என் மலர்
சென்னை
- விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
- நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12-ஆம் தேதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், குறுவை சாகுபடி செய்ய உழவர்களை ஊக்குவிப்பதற்கான குறுவைத் தொகுப்புத் திட்டம் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாத ஆண்டுகளில், நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்களை ஊக்குவிக்கு நோக்குடன் தான் குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, பல்வேறு காரணங்களால் குறுவை பருவத்தில் உழவர்கள் இழப்பை சந்திப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், அதைக் கருத்தில் கொண்டு அனைத்து ஆண்டுகளும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டிற்கான குறுவைத் தொகுப்பு இன்னும் அறிவிக்கப்படாதது உழவர்களிடையே பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறுவை பாசனத்திற்காக இன்னும் 3 வாரங்களில் காவிரியில் தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே குறுவைப் பாசனத்திற்கு காவிரி பாசன மாவட்ட உழவர்கள் தயாராக வேண்டும். விதை விதைப்பது, நாற்றாங்கால்களைத் தயார் படுத்துவது போன்ற பணிகளை உழவர்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான விதை, உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவது தான் குறுவைத் தொகுப்பு திட்டமாகும். அதை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
கடந்த ஆண்டில் வேளாண் துறை மிக மோசமான பின்னடைவை சந்தித்திருக்கிறது. 2024-25ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வேளாண் துறையும் மைனஸ் 0.09% வளர்ச்சியடைந்துள்ளது. உழவுத் தொழிலின் வளர்ச்சியை மட்டும் பார்த்தால் மைனஸ் 5.93 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சூழலில் நடப்பாண்டிலாவது வேளாண் துறை வளர்ச்சியை நேர்மறையாக மாற்ற சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கு மாறாக வழக்கமான திட்டங்களையே தாமதப்படுத்தக்கூடாது.
எனவே, இனியும் தாமதிக்காமல், காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்காமல், அனைத்து உழவர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன், குறுவை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 2 மின்சார ரெயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரெயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய மின்சார ரெயில் முன்கூட்டியே வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பயணிகள் கூறுகையில், இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என புகார் தெரிவித்தனர்.
- தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
- நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையானது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையாகிறது. இதனால் சவரன் விலை மீண்டும் ரூ.71 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 111-க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 11ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,680
19-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-05-2025- ஒரு கிராம் ரூ.108
19-05-2025- ஒரு கிராம் ரூ.109
18-05-2025- ஒரு கிராம் ரூ.108
17-05-2025- ஒரு கிராம் ரூ.108
16-05-2025- ஒரு கிராம் ரூ.108
- ராமாபுரம் நோக்கி சென்ற கார் காத்திப்பாரா மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
- காரில் பயணித்த பெண்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கிண்டி:
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கி சென்ற கார் காத்திப்பாரா மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த பெண்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை.
- தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம்.
சென்னை:
தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை எனவும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ. 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல்- சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இன்று மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு சாய் நகர் சீரடி செல்லும்.
சென்னை:
சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சென்னை சென்டிரல்- சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் சாய் நகர் சீரடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22601), இன்று (புதன்கிழமை) மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு (1 மணி நேரம் தாமதமாக) சாய் நகர் சீரடி செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.
- கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை.
இந்தநிலையில் இணை கமிஷனர் விஜய குமார் தற்போது புதிய முயற்சியில் இறங்கி உள்ளார்.
நேப்பியர் பாலம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள மெரினா கடல் பகுதியில் 7 இடங்களில் கடல் நீருக்குள் சுழற்சி இருப்பதாகவும் அந்த பகுதியில் கடலில் குளிப்பவர்கள் சுழற்சியில் சிக்கி அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிரை விடுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு பலன் கிடைக்கும் என் நம்புவதாக போலீசார் தெரிவித்தனர்.
- பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
- கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் நிறுத்தப்படும்.
சென்னை:
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), சாலக்குடி-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சாலக்குடியில் நிறுத்தப்படும்.
* மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வரும் ஜூன் 9-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் நிறுத்தப்படும்.
* தாம்பரத்தில் இருந்து வரும் ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.
*மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20692), நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.
* திருச்சியில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22627), நெல்லை-திருவனந்தபுரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.
* திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஜூன் 11-ந்தேதி காலை 11.35 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22628), திருவனந்தபுரம்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
* நாகர்கோவிலில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321), நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து காலை 8.26 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும்.
- தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.
சென்னை:
தங்கத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் தங்கத்தை ஆடம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. தங்களது அவசர தேவைக்குஉதவும் பொருளாகவும் பார்க்கிறார்கள்.
ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடனடி பணத்தேவைக்கு தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்தே பணத்தை பெற்று வந்தனர். தனியார் நடத்தும் அடகு கடைகளில் வட்டி அதிகம் என்பதால் பெரும்பாலானவர்கள் வங்கிகளிலேயே தங்களது நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வந்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பேரிடியாக விழுந்தது.
அதாவது முன்பெல்லாம் வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்தால், குறித்த காலக்கெடு முடியும் தருவாயில், அதற்கான வட்டியை மட்டும் கட்டிவிட்டு, நகையை மறு அடமானம் வைத்துக்கொள்ளலாம். தற்போது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின்னர், இந்த முறை முற்றிலும் மாறியது. குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்குள் கடன் தொகையை முற்றிலும் கட்டி நகையை திருப்ப வேண்டும். அதற்கு அடுத்த நாளில்தான் அந்த நகையை சம்பந்தப்பட்டவரால் மீண்டும் அடமானம் வைக்க முடியும்.
இந்த கட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் பெருமளவு பாதித்தது.
இந்த சூழ்நிலையில் மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தகவலாக, நகைக் கடனுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
தங்க நகைக்கடன் வழங்குவதில் புதிய நடைமுறைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள ரிசர்வ் வங்கி, இதற்காக வங்கிகள் மற்றும் தங்க நகைக் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திற்கும் ஒரே விதமான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் 9 அம்சங்கள் முன் மொழியப்பட்டுள்ளன.
அதன் விவரம் வறுமாறு:-
* தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடன் வழங்க வேண்டும். தற்போது 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தான் கடன் வழங்கப்படும்.
* தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.
* வங்கிகள், தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு தரச்சான்றிதழ் வேண்டும்.
* தங்க நகைகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானமாக ஏற்கப்படும்.
* தங்க நகைபோல், வெள்ளி பொருட்களுக்கும் கடன் வழங்கலாம்.
* ஒரு நபருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானமாக வைக்க அனுமதிக்கப்படும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் 22 காரட் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டு தங்கத்தின் மதிப்பை கணக்கிட வேண்டும்.
* தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதற்கான ஒப்பந்தத்தில் அடமானமாக வைக்கப்பட்ட தங்கத்தின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
* கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டால், 7 வேலை நாட்களுக்குள் தங்கத்தை திருப்பி தர வேண்டும்.
* அடமான நகையை திருப்பி தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில், கட்சியின் மாநாட்டிலேயே எங்கள் நிலைபாட்டை தெளிவாக அறிவித்துவிட்டோம்.
- டிசம்பர் மாதத்திற்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய அதிர்வுகள் ஏற்படும்.
சென்னை:
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் (தேர்தல் மேலாண்மை) ஆதவ் அர்ஜூனா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிர்க்கட்சியாக இருந்தபோது சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் அமைப்பை காப்போம் என்று உறுதியாக இருந்து போராட்டம் நடத்திய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதேபோன்ற நிலையில் இல்லை. வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். ஆனால், அது கண்துடைப்பாகவே இருக்கிறது. வக்பு வாரிய சட்டத்திற்கு எதிரான வழக்கில் தன்னை ஏன் தமிழக அரசு இணைத்துக் கொள்ளவில்லை?. கேரள அரசை போல, வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். அரசியல் அமைப்பின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உண்மையாக குரல் கொடுக்க வேண்டும்.
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குரல் கொடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும்.
இதை வாக்கு வங்கி ரீதியாக தமிழக வெற்றிக்கழகம் அணுகவில்லை. வடகாடு விவகாரத்தில் திருமாவளவன் போலீஸ் துறையை விமர்சித்தார். போராட்டம் முடித்த பிறகு தி.மு.க. அரசு சமூக நீதிக்கான அரசு என்று மாற்றி பேசுகிறார்.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில், கட்சியின் மாநாட்டிலேயே எங்கள் நிலைபாட்டை தெளிவாக அறிவித்துவிட்டோம். அரசியல் எதிரியான தி.மு.க.வுடனும், கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடனும் கூட்டணி கிடையாது என்பது எங்கள் நிலைப்பாடு. அ.தி.மு.க.வை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள்.
எதிர்க்கட்சியாக உள்ள ஒரு கட்சியை ஏன் எதிர்க்க வேண்டும்?. அந்த கட்சிக்கு மக்கள் தண்டனை கொடுத்துள்ளார்கள். பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அ.தி.மு.க.வை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததும், தமிழக வெற்றிக்கழகம் இந்த கூட்டணி தவறானது என தன்னுடைய நிலைபாட்டை அறிவித்துள்ளது. விஜய் வருகை உண்மையான அரசியலை உருவாக்கும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய அதிர்வுகள் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
- SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வரை SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.
அப்போது அரசு பேருந்து ஓட்டுநரிடம் அவரது பிரச்சனைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவசங்கர் பகிர்ந்துள்ளார்.
- இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
- தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என்றார்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட மூத்த விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணனுடன் ஒரு முக்கிய சந்திப்பை மேற்கொண்டேன்.
தமிழ்நாடு அரசுப் பள்ளியிலிருந்து சென்று இந்திய விண்வெளி நிறுவனத்தின் உயர் பொறுப்புக்கு வந்துள்ள வி.நாராயணனின் பயணமானது நிறையவே பேசக்கூடியது
பொதுக் கல்வியால் எட்டக்கூடிய உயரங்களை அவர் உள்ளடக்கி உள்ளார். தமிழ்நாட்டின் வேர்கள் நட்சத்திரங்களை எட்டுவதைக் காண்பதில் பெருமை என பதிவிட்டுள்ளார்.






