என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை- சமூக நலத்துறை எச்சரிக்கை
    X

    இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை- சமூக நலத்துறை எச்சரிக்கை

    • ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது.
    • இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.

    சென்னை:

    சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட 'இளஞ்சிவப்பு' ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என சமூகநலத்துறை சார்பில் கடந்த ஆண்டு மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தை, கடந்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி, மகளிர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து முதல் கட்டமாக 165 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார். ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் ஆட்டோ வழங்கப்பட்டது. 2-ம் கட்டமாக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் சமூக நலத்துறை ஈடுபட்டு வருகிறது. இளஞ்சிவப்பு ஆட்டோ 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வுக்காக இதுவரை 141 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த சூழலில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் மாநகர சாலைகளில் ஓட்டி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, சமூகநலத்துறை கள ஆய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் வணிக ரீதியிலான போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டு உள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல் நல பிரச்சனைகள் காரணமாக பெண் பயனாளிகள் ஆட்டோக்களை ஓட்டாத நாட்களில், கணவர்கள் ஓட்டியது தெரியவந்திருக்கிறது. இருப்பினும், பெண்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது.

    Next Story
    ×