என் மலர்
சேலம்
- சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது.
- லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன் விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார்.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மல்லூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஜெகநாத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த சத்தியபிரவீன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாணவர் சரண் காயமின்றி தப்பினார்.
விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
- காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
- சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சேலம்:
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.
மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.
காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.
இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.
- பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம்.
- செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம்.
சேலம்:
தமிழக அரசின் உத்தரவின் பேரில் பஞ்சு மிட்டாய்கள் விற்கப்படும் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் உணவு பொருளுக்கு அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? என்றும் அனுமதிக்கப்பட்ட நிறமிகள் குறிப்பிட்ட அளவு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மால், பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
2-வது நாளாக இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சு மிட்டாய் கடைகள் மற்றும் ரோட்டோரம் பஞ்சு மிட்டாய் விற்பவர்களிடம் மாதிரிகளை எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் 8 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஆய்வு2-வது நாளாக இன்றும் நடைபெறுவதாகவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெிவித்தனர்.
பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம் இருக்கிறது. சிறுநீர் பிரச்சினைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது.
செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
- பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.
தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.
முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.
சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
- பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.
சேலம்:
சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.
இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.
இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.
மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.
இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.
மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
- டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3-ந் தேதி முதல் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த 3-ந் தேதி முதல் நேற்று வரை பாசனத்திற்கு 3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டது.
அதன்பிறகு மாலை 6 மணியுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்று 66.52 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 66.21 அடியாக சரிந்தது. அணையில் 29.53 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
- தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது.
- மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வியாபாரிகள், தொழில் முனைவோர், நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்கள். கோவையில் நேற்று கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இன்று சேலம் 5 ரோடு ஜென்னிஸ் கேட்வே ஓட்டலில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட அறிக்கை தயாரிக்கும் குழுவினர் பங்கேற்றனர்.

கருத்து கேட்பு கூட்டத்தில் நாமக்கல் முட்டை கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் உரிமையாளர்கள் சங்கம் , துணி ஏற்றுமதியாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், கைத்தறி உற்பத்தியாளர்கள், தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள், ட்ரெய்லர் உரிமையாளர்கள், மோட்டார் மெக்கானிக் சங்கம், பழங்குடியினர் மக்கள் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், நெசவாளர் சங்கம், நூல் உற்பத்தியாளர் சங்கம், மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை மனுவாக வழங்கினர். அப்போது முக்கிய கருத்துக்களை அவர்கள் நேரடியாக நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக குழுவினர் உறுதி அளித்தனர்.
தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து நேரடியாக பெற்று தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்வதுடன் சில முக்கியமானவற்றை நேரடியாக எங்களிடம் தெரிவிக்கலாம்.

தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. வெள்ள நிவாரணம் கொடுக்க மறுத்து வருகிறது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல குழப்பங்கள் அதில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை. கோரிக்கையை காது கொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.
மத்திய அரசு நாம் சொல்வதை கேட்கும் அரசாக அமைய வேண்டும். மக்களை ஒருங்கிணைத்து அழைத்து செல்லும் அரசாக அது இருக்க வேண்டும். ஒற்றுமையான மத்திய அரசாக , வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாங்கமாக உரிமைகளை மதிக்கும் அரசாக இருக்க வேண்டும். மக்களையும், மொழி உணர்வையும் மதிக்கும் அரசாக உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் இந்த பாராளுமன்ற தேர்தலை அனைவரும் இணைந்து எதிர் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
- கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.
- ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று (10-02-2024) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:
"கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 11 அன்று தர்மபுரி மாவட்டத்தை வந்தடைய இருக்கிறது. பின்னர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, காவேரிப்பட்டிணம் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பிப் 19 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. முன்னதாக, சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இதோடு, சிவ யாத்திரை என்னும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். இந்த யாத்திரை பிப் 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.
இதை போலவே, தர்மபுரியில் பாரதி புரம், சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரபாய் திருமண மண்டபத்திலும், ஓசூரில் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது.
- தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது.
சேலம்:
சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி பெரிய எழுச்சியை கண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தேசியமும், தெய்வீகமும் இனி இந்த நாட்டுக்கு தேவை என்று நினைக்கிறார்கள். கடவுளுக்கு பயப்படுபவர்கள் தான் நியாயமாக இருக்க முடியும், கடவுளை நம்புகிறவன் நியாயமாக இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வளவு காலமும் சமூக நீதி, சமுதாய மாற்றம் என்று பேசி அந்தந்த குடும்பத்தினர் தான் வளர்ச்சி பெற்றனர். ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதாக கூறினர். ஆனால் அவர்கள் குடும்பத்தை மட்டும் தான் பார்த்து கொண்டார்கள். எங்கேயும் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் அமைக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சி தலைமையில் இருக்கும் குடும்பம் வாரிசு அரசியல் செய்யவில்லை. வாரிசுகள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் வாரிசுககள் தலைமைக்கு வரக்கூடாது என்பது பா.ஜ.க.வின் திட்டம். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசும் போது கட்சியை விட, இயக்கத்தை விட தேசம் தான் முக்கியம் என பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.
வருகிற 11-ந் தேதி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா 200-வது ஜென்ம ஜென்மத்தில் யாத்திரையில் கலந்து கொள்வதற்காகவும் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவை சந்திக்கவும் மாவட்ட தலைவர்களை சந்திக்கவும் தமிழகம் வருகிறார். பாரத பிரதமர் வருகிற 25-ந் தேதி என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பல்லடத்திற்கு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு எவ்வளவு உதவி செய்தது என்று அவர் முதலமைச்சராக இருந்த போதும் எதிர்கட்சி தலைவராக இருந்த போது கூறி உள்ளார். அவர் கேட்ட போதெல்லாம் மத்திய அரசு நிதி கொடுத்தது. இதனை சட்டமன்றம் மற்றும் வெளியிலும் அவர் சொல்லி உள்ளார். எங்கள் இயக்கத்தால் அவர் பயன்பெற்றுள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக அவரை போல லாவனி கச்சோரி நடத்த நாங்கள் தயாராக இல்லை.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பவர் என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு,
உடல் நலம் சரியில்லை என்றால் லேகியம் வாங்குவார்கள், நோய் பிடித்தவர்கள், ஊழல் வாதிகளை திருத்துவதற்கும், குடும்ப ஆட்சி நடத்துபவர்களை திருத்துவதற்கும் அவர் லேகியம் விற்கிறார். அந்த நோய் தமிழகத்தில் வேகமாக வளர்ந்திருக்கிறது, அரசை நடத்துபவர்கள் மத்தியில் அந்த நோய் இருக்கிறது. அந்த நோயை தீர்க்க எங்கள் தலைவர் லேகியம் விற்பது உண்மை தான், ஊழல் நோயை ஒழிக்க அதனை வேரறுக்க லேகியம் விற்கிறார்.
தி.மு.க.வினரிடம் வாய் சவடால் உள்ளது. ஆனால் உள்ளூர பயந்து தான் உள்ளனர். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துள்ளது. 95 சதவீத மக்கள் பா.ஜ.க.வுக்கு அதரவாக உள்ளனர். கருத்து கணிப்புகளை விட மக்கள் மன நிலையே தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
- பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் தங்கவேல் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார் வந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கணிப்பொறி, உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்தது நிரூபணமானது. தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பதிவாளர் தங்கவேல் மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்திட துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர்.
- வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ராசிபுரம் பிரிவு ரோட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வந்தார்.
அப்போது அங்கு இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சீட் பகுதியில் பாம்பு சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர். பாம்பை மீட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார். பின்னர் உயிருடன் பிடித்த பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இருசக்கர வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.






