search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணத்துக்கு ஆசைப்பட்டு 13 வயது மகளை விபசாரத்தில் தள்ளிய தாய்
    X

    பணத்துக்கு ஆசைப்பட்டு 13 வயது மகளை விபசாரத்தில் தள்ளிய தாய்

    செங்கோட்டை அருகே பணத்துக்கு ஆசைப்பட்டு 13 வயது மகளை தாயே விபசாரத்தில் தள்ளிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் புளியரையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஸ்ரீமூலப்பேரி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்கு அருகில் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த சைகால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதை புளியரையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த தோட்டத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், அஜித் (38) என்ற நபருடன் வசித்து வந்தார். இவர்கள் அந்த தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். அந்த பெண், தனது 13 வயது மகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்க வைத்து 8-ம் வகுப்பு படிக்க வைத்தார்.

    பள்ளி விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவி, ஆரியங்காவு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு தனது தாயுடன் வந்து தங்கி இருந்தார். இந்த நிலையில் மகளை திடீரென்று காணவில்லை என்றும், தன்னுடன் வசித்து வந்த அஜித் தனது மகளை கடத்திச்சென்று விட்டதாக அந்த பெண் புளியரை, தென்மலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக தென்மலை போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் புகார் கொடுத்த மறுநாளே அஜித், அந்த மாணவியுடன் புளியரையில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து மாணவியின் தாய், தான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குவதற்காக தென்மலை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசாரிடம், தனது மகளும், அஜித்தும் திரும்ப வந்து விட்டதாகவும், புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். அந்த பெண்ணின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியின் தாய்க்கும், அங்கு வேலை செய்த அஜித்துக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்த விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. உடனே இருவரும் அங்கிருந்து வெளியேறினர். அப்போது அந்த பெண், தனது மகளையும் அழைத்துக்கொண்டு அஜித்துடன் வந்து விட்டார்.

    அதன்பிறகு புளியரை பகுதியில் உள்ள தோட்டத்தில் இருவரும் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்டு வேலைக்கு சேர்ந்த‌னர். தங்களது கள்ளக்காதலுக்கு மகள் இடையூறாக இருப்பாள் என்று கருதி மகளை திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுதியில் தங்க வைத்துள்ளார் அந்த பெண். இதற்கிடையே பணத்துக்கு ஆசைப்பட்டு விடுமுறையில் ஊருக்கு வந்த மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த அவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி தோட்டத்து வீட்டில் வைத்து பலருடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியதாகவும், அவர்களது கட்டாயத்தின் பேரில் மாணவி விபசாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விடுதிகளிலும், வீடுகளிலும் தங்க வைத்தும் விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதற்கு மாணவியின் சித்தப்பாவும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியின் சித்தப்பாவே மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்த கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    தனது மகளை, தனக்கு தெரியாமல் விபசாரத்தில் ஈடுபடுத்த மாணவியின் சித்தப்பா முடிவு செய்தது தனக்கு பிடிக்காததால் போலீசில் புகார் செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவியின் தாயையும், அதற்கு உடந்தையாக இருந்த சஜி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலன் அஜித் மாணவியின் சித்தப்பா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புளியரை பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×