search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    அனைத்து கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

    பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக்கோரி நாளை அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் சார்பில் கூட்டாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா என்ற கொடிய நோய் தொற்றால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் 25-ந் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, 68 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஜூன் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் நோய்த்தொற்று குறையும் என்று நம்ப முடியாத அளவுக்கு, தினந்தோறும் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மருத்துவ நிபுணர்கள், அடுத்த 2 மாத காலத்தில் நோய்த்தொற்று மேலும் அதிகமாக பரவும் என்று எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.

    நோய் பரவல் அதிகமான நிலையில் ஊரடங்கை தளர்த்தியும், மதுபான கடைகளை திறந்தும், கடமை தவறி செயல்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்த கட்ட தவறான செய்கையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தியே தீருவேன் என்று வறட்டு பிடிவாதத்தில் உள்ளார்.

    9 லட்சம் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து தேர்வுகள் எழுதியாக வேண்டும். இதனால் அவர்களது பெற்றோர்களும் லட்சக்கணக்கில் வெளியில் வந்தாக வேண்டும். 3 லட்சம் ஆசிரியர்களும், பல லட்சம் ஊழியர்களும் பணிக்கு வந்தாக வேண்டும். இதைப்பற்றிய கவலை தமிழக அரசுக்கு கொஞ்சம்கூட இல்லை.

    கொரோனா நோய் தொற்றால் சிறுவர்கள், சிறுமியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். யாரையும் வெளியில் வர வேண்டாம் என்று சொல்லும் அரசாங்கமே, பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி லட்சக்கணக்கான மாணவர்களை வெளியில் வர வைப்பது ஏன்?. மாணவர்களின் உயிருக்கு அரசால் உத்தரவாதம் தரமுடியுமா?.

    தேர்வை தள்ளி வையுங்கள் என்று அரசியல் இயக்கங்கள் கேட்டது மட்டுமல்ல, பெற்றோர்கள் வீடியோக்களில் கதறுகிறார்கள். இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு என்ன அவசியம்?‘ என்று நீதிமன்றமும் கேட்டுள்ளது. ஆனாலும் அரசுக்கு இரக்கம் ஏற்படவில்லை.

    இந்த சூழலில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரை காக்கும் முயற்சியாக போராட்டம் நடத்தும் நிலைமையை அரசே ஏற்படுத்தி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு தற்போதைக்கு நிறுத்தக் கோரியும், கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்த பிறகு பெற்றோர், ஆசிரியருடன் கலந்து ஆலோசனை செய்து தேர்வு தேதியை குறிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 10-ந் தேதி(நாளை) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.

    லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம். அவரவர் இல்லத்தின் முன்பு 5 பேர் கூடி, தனிமனித இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×