என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    • ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் சென்னையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டமும், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தி சென்னையில் குடும்பத்துடன் தொடர்போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். அரசு பணியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எளிய மக்களை போராடும் சூழலுக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பணி நிலைப்பு என்ற நியாயமான கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து திமுக அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 16&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 151-ஐயும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்தலாம் என்று 2023&ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 20-ஐயும் செல்லாததாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி 24 என்ற எண் கொண்ட அரசாணையை திமுக அரசு பிறப்பித்திருக்கிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.

    அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து விட்டு, முந்தைய அரசாணைகளின் அடிப்படையில் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றுவதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 181-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சொல்வதைச் செய்வதாகக் கூறிக் கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத் தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு.

    சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து நான்காம் நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் இன்றும் கைது, அரசு ஊழியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பகுதிநேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்; திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவார்கள்.

    • தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.
    • நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது. காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் குறித்து விமர்சித்து இருப்பது அவரது சொந்த கருத்து.

    கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அவரது பகல் கனவு பலிக்காது. உத்தரபிரதேச புல்டோசர் ஆட்சியின் யோகி ஆதித்யநாத் குரலாக பிரவீன் சக்கரவர்த்தி பேசுகிறார்.

    தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய வளர்ச்சி மற்றும் விளம்பரத்திற்காக பேசுகிறார். அவர் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்க உளவு வேலை பார்ப்பவர்களை அனுமதிக்க முடியாது.

    ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், 'தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகள் கவர்னர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பா.ஜ.க.விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது நமது வேலையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது.
    • தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம்.

    தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. முதலமைச்சரில் இருந்து, தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களும், தொடர்ந்து கூட்டங்களை நடத்திக் கொண்டு வரும் இயக்கம் தான் தி.மு.க.

    தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம். ஆனால் இதற்கு முன்னதாகவே, மகளிர்களை, இளைஞர்களை சந்திக்கும் கூட்டங்களை, தி.மு.க. தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

    இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது. அவர் இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் கனவு காண்பது தப்பு அல்ல. அவர் கனவு கண்டு கொண்டே இருக்கட்டும்.

    ஆனால் நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

    • விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
    • இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

    சென்னை:

    சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதற்கு அன்புமணி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வக்கீல் பாலு கூறியதாவது:-

    சேலத்தில் இன்று அவர்கள் எடுத்த முடிவுகள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது. இரண்டு கேலி கூத்தான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதாவது, பா.ம.க. தலைவராக டாக்டர் ராமதாசை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால், இதுவரை பேசியது பொய்யா? டாக்டர் ராமதாசை பொதுக்குழுவில் முறைப்படி தலைவராக தேர்வு செய்துவிட்டதாகவும், அதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டதாகவும் ஐகோர்ட்டு அங்கீகரித்துவிட்டதாகவும் கூறி வந்தார்கள். அப்படியானால் இப்போது தலைவரை தேர்வு செய்திருப்பதாக கூறுவது ஏன்?

    ஒரு கட்சியின் புதிய தலைவரை அந்த கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்ய முடியும். அதன்படி, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணிதான் பொதுக்குழுவை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்ய முடியும்.

    இன்னொரு கேலி கூத்தான தீர்மானத்தையும் சொல்லி உள்ளார்கள். அதாவது, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்கள். சவுமியா அன்புமணி ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பில் நீண்ட நாட்களாக தலைவராக இருக்கிறார். அவரை நீக்க வேண்டுமென்றால் அந்த அமைப்பின் பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும். இன்னொரு அமைப்பு அந்த முடிவை எடுப்பதற்கு என்ன உரிமை உள்ளது?

    காந்திமதி எங்கள் தலைவரை மிக மோசமாக தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அதை கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்றுக் கொள்ள மாட்டோம். அன்புமணி எங்கள் கட்சியை வழிநடத்தி வரும் தலைவர். அவரை யார் விமர்சனம் செய்தாலும் ஏற்க மாட்டோம். அது அக்காவாக இருந்தாலும் சரி, அக்கா-தம்பி சண்டை இருந்தால் வீட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

    பா.ம.க. டாக்டர் ராமதாசின் குடும்ப சொத்தும் அல்ல. இந்த விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் தள்ளுமுள்ளு.
    • காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.

    சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பேரணியை தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள் மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில், காமராஜர் சாலையில் பேரணி சென்ற இடத்தில் ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

    பேரணியாக சென்றபோது காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.

    கடந்த 2009ம் ஆண்டில் மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
    • பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில், 'போதையில் பாதை மாறும் இளைஞர்கள், பலியாகும் தமிழகப் பெண்கள்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூரில் அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி ஒரு தகப்பனாக இச்சம்பவத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. பாதிக்கப்பட்ட அக்குழந்தை முழு மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மீண்டு வர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    இந்த டாஸ்மாக் மாடல் அரசின் கீழ் போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அவையனைத்திற்கும் பின்னணியில் போதையின் கரங்கள் தான் ஓங்கியிருக்கின்றன. ஆனால், "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என வீர வசனம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரும்புக்கரமோ இத்துப்போய்விட்டது. எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத ஒரு அவல ஆட்சியை நடத்திக் கொண்டு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற விளம்பரப் பதாகைகளைத் தூக்கிப் பிடிக்க திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்.

    மழலை மாறாத குழந்தையைச் சீரழித்த அக்கொடும்குற்றவாளியும், கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து ஆட்சி நடத்தும் தி.மு.க.-உம் தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்! என்று கூறியுள்ளார். 



    • மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.
    • மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4 மணிக்கு 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.

    மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டனர்.

    அப்போது அந்த விமானத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி NVN சோமு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.

    இந்த புகைப்படத்தை திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வெல்லும் தமிழ் பெண்கள் என அந்த புகைப்படத்திற்கு கேப்ஷன் வைத்திருந்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
    • மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.

    திருப்பூரில் திமுக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.

    அரசின் நலத்திட்டங்களை விளக்கியும், தேர்தல் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் இந்த கூட்டங்கள் மாநாடு போல் நடத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்காக, 1.31 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்து பயணம், கல்வி கற்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், வேலைக்கு செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான தோழி விடுதி என மகளிர் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அந்த திட்டங்களை மக்கள் மனதில் பதிய வைக்கவும், சட்டமன்ற தேர்தல் பணியில் மகளிர் அணியினர் திறம்பட செயலாற்றும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் இன்று மாலை 4மணிக்கு 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்ட ங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.12 ஆயிரத்து 380 வாக்குச்சாவடி களில் ஒவ்வொரு வாக்கு ச்சாவடியில் இருந்தும் 15 பேர் என மொத்தம் 1.50 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மகளிர் அணியினர் பலர் இன்று காலை முதலே மாநாட்டு திடலுக்கு வந்து குவிய தொடங்கினர்.

    இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க. கட்சியினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    மாநாடு முடிந்ததும் கோவை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 8-30 மணியளவில் விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

    • ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.
    • தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    எல்லோரும் சேமிக்க நினைக்கும் தங்கம், ஏழைகளுக்கு ஏக்கம் தரும் ஒன்றாக மாறிப்போய்விட்டது. இந்த 2025ல், அந்த அளவுக்கு எட்டிப்பிடிக்க முடியாத விலை உயர்வை சந்தித்துள்ளது தங்கம். அதுமட்டுமல்ல தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியும் விலையேற்றத்தில் விண்ணை முட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.1 லட்சத்தை ஆண்டு இறுதிக்குள் தொட்டுவிடும் என தங்கம் விலை கணிக்கப்பட்டது. அதேபோல, அந்த விலையையும் தொட்டது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை உயரத் தொடங்கி, புதிய உச்சத்தில் தினமும் பயணிக்கிறது.

    கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்து 560-க்கு தொடங்கி வார இறுதியில் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையானது.

    அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,020-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 281 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    276-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

    26-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,120

    25-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,560

    24-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-12-2025- ஒரு கிராம் ரூ.285

    27-12-2025- ஒரு கிராம் ரூ.285

    26-12-2025- ஒரு கிராம் ரூ.254

    25-12-2025- ஒரு கிராம் ரூ.245

    24-12-2025- ஒரு கிராம் ரூ.244

    • தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது.
    • தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர்.

    சென்னை:

    மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடனும், இறந்தவர்களின் பெயர்களை நீக்க படிவம் 7ஐ, முகவரி மாற்றம், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கைக்காக படிவம்-8ஐ ஆர்வமுடன் அளித்தனர்.

    முதல் நாளில் 17 ஆயிரத்து 42 வாக்காளர்கள் மனுக்கள் அளித்தனர். நேற்று நடந்த முகாமில் 23 ஆயிரத்து 523 வாக்காளர்கள் மனு அளித்தனர். இதில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு 19 ஆயிரத்து 63 மனுக்களும், பெயர் நீக்கத்துக்கு 343 மனுக்களும், முகவரி மாற்றம், பட்டியலில் திருத்தம், மாற்று புகைப்பட அடையாள அட்டை போன்ற இனங்களுக்காக 4 ஆயிரத்து 117 மனுக்களும் பெறப்பட்டன. பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது கல்வி சான்று, ஆதார் அட்டை, 2005-ம் ஆண்டுக்கான பெற்றோர் வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இடமாறி சென்ற வாக்காளர்கள், அந்த இடத்திற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் எண் 6ஐ அளித்து தங்களை வாக்காளராக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு முடியும். இந்த படிவங்களை வாங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் உதவி புரிந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் தி.மு.க.விற்கு 68 ஆயிரத்து 251, அ.தி.மு.க.விற்கு 67 ஆயிரத்து 281, பா.ஜ.க.விற்கு 61 ஆயிரத்து 438, காங்கிரசிற்கு 30 ஆயிரத்து 587 தேர்தல் முகவர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் சென்று அவர்களிடம் ஆறு படிவத்தை பூர்த்தி செய்து வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

    சிறப்பு தீவிர முகாமின் முதல் நாளான நேற்று முன்தினம் 18 வயது நிரம்பிய தகுதியுடைய 1 லட்சத்து 85 ஆயிரத்து 277 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2-வது நாளாக நேற்றும் முகாம் நடந்தது.

    2 நாட்கள் நடந்த முகாமில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் படிவம் 6, 6ஏ மற்றும் இறந்த 4 ஆயிரத்து 741 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு அவர்களின் குடும்பத்தினர் படிவம் 7ஐ அளித்தனர்.

    தொடர்ந்து 2 நாட்கள் நடந்த முகாமில் வாக்காளர்கள் பலர் பயனடைந்து உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்காக வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர முகாமை நடத்த இந்திய தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

    • சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.
    • மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளும் முடிவடைந்து இருக்கிறது. இதற்கிடையே புதிய ரெயில்கள், சிறப்பு ரெயில்கள், நீட்டிப்பு செய்யப்பட்ட ரெயில்கள் உள்ளிட்டவை புதிய கால அட்டவணையில் இடம்பெறும்.

    கடந்த ஏப்ரல் மாதம் கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பழைய அட்டவணையின்படியே ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.

    அதே நேரத்தில், புதிய கால அட்டவணை 2026 ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவித்தது. அதன்படி 2026-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை ஜனவரி 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த புதிய கால அட்டவணையில் பல்வேறு ரெயில்களின் புறப்படும் நேரம், நீட்டிப்பு ரெயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளது. இதேபோல, மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையானது தேசிய ரெயில்வே விசாரணை அமைப்பு (என்.டி.இ.எஸ்.) என்ற செயலில் வெளியாகி இருக்கிறது.

    புதிய கால அட்டவணையின்படி, சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.50 மணிக்கும், எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சி புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும்செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஜனவரி 1-ந்தேதி முதல் முன்கூட்டியே 7.35 மணிக்கு புறப்படும்.

    இதேபோல, எழும்பூரில் இருந்து இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.35 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதியம் 1.45 மணிக்கு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் 1.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பட்டுவிடும். எழும்பூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 7.15 மணிக்கு புறப்படும். எழும்பூரில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 3.05 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் நேரம் மாற்றப்படவில்லை. அதேநேரத்தில் மின்சார ரெயில் நேர மாற்ற அட்டவணையும் விரைவில் வெளியாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 8.50-க்கு புறப்படும். சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் 6.50 மணிக்கும் புறப்படும். ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 6 மணிக்கு புறப்படும். தூத்துக்குடியில் இருந்து எழும்பூர் வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8.40 மணிக்கு பதிலாக 9.05 மணிக்கு புறப்படும். இதேபோல, குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ஆகிய ரெயில்களில் மறுமார்க்கமாக புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை.

    • ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நடைபெற்றது.
    • இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் தனி விமானம் மூலம் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    சென்னை:

    ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், கோலாலம்பூரில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 9.15 மணி அளவில் சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் விஜய்யை பார்ப்பதற்காக ரசிகர்கள், த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யை பார்ப்பதற்காக தாக ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காருக்குள் ஏறச்சென்ற விஜய், நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனெ அவரை மீட்டு காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன்பின், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×