என் மலர்
சென்னை
- தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
- நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. இதனிடையே கடந்த 15-ந்தேதி சற்று குறைந்த நிலையில் மீண்டும் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,940-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனையாகிறது. தமிழ் புத்தாண்டில் இருந்து இந்நாள் வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520
15-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
14-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
13-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-04-2025- ஒரு கிராம் ரூ.110
16-04-2025- ஒரு கிராம் ரூ.110
15-04-2025- ஒரு கிராம் ரூ.110
14-04-2025- ஒரு கிராம் ரூ.108
13-04-2025- ஒரு கிராம் ரூ.110
- அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
- அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள், பேச்சு இருக்கக்கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் துறைரீதியான பணியை விரிவுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
- ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது.
- இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.
சென்னை:
சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட 'இளஞ்சிவப்பு' ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூகநலத்துறை சார்பில் கடந்த ஆண்டு மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை, கடந்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி, மகளிர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து முதல் கட்டமாக 165 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார். ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது. 2-ம் கட்டமாக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் சமூக நலத்துறை ஈடுபட்டு வருகிறது. இளஞ்சிவப்பு ஆட்டோ 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வுக்காக இதுவரை 141 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சூழலில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, சமூகநலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல் நல பிரச்சனைகள் காரணமாக பெண் பயனாளிகள் ஆட்டோக்களை ஓட்டாத நாட்களில், கணவர்கள் ஓட்டியது தெரியவந்திருக்கிறது. இருப்பினும், பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.
- வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
- முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.
வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வக்பு சொத்துகளை பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.
சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம்.
வக்பு திருத்தச் சட்டத்தின் பிற்போக்கான அம்சங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து, இந்த தீங்கிழைக்கும் வக்பு திருத்த சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது.
சட்டத்தில் பல பிற்போக்குத்தனமான விதிகளுக்கு நீதித்துறை இடைக்கால தடை விதித்ததில் மகிழ்ச்சி.
உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மூலம் வக்பு உடமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
- கட்சி நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
அதிமுக கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்கள், எவ்வித கருத்துகளையும் கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது என்று அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழக நிர்வாகிகளுக்கும், கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களுக்கும் அன்பு வேண்டுகோள்!
கழக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டும்; நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு தொடர்ந்தும், 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.
கழகத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கழகத் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
ஆகவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும்; கழகத்தின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கழகத்தின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்வெளித் துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் அரும்புநிலை நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய தொழில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
விண்வெளித்துறையில் நிறுவனங்களையும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தான் இந்த கொள்கையின் முக்கிய பங்கு.
இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது.
- பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு வழக்கு தொடர்ந்தார்.
தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் பெரியார் அன்பு தொடர்ந்த வழக்கில்," தவெக கட்சி கொடியில் யானைகள் இடம்பெற்றிருப்பது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு முரணானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தவெக கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இதுதொடர்பாக ஏப்ரல் 29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.
இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தொடர்ந்து, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சு முழுக்க முழுக்க துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா?
அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என டிஜபி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. புகார் இல்லாமலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீதான ஒரு புகார் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் நான்கைந்து வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்துப் போய்விடும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நீதிபதி வழக்கின் விசாரணையை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
அதன்படி, இன்று மாலை 4.30 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர், ஞாயிறு அன்று சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி சில மத்திய அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
- மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.
சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொளள அன்புமணி நியமனம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025ம் ஆண்டில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.
சித்திரை முழுநிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணியை நியமித்திருக்கிறேன். சித்திரை முழுநிலவு மாநாடு இதுவரை நடந்தவற்றைவிட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.
மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும்.
சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
சமூக நீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என தெரிவிக்க வேண்டும்./ அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வரவேண்டும்.
மாநாட்டுக்கு வரும் வழியில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்துவிடாமல் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
- பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
- இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன்.
வக்பு வாரிய திருத்த சட்டம் மசோதாவிற்கு எதிரான வழக்கில், சட்டப்படி புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
- புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.
அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.
அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.
இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.






