search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு
    X
    பொங்கல் பரிசு

    பொங்கல் பரிசு-ரூ.1000 அடுத்த வாரம் கிடைக்கும்

    தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் அடுத்த வாரம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரே‌ஷன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ளதால் பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 29-ந்தேதியே தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2 கோடி ரே‌ஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகளை கொள்முதல் செய்ய அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது.

    அதன்படி ரே‌ஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட்டு போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் முடிந்துவிடும்.

     

    எடப்பாடி பழனிசாமி

     

    அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப்பணம் ரூ.1000-த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

    வருகிற புதன்கிழமை இருந்து ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    அனேகமாக பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 20-ந்தேதி வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    குடும்ப அட்டைதாரர்கள் நெரிசல் இன்றி முறையாக பொங்கல் பரிசு தொகுப்பை பெற 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில், தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம்- பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரே‌ஷன் கடைகளில் எழுதி ஒட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ரே‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதும் பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும்.

    பொங்கல் தொகுப்பு பரிசுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதால் அரசு எந்த நேரம் அறிவித்தாலும் உடனே மக்களுக்கு வழங்கி விடுவோம் என்று ரே‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இதுபற்றி கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு பொங்கல் தொகுப்பு பரிசு மற்றும் பணம் ரூ.1000 இந்த வாரத்துக்குள் வழங்கப்படும் எந்த தேதி என்ற விவரம் விரைவில் வெளியாகும்.

    பொங்கல் தொகுப்பு பரிசு, ரொக்க பணம் ரூ.1000 ஆகியவை ஏற்கனவே முதல்- அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் என்பதால் இப்போது அதை வழங்குவதற்கு தடை ஏதும் இல்லை என்று தேர்தல் கமி‌ஷன் தெளிவுபடுத்தி இருப்பதாகவும், எனவே அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் விரைவில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×