search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    250 கிலோ தங்க நகைகளை மீட்க முயற்சி: அதிகாரிகள் ஆலோசனை
    X

    250 கிலோ தங்க நகைகளை மீட்க முயற்சி: அதிகாரிகள் ஆலோசனை

    தீ விபத்திற்குள்ளான கட்டிடத்தின் கீழ் தளத்தில் லாக்கரில் இருக்கும் நகைகளை பத்திரமாக மீட்பது தொடர்பாக தீயணைப்பு துறையினரும், போலீசாரும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் செயல்பட்ட ஸ்ரீகுமரன் தங்க மாளிகை கீழ் தளத்தில் இயங்கி வந்தது.

    தீ விபத்து ஏற்பட்டவுடன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. அதே நேரத்தில் கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த லாக்கரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சுமார் 250 கிலோ நகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நகைகளை உடனடியாக கடை ஊழியர்களால் மீட்க முடியவில்லை. இதனால் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் தீ விபத்தில் சிக்கியது. இந்த லாக்கர் 1000 டிகிரி வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவை. எனவே தீ விபத்தில் லாக்கரில் இருக்கும் நகைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என்று கடை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.


    இதையடுத்து லாக்கரில் இருக்கும் நகைகளை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தீயணைப்பு துறையினரும், போலீசாரும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இன்று பிற்பகல் வரையிலும் தீ கட்டுக்குள் வராமல் அவ்வப்போது எரிந்து கொண்டே இருக்கிறது. அதனை ராட்சத கிரேனில் அமர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்து வருகிறார்கள்.

    இதனால் கட்டிடத்தினுள் நுழைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தீயணைப்பு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்தவுடன் லாக்கரில் இருக்கும் நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    Next Story
    ×