search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    வீரவணக்க நாள்- ஓ.பன்னீர்செல்வம் பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

    வருகிற 25ந் தேதி அதிமுக சார்பில் திருவொற்றியூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதாக இருந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

    இந்த நாளில் அ.தி.மு.க. சார்பிலும், தி.மு.க. சார்பிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாவட்டந்தோறும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டங்களில் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    வருகிற 25-ந் தேதி சென்னை திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    தி.மு.க. சார்பில் திருவொற்றியூரில் நடைபெற உள்ள வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வருகிற 25-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் திருவொற்றியூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதாக இருந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வருகிற 30-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது இருப்பதால் இந்த பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    30-ந் தேதி திருவொற்றியூர் பெரியார் நகரில் நடை பெறும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி, மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    தி.மு.க. சார்பில் ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 25-ந் தேதி திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

    இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், வட சென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரே நாளில் அ.தி.மு.க., தி.மு.க. வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×