search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    திமுகவினரின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்- செல்லூர் ராஜூ பேச்சு

    மதுரையில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று நடந்தது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவினரின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெய் ஹிந்துபுரத்தில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் 255 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து அந்தப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, பிறப்பு-இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை கேட்டு 1600-க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் அனைத்தும் உடனடியாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கப்பட்டன.

    முகாமில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர், யாரும் எளிதில் அணுகக்கூடிய எளிமையான முதல்-அமைச்சராக அவர் திகழுகிறார்.

    அ.தி.மு.க. ஆட்சி வருகிற போதெல்லாம் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும். அதுபோலவே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். அந்த திட்டங்களை எல்லாம் இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    மதுரையில் “ஸ்மார்ட்சிட்டி” திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை ஒரு புதுமையான நகரமாக திகழும். அதிகாரிகளை மக்கள் தேடிச் சென்ற காலம் மாறி மக்களை தேடி அதிகாரிகள் வருகின்ற சிறப்பான திட்டம் தான் இந்த குறைதீர்க்கும் முகாம். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    சிறப்பாக நடைபெற்று வரும் இந்த ஆட்சியை குறை சொல்கிறார்கள். குற்றம் சொல்கிறார்கள். இது நியாயமா? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் தான் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு விலையில்லா அரிசி, மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி என்று எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.

    இந்த திட்டங்கள் அனைத்தையும் எடுத்துச் சொன்னால் நேரம் போதாது. இந்த அரசு மக்களுக்கானது. மக்கள் தான் எஜமானர்கள்.

    நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இது போன்ற திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் செய்தது உண்டா? விரைவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வர காத்திருக்கிறது.

    அதனால் அரசை விமர்சிப்பதை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    கடந்த தேர்தலில் இல்லாததை-பொல்லாததை சொல்லி வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்று விட்டார்கள். தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இதை மக்கள் மன்றம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, தங்கம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, பிரிட்டோ, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×