search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ, அன்புமணி கோரிக்கை
    X

    கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ, அன்புமணி கோரிக்கை

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வைகோ, அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளனர். #Vaiko #anbumani #tnfisherman

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகில் உள்ள ரம்பவயல் கிராமத்தில் தங்கி, இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில், மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடிக்கச் செல்வது வழக்கமாகும்.

    கடந்த 10-ந்தேதி மாலை நெடுந்தீவு அருகே நாட்டுப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரோந்துக் கப்பலில் வந்து சுற்றி வளைத்து, 4 நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்ததுடன், அதில் இருந்த 27 மீனவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.

    27 பேரும் இலங்கையின் காங்கேசன்துறை ராணுவ முகாமிற்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் நிறுத்தி, பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

    இலங்கைக் கடற்படை கைது செய்துள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


    ராமநாதபுரம் நம்பு தாளையைச் சேர்ந்த 22 மீனவர்கள் 3 நாட்டுப் படகுகளில் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் வானகரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

    இலங்கை அரசின் புதிய மீன்பிடித் தடை சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தராது என்றும் கூறப்படுகிறது. தவறு செய்யாத மீனவர்களுக்கு வழங்கப்படும் இத்தண்டனை மிகவும் கொடூரமானதாகும்.

    கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vaiko #anbumani #tnfisherman

    Next Story
    ×