search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வட மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் பூண்டு விலை 500 ரூபாயாக உயர்வு
    X

    வட மாநிலங்களில் விளைச்சல் குறைந்ததால் பூண்டு விலை 500 ரூபாயாக உயர்வு

    • அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.

    சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×