என் மலர்
மதுரை
- 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் நடந்தது.
- பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் புறவழிச் சாலையாக இல்லாமல் ஊரின் வழியாக 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் விபத்துகள் நடைபெறும். எனவே சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆலம்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவரும், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க.வினரும் சாலை மறியலில் பங்கேற்றனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மறியல் நடந்தது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரு புறங்களிலும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களை கைது செய்தனர். பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதன் பின் போக்குவரத்து சீரானது.
இதற்கிடையே 4 வழிச்சாலையில் அரசு அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையிலும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 85 பேர் மீதும், ஒரு பெண் மீதும் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே மட்டும் எடுக்கப்பட வேண்டும்.
- எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மதுரை:
புதுக்கோட்டை அருகே சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜகபர் அலி கடந்த 17-ந்தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் விதிகளை பின்பற்றி பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை. எனவே உடலை தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யவும், எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரி அவரது மனைவி மரியம், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரர் கணவர் உடலை எக்ஸ்ரே எடுக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் வக்கீல் ஆஜராகி, எக்ஸ்ரே எடுப்பது கூடுதல் ஆவணமாக அமையும் என தெரிவித்தார். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, ஜகபர் அலியின் உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்து கொள்ளலாம் என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் கணவர் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது உடலை தோண்டி எக்ஸ்ரே எடுக்க தேவையான வசதிகள் செய்ய வேண்டும். திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய போலீஸ் பாதுகாப்புடன், ஜகபர் அலியின் உடல் புதைக்கப்பட்ட இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே மட்டும் எடுக்கப்பட வேண்டும். எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்படவில்லை.
- உங்களுக்காக, உங்கள் குரலுக்காக பிரதமர் மோடி உங்களுடன் இருந்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாராட்டு விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
* தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை பிரதமர் மோடி ஒருபோதும் கொண்டு வரமாட்டார்.
* மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டம் வேண்டாம் என்றபோது, 2 நாட்களில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் டெல்லிக்கு சென்று திட்டத்தை நிறுத்துவிட்டார்கள்.
* அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் அங்குள்ள செயலாளர்களுக்கு அரிட்டாபட்டி எப்படிப்பட்ட பகுதி என்று தெரியாது. தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை.
* மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியபோது. அப்போது 4,890 ஏக்கரில் வெறும் 477 ஏக்கர் நிலம்தான் பல்லுயிர் பூங்காவாக இருக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மற்றவை பற்றி தெரிவிக்கவில்லை. கோவில், ஒருபோக விவசாயம் குறித்து யாரும் சொல்லவில்லை. பெரியாறு அணையில் இருந்து வரும் நீர்ப்பாசனம் பற்றி யாரும் சொல்லவில்லை.
* அதனைத்தொடர்ந்து டெண்டர் விடப்படுகிறது. முதல்முறை விடப்பட்ட டெண்டரில் யாரும் டெண்டர் கோரவில்லை. பின்னர் 2024 ஏப்ரல் மாதம் டெண்டர் விடுகிறார்கள். அப்போது மாநில அரசுக்கு தெரியும்.
* நவம்பர்- டிசம்பர் மாதம் டெண்டர் எடுத்த பின்னர்தான் உங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும். எல்லோருக்கும் தெரியும்.
* மத்திய அரசில் ஒரு திட்டத்தை ரத்து செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது. பல இடங்களுக்கு போக வேண்டும். அமைச்சரவை ஒப்புதல் வாங்க வேண்டும்.
* ஊர் அம்பலத்தாரர்கள் சந்தித்து, 24 மணி நேரத்திற்குள் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி திட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.
* உங்களுடைய குரலுக்கு செவி சாய்த்து, உங்களுடைய மண் உங்களோடு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த முடிவு இது.
* பிரதமர் மோடி தமிழக மக்களோடு கலந்து இருக்கக் கூடியவர்.
* சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.
* சட்டசபையில் தீர்மானம் போடுவதுதான் அவர்களது வேலை.
* உங்களுக்காக, உங்கள் குரலுக்காக பிரதமர் மோடி உங்களுடன் இருந்து இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
* மாநில அரசு மிரட்டலுக்கு.. மாநில அரசு மிரட்டலுக்கெல்லாம் மோடி எப்போதும் பயந்தது கிடையாது. அப்படியிருந்தால் ஆட்சியில் உட்கார்ந்த இருக்க முடியாது.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
- அனைத்து கட்சிகள் ஆதரவுடன் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- விழா ஏற்பாடுகளை மதுரை பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
தமிழக சட்ட சபையிலும் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இதையடுத்து மத்திய அமைச்சர் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் வரவேற்றனர்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த வாரம் அரிட்டாபட்டியில் பாராட்டு விழா நடத்தினர். அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து போராட்டக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிட்டாபட்டி மற்றும் வல்லாளப்பட்டியில் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா இன்று (30-ந்தேதி) மாலை நடைபெறுகிறது.
இதற்காக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமானம் மூலம் மதுரைக்கு பிற்பகலில் வருகின்றனர்.
தொடர்ந்து அரிட்டாபட்டிக்கு செல்லும் அவர்களுக்கு மாலையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- முனீஸ்வரன் கோவிலில் முனீஸ்வரன், முனியம்மாள் என இரண்டு தெய்வங்கள் உள்ளன.
- பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 20-க்கும் மேற்பட்ட கிடாய்கள் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோடு மொக்கையன் அம்பலம் நகரில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை பெண் பக்தர்களே பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் அமாவசையன்று இங்கு கிடாவெட்டு மற்றும் அசைவ அன்னதானம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை கோவிலில் சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு செலுத்திய ஆட்டு கிடாய்கள் மற்றும் சேவல்கள் முனீஸ்வரனுக்கு பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அப்போது ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் சாமியாடினர். முதலில் சக்தி கிடாயும், பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 20-க்கும் மேற்பட்ட கிடாய்கள் 50-க்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன. அவற்றை கொண்டு அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் முன்பு வரிசையில் பக்தர்கள் அமரவைக்கப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், மொக்கையன் அம்பலம் நகரில் எழுந்தருளியுள்ள முனீஸ்வரன் கோவிலில் முனீஸ்வரன், முனியம்மாள் என இரண்டு தெய்வங்கள் உள்ளன. பெண்களே இந்த கோவிலை நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவசையன்று முனீஸ்வரன், முனியம்மாள் ஆகியோருக்கு படையல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். இதே போல் இந்தாண்டு இந்த திருவிழா நேற்று நடைபெற்றது.
திருமங்கலம் நகர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நினைத்த காரியத்தை வேண்டி வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு செலுத்திய ஆடுகள் மற்றும் கோழிகளை வைத்து முதலில் சாமிக்கு படைத்த பின்பு திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து வந்த பக்தர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது.
பெண்கள் மட்டுமே முனீஸ்வரர் கோவிலில் நிர்வாகித்து வரும் இந்த அசைவ திருவிழா அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
- குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டம்.
- அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு தற்போது திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாலையின் ஒரு புறம் அரசு பள்ளிக்கூடம், ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.
மறுபுறத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை காயம் அடைந்து உள்ளனர்.
எனவே சாலையை கடப்பதற்கு கிராமத்தில் சுரங்கப்பாதை ஏற்படுத்திக் கொடுத்து அதன் பின்னர் நான்கு வழிச்சாலை பணியை தொடங்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குடியரசு தினத்தன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.
அதன் பிறகும் அதிகாரிகள் எந்த உத்தரவாதமும் அளிக்காததால் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தங்களுக்கு சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து கோசங்கள் எழுப்பினர். தங்களுக்கு உரிய முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே பொது மக்களின் சாலை மறியல் குறித்து தகவலறிந்த சட்ட மன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி. உதயகுமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கூறி அவரும், அ.தி.மு.க. வினரும் மறியலில் பங்கேற்றனர்.
4 மணிநேரத்துக்கும் மேலாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன. இதனால் வெளியூர் செல்வோர், தொழிலாளிகள் என பல தரப்பினர் அவதி அடைந்தனர். மறியல் காரணமாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
போராட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற ஊர்களில் எல்லாம் நான்கு வழிச்சாலை புறவழிச்சாலையாக கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் ஆலம்பட்டி கிராமத்தில் மட்டும் ஊருக்குள்ளே நான்கு வழி சாலை அமைவதால் நான்கு வழிச்சாலைக்காக இடம் கொடுத்தவர்கள், கிராம மக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
சாலையின் ஒரு புறம் குடியிருப்புகளும் மறுபுறம் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான அலுவலகங்கள் இருப்பதால் சாலையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.
எனவே சாலையை கடக்க சுரங்கப்பாதை வசதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு பணியை தொடர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர். கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு அளித்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் இன்று சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நானும் அவர்களோடு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. நேரம் ஆகஆக அதிக அளவில் கூட்டம் கூடியது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து குண்டுகட்டாக தூக்கி வேனில்ஏற்றினர். மேலும் மறியலில் ஈடுபட்ட பெண்கள், மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக இழுத்து போலீசார் அப்புறப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த மறியல் போராட்டம் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பின் முடிவுக்கு வந்தது.
- பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது.
- வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
மதுரையில் நடந்த வருமான வரித்துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி.
அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும் என்பது கஷ்டமாக இருக்கும்.
நாம் எளிமையாக தெரிந்து கொள்ள, எல்லோருக்கும் புரியும் அளவிற்கு இணையதளத்தை ஆரம்பித்து வங்கி கணக்கு எப்படி ஆரம்பிப்பது, சிக்கல்கள் என்ன? என்று குழந்தைகளுக்கு புரிவதுபோல் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது சுவாரசியமாக இருந்தது.
பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. நிறைய பேருக்கு அது புரிவது கடினமாக உள்ளது. இது தமிழிலும் இருந்தால் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.
உங்களின் இந்த முயற்சி எல்லோரும் எளிமையாக போய் சேர வேண்டும் என்பதற்கான முயற்சி தான். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது தமிழிலும் இருந்தால் இன்னும் எளிமையாக எல்லோருக்கும் போய்ச்சேரும்.
திடீரென்று ஏதாவது பிரச்சனை வரும்போது தான் அது என்ன பிரச்சனை என்று ஒரு படபடப்பில் அதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பே அது பற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரியும் மொழியில் இருந்தால் நாம் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
இல்லையென்றால் அதற்கும் ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டியது இருக்கும். அது நிகழ்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இந்த முயற்சி ரொம்ப அற்புதமானது. வரி செலுத்துவது மிகவும் முக்கியம். அவசியம்.
நம்முடைய உரிமைக்காக நமது அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறோமோ அதே போல் வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.
அதனால் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி எல்லாம் கட்டுகிறோம். ஏதாவது benifit இருந்தால் நன்றாக இருக்கும். அதையும் யோசித்து பாருங்கள்.
நன்றாக சம்பாதிக்கும்போது வரி கட்டி இருப்போம். ஒரு காலத்திற்கு மேல் வருமானம் இல்லாமல் போய் நிலைமை சரியில்லாமல் போனால் நல்ல tax payer ஆக ஒரு சிட்டிசனாக வரி கட்டி இருந்தால் அவருக்கு என்று சில benefits இருக்கலாமே என்று தோன்றுகிறது. இதையும் நீங்கள் consider செய்ய வேண்டும்.
ஷூட்டிங் நடுவில் வந்துள்ளேன். இங்கிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும். எல்லாரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும்.
- 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலையில் உற்சவர் சன்னதியில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார்.
அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.
இதையொட்டி கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
வருகிற பிப்ரவரி 6-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி காலையில் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுவார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலிப்பார்.
- குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர் தொட்டிமேல் ஏறும்வரை அதில் எவ்விதமான கழிவுகளும் கலக்கவில்லை.
- வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா அரசு சார்பில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
* வேங்கைவயல் சம்பவத்தில் 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 196 செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டது.
* குற்றவாளிகளின் செல்போனில் இருந்து எடுத்த புகைப்படங்கள் நேரம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
* நீர் தேக்க தொட்டியில் இருந்து குற்றவாளிகள் எடுத்த செல்பிகள், தொடர்பு கொண்ட எண்கள் ஆய்வு செய்யப்பட்டது.
* உண்மை குறற்வாளிகளை கண்டறிய 31 நபர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டது.
* குற்றவாளிகள் மற்ற நபர்களிடம் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உண்மையென உறுதி செய்யப்பட்டது.
* குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீர் தொட்டிமேல் ஏறும்வரை அதில் எவ்விதமான கழிவுகளும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
* சரியாக 7.35 மணிக்குதான் கழிவு கலக்கப்பட்டுள்ளது. கழிவு கலந்த தண்ணீர் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை.
* வேங்கைவயல் விவகாரத்தில் சாதிய மோதலோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. வேங்கைவயல் சம்பவம் என்பது இருவருக்கு இடையிலான தனிமனித பிரச்சனையால் நடந்துள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் எஸ்.சி. மக்களுக்கான குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் 26-ந்தேதி மலம் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் எதிரொலித்தது.
குடிநீர் அசுத்தப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குடிநீரை அசிங்கப்படுத்திய விவகாரம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்திய நாராயணனை நியமித்து உத்தரவிட்டது. அவரும் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் கடந்த 24-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான வக்கீல் மணி, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் அஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் "வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான புலன் விசாரணை முடிந்து விட்டது. இந்த வழக்கில் அந்த ஊரைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றம்சாட்டி கடந்த 20-ந்தேதி புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில், வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்கள் அடங்கிய முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா என்பவர், குடிநீர் தொட்டி ஆபரேட்டரான சண்முகத்தை பணி நீக்கம் செய்துள்ளார்.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில் பஞ்சாயத்து தலைவரின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொய்யான தகவலை முரளிராஜா பரப்பியுள்ளார்.
இதையடுத்து முத்துக்கிருஷ்ணனும், சுதர்சனும் குடிநீர் தொட்டியில் ஏறிச்சென்று பார்ப்பதுபோல் குடிநீரில் மலத்தை கலந்து குற்றச் சம்பவத்தை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது'' எனக் கூறினார். இதுதொடர்பான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே புகார் அளித்தவர்களையே குற்றவாளி என சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர். சிபிசிஐடி இந்த வழக்கை சரியாக கையாளவில்லை. இதனால் சிபிஐ விசாரணை தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- 92 சென்ட் நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு 11 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், 30 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை.
- 30 ஆண்டுகளாக வழங்கப்படாததால் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு.
மதுரையில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கு 92 சென்ட் நிலத்தை முருகசாமி என்பவரின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதற்காக 11 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை 30 ஆண்டுகளாக தரவில்லை என புகார் அளித்திருந்தனர்.
நிலுவைத் தொகையை வழங்காதததால் வீட்டுவசதி வாரிய பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்தது.
- நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
திருமங்கலம்:
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் வெளிநாட்டு இனமான ராட்வீலர் என்ற நாய் கடித்து குதறியதில் 5 வயது சிறுமி ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து ராட்வீலர் என்ற நாய்களை அப்புறப்படுத்த மாகராட்சி உத்தரவிட்டது.
வெளிநாட்டு நாய்களை வளர்ப்பதில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இருந்தபோதிலும் பலர் செல்லப்பிராணிகளாக வெளிநாட்டு நாய் இனங்களை வளர்ப்பதை கவுரமாக கொண்டு வளர்த்து வருகிறார்கள். அப்படி வளர்த்த ஒரு நாய் தனது எஜமானரையே கடித்து குதறியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுசாபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன்-ஜான்சி ராணி தம்பதியினர். இவர்கள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் 2 வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். ஜான்சி ராணியின் மகன் சென்னையில் வசித்து வருவதால் தம்பதியினர் மட்டுமே வீட்டிலிருந்து நாய்களை பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காய வைத்த துணிகளை எடுப்பதற்காக மாலை 5 மணி அளவில் ஜான்சிராணி மாடிக்கு சென்றுள்ளார். அப்போது நாயின் அருகில் இருந்த துணியை எடுக்க முயன்ற போது திடீரென ஒரு நாய் ஜான்சிராணி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து கடித்து குதறியது. இதில் அவரது இடது கை பலத்த சேதம் அடைந்து சிதைந்து போனது.
கையில் இருந்த எலும்புகள் வெளியில் தெரியும் அளவுக்கு சதைகளை குதறி எடுத்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தாலும், நாய்க்கு பயந்து யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. பின்னர் ஒரு வழியாக நாயிடம் இருந்து தப்பித்து மாடியில் இருந்து மெதுவாக ஜான்சி ராணி கீழே இறங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜான்சி ராணி இடது கை மிகவும் சேதம் அடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட நாய், வளர்த்த வரையே கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாடியில் இருக்கும் நாயை கட்டிப்போட்டு வைக்காததால் அப்பகுதியில் குடியிருக்கும் அனைவரும் வெளியே வர பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
- இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.
- வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது.
மதுரை:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு 8-ல் சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 22 ஆண்டுகளாக டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து வருகிறேன். இந்நிலையில் கடந்த ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன்.
மேலும் எனக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு செய்த இன்ஸ்பெக்டர் மீது விசாகா கமிட்டி விசாரணை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். பாலியல் குற்றச்சாட்டு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் எந்தவித காரணமும் இன்றி டெல்லி சிறப்பு பட்டாலியன் பிரிவிலிருந்து என்னை கடந்த 20-ந்தேதி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை (பட்டாலியனுக்கு) இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனது இரண்டு பெண் குழந்தைகள் டெல்லியில் பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். மேலும் என்னை பணிமாற்றம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லாமல் டெல்லியில் இருந்து திருநெல்வேலிக்கு பணிமாற்றம் செய்தது சட்டவிரோதம். எனவே எனது பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, பெண் சப்-இன்ஸ்பெக்டர் தனது உயர் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் காழ்ப்புணர்ச்சியாலும், பழிவாங்கும் நோக்கோடும் இதுபோன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கது அல்ல, விசாகா கமிட்டியின் உத்தரவுக்கு எதிரானது. இந்த பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த பணி மாறுதல் நடைபெற்றுள்ளது. எனவே இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பணியிட மாற்றம் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தலைவர் டி.ஜி.பி. மற்றும் டெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் தளவாய் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






