search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கி.வீரமணி
    X
    கி.வீரமணி

    புதுச்சேரியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தி.மு.க.வால் மட்டுமே முடியும்: கி.வீரமணி

    புதுவையைக் காப்பாற்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தி.மு.க.வினால் மட்டுமே முடியும். அப்போதுதான் அங்கு விடியல் ஏற்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பக்கமும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.
    சென்னை :

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பா.ஜ.க. 6 இடங்களையும் பெற்றுள்ளது. இதனால் என்.ரங்கசாமி, தான்தான் முதல்-அமைச்சர், என்று கூறி, பா.ஜ.க.வுக்கு அமைச்சரவையில் இடம் தர ஒப்புக் கொண்டார்; ஆனால், பா.ஜ.க.வுக்குத் துணை முதல்-அமைச்சர் பதவி என்பதை மனதார அவரோ, அவரது கட்சியினரோ ஏற்கவில்லை.

    இந்த நிலையில், 3 பா.ஜ.க.வினரை நியமன உறுப்பினர்களாக்கி, பதவியேற்ற முதல்வர் என்.ரங்கசாமியின் ஆட்சி நாற்காலியில் அமர்வதற்கு முன்பே, அதனை ஆட்டிப் பார்க்கும் வகையில் தனது கொடுங்கரத்தை புதுச்சேரியில் பா.ஜ.க. நீட்டிட முழு ஆயத்தத்தில் இறங்கிவிட்டது. 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் மூவர், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவதாக அவர்களிடம் இருந்து கடிதங்களையும் இப்போதே பெற்றுவிட்டனர். அதன்படி, புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க.வின் பலம் 12 ஆக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், எந்த நேரத்திலும் இந்த “கண்ணிவெடி” அந்த ஆளும் கட்சிக்கே ஆபத்தை உண்டாக்கலாம்.

    இதிலிருந்து புதுவையைக் காப்பாற்றி, ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தி.மு.க.வினால் மட்டுமே முடியும். அப்போதுதான் அங்கு விடியல் ஏற்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பக்கமும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×