிர்மனுதாரராக இல்லாதபோது எதற்காக எங்களை பற்றி ஐகோர்ட்டு கருத்து தெரிவிக்க வேண்டும்? வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜயின் தலைமை பண்பு குறித்து எல்லாம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

    எதிர்மனுதாரராக சேர்க்காமல், விளக்கம் கேட்காமல் விஜய் குறித்து ஐகோர்ட்டு அவதூறு கருத்துக்களை கூறியுள்ளது.

    மாநில அதிகாரிகளை மட்டுமே கொண்டு சென்னை ஐகோர்ட்டு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

    தமிழ்நாடு போலீசாரை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மூலம் உண்மை வெளிவராது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை நாங்கள் எதிர்க்கவில்லை. காவல் துறை அதிகாரிகளை மட்டுமே வைத்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததை எதிர்க்கிறோம்.

    எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், "சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் அஸ்ராகார்க் சிறந்த அதிகாரி. அவர் சி.பி.ஐ.யில் பணியாற்றி உள்ளார். அவரை பரிந்துரைத்தது ஐகோர்ட்டுதான்.

    விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம். 12 மணிக்கு வருவதாக அறிவித்து விட்டு இரவு 7 மணிக்கு விஜய் வந்தார். 41 பேர் உயிரிழந்ததால்தான் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டு உள்ளது" என்றனர்.

    அவர்களிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். அதன் விவரம் வருமாறு:-

    ஐகோர்ட் மதுரை கிளை அமர்வு வரம்புக்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு எப்படி விசாரிக்கலாம். பிரசாரம் தொடர்பான நெறிமுறைகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எப்படி உத்தரவிடப்பட்டது.

    தேர்தல் பிரசாரம், ரோடு ஷோ, வழிகாட்டுதல்களுக்கான சென்னை ஐகோர்ட்டில் கிரிமினல் வழக்கு ஆனது எப்படி? ஒரே நாளில் சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது எப்படி? பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்று சந்திக்கவில்லை என்றால் என்ன? கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக விசாரணைக்கு ஏற்றது ஏன்?

    உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்தது ஏன்? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    தொடர்ந்து இந்த வழக்கில் விவாதம் நடைபெற்றது.

    • ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
    • காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்

    ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.

    ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறை.

    டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை அவர் தொடங்கி உள்ளார்.

    இன்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆப்கன் அமைச்சர் முத்தாகி கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதில் பேசிய ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

    எங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு உங்கள் தேசிய வளர்ச்சிக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கிறது.

    அதை மேம்படுத்துவதற்காக, காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்ப பணியகத்தை இந்திய தூதரக அந்தஸ்துக்கு மேம்படுத்துவதை இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த நட்பை உறுதிப்படுத்துவதிலும், நமது உறவுகளை முன்னேற்றுவதிலும் உங்கள் வருகை ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.

    கடந்த மாதம் ஆப்கனில் பூகம்பம் ஏற்பட்ட க சில மணி நேரங்களுக்குள் போது இந்தியா நிவாரணப் பொருட்கள் பூகம்பம் ஏற்பட்ட இடங்களுக்கு வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம்.

    இரு நாடுகளும் எதிர்கொள்ளும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலால் நமது வளர்ச்சி ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்.

    இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எங்களுடன் நீங்கள் காட்டிய ஒற்றுமை குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தானில் சுரங்க வாய்ப்புகளை ஆராய இந்திய நிறுவனங்களுக்கு நீங்கள் விடுத்த அழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. இரு நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும் நாம் விவாதிப்போம். மேலும் காபூலுக்கும் புது டெல்லிக்கும் இடையே கூடுதல் விமானங்கள் தொடங்கப்பட்டதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே, கடந்த 2021 இல் தாலிபான் ஆட்சிக்கு வந்த பின் மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட உள்ளது கவனம் பெற்றுள்ளது 

    • ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார்.
    • வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான்.

    இவர் பஞ்சாபின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் சிறந்த உடற்பயிற்சி நிபுணரும் ஆவார். சொந்தமாக உடற்பயிற்சி கூடம் வைத்து உடற்பயிற்சி நிபுணராக வாழ்க்கையை தொடங்கிய இவர் கடந்த 2009-ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் வென்றார், மிஸ்டர் ஆசியா போட்டியில் 2-ம் இடமும் பிடித்தார்.

    2013-ம் ஆண்டு அர்னால்ட் பாடிபில்டிங் போட்டிக்காக ஸ்பெயின் சென்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்தார். அர்னால்ட் அவர் உடலை பார்த்து வியந்து அவரை பாராட்டி பேசினார். அர்னால்டின் அந்த பாராட்டு வரீந்தர் சிங்கை இந்தியாவின் கொண்டாடப்படும் நட்சத்திரமாக ஆக்கியது. அதன் பிறகு இந்தியாவில் அவருக்கு படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

    2012-ம் ஆண்டு பஞ்சாபி மொழியில் கபடி ஒன்ஸ் அகைய்ன் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் 2014-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகமானார். அதன் பிறகே பிரபல நட்சத்திரமானார்.

    ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார். இறுதியாக அவர் சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்த டைகர் 3 படம் 2023-ம் ஆண்டு வெளியானது.

    உடற்பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் அசைவ உணவே சாப்பிடுவார்கள். ஆனால் வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார். சைவ உணவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிவந்தார்.

    இந்த நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரது கையில் (பைசெப்) சிறு காயம் ஏற்பட்டது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அறுவை சிசிச்சை செய்து கொள்ள அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    போலி மருந்துகள் அதிகரித்து வருகின்றன. எது உண்மையானது எது போலியானது என்று தெரியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து வகையான மருந்துகளிலும் கியூஆர் குறியீடுகளை அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த முறையில் கியூஆர் குறியீடு மற்றும் பார் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    நற்பெயரைக் கொண்ட மற்றும் நன்றாக விற்பனையாகும் முன்னுரிமை பிராண்ட் மருந்துகள், குறியீடுகள் மற்றும் பார் குறியீடுகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.

    வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    ஒரு மருந்தை ஸ்கேன் செய்தால் தனித்துவமான தயாரிப்பு அடையாளக் குறியீடு மருந்தின் பொதுவான பெயர்கள் பிராண்ட் பெயர் உற்பத்தி செய்யும் பகுதி, தேதி, தொகுதி எண் போன்ற விவரங்கள் தெரியும்.

    மருந்து பேக்கேஜிங்கில் பார் குறியீடு அல்லது கியூஆர் குறியீடு இல்லாவிட்டாலும் அல்லது ஸ்கேன் செய்த பிறகு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் அது போலியானது என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சிறுவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
    • மேல்நிலைப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    'போக்சோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனுக்கு ஜாமின் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவன் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 376-வது பிரிவின்கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

    இம்மனு, நீதிபதிகள் சஞ்சய் குமார், அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    சிறுவனுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பரபரப்பு கருத்துகளையும் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு 9-ம் வகுப்பில் இருந்து இல்லாமல், மிக இளம் வயதில் இருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மேல்நிலைப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

    அப்போதுதான், பருவம் வந்த பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து இளம் பருவத்தினர் தெரிந்து கொள்ள முடியும். அதுதொடர்பாக செலுத்த வேண்டிய கவனமும், பின்பற்ற வேண்டிய எச்சரிக்கையும் தெரிய வரும். உரிய அதிகாரிகள், இதில் தங்களது மனதை செலுத்தி, சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    • தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
    • வெடிவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    சிலர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்தது.

    வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டார்ஜிலிங்கில் கடந்த வாரம் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது.
    • இந்த நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக நக்ரகட்டா பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் இர்பான் மோல்லா சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததால் இர்பானால் அங்கு செல்ல முடியவில்லை.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கயிறு கட்டி ஜிப்லைன் போன்று அமைத்து இர்பான் அங்கு சென்றார். அதன்பின் காயமடைந்திருந்த மக்களுக்கு மருத்துவம் செய்தார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது உயிரை துச்சமென மதித்து ஜிப்லைனில் சென்று மருத்துவம் பார்த்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.
    • மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது என ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மற்றும் வெவ்வேறு இருமல் மருந்தை உட்கொண்டு பாஜக ஆளும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 22 குழந்தைகள் உயிரிழந்தனர்.

    ம.பி. காவல்துறை அமைத்த சிறப்பு விசாரணைக் குழு நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை சென்னையில் கைது செய்தது.

    இந்நிலையில் நாக்பூரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், "எங்கள் காவல்துறை தமிழ்நாட்டில் கைது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு எதிர்பார்க்கும் விதத்தில் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

    மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒரு முறையான அறிக்கையை அளிக்க வேண்டும். மருந்து தயாரிக்கப்பட்ட இடத்தில் உள்ள அரசு உறுதியான மற்றும் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே  தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருந்தில் டையெத்திலீன் கிளைக்கால் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மருந்துக்குத் தடை விதித்ததாகத் தெரிவித்தார்.

    மேலும், ஆரம்பத்தில் மத்திய அரசு மற்றும் ம.பி. அரசின் சோதனைகளில் மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசுதான் நச்சுத்தன்மையை உறுதி செய்து இரு மாநில அரசுகளுக்கும் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

    மேலும், அலட்சியமாக இருந்ததாகக் கூறி, இரண்டு மூத்த மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    அத்துடன் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் ஆக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ம.சுப்ரமணியன் கேட்டுக்கொண்டார்.  

    • "இது பிரதமர் நேதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்" என்று மோடி குறிப்பிட்டார்.
    • டிரம்ப்-ஐ புகழ பிரதமர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல.

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுள்ள நிலையில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அதில், "இது பிரதமர் நேதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்" என்று மோடி குறிப்பிட்டார்.

    இந்நிலையில் இதை விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில்," காசா தொடர்பான புதிய முன்னேற்றங்களை பிரதமர் வரவேற்று அதிபர் டிரம்பைப் பாராட்டியுள்ளார். அவ்வாறு செய்ய பிரதமர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல.

    ஆனால், கடந்த இருபது மாதங்களாக காசாவில் இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுக்கு மோடி அளித்துள்ள தகுதியற்ற பாராட்டு அதிர்ச்சியளிப்பதும் வெட்கக்கேடானதும் ஆகும். மேலும் தார்மீக ரீதியாக கொடூரமான ஒரு விஷயம்.

    1988 நவம்பரில் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட, இப்போது 150க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசின் எதிர்காலம் குறித்தும் மோடி முழுமையான மௌனம் காத்து வருகிறார்.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்ந்து விரிவடைவது குறித்தும் மோடி எதுவும் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.   

    ×