search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரியை போல் மாறும் +2 பாடத்திட்டம்: பள்ளிக் கல்வித்துறை முடிவு
    X

    கல்லூரியை போல் மாறும் +2 பாடத்திட்டம்: பள்ளிக் கல்வித்துறை முடிவு

    கல்லூரியை போல பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டதிலும் பல மாற்றங்களை கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கல்வி திட்டத்தில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

    பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் ரேங்க் முறை இந்த ஆண்டு முதல் முறையாக ஒழிக்கப்பட்டது.

    அதற்கு பதிலாக புதிய முறையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த மனஅழுத்தம் இந்த ஆண்டு காணாமல் போய் விட்டதாக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதுவரை 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு மட்டுமே அரசு பொதுத்தேர்வு இருந்து வந்தது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்து பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.



    இதே போல அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவ - மாணவிகளின் சீருடையும் மாற்றப்படுகிறது. மூன்று வித வண்ணங்களில் சீருடை வழங்கப்படும்.

    இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 200 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதை 100 மதிப்பெண்ணாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி 6 பாடத்துக்கான மொத்த மதிப்பெண் 1,200-க்கு பதிலாக இனி 600 ஆக இருக்கும்.

    இந்த 100 மார்க்குகளில் 90 மதிப்பெண் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மீதியுள்ள 10 மதிப்பெண் பொது அறிவு சம்பந்தமானது. ‘ஆப்ஜெக்டிவ்’ டைப்பில் கேள்விகள் இருக்கும்.

    நீட் மற்றும் தகுதி தேர்வில் மாணவ- மாணவிகளின் தகுதி திறனை அதிகரித்துக் கொள்ள இந்த 10 மதிப்பெண் பாடப் புத்தகத்தில் இல்லாமல் வெளியில் இருந்து பொது அறிவாக கேட்கப்படும்.

    பிளஸ்-2வில் உள்ள தேர்வு முறை போல பிளஸ்-1 தேர்விலும் பின்பற்றப்படும்.

    மதிப்பெண் 100 ஆக குறைக்கப்படும் போது மாணவ - மாணவிகளுக்கு மன அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.

    மார்க்குகள் பாதியாக குறைக்கப்படுவது போல தேர்வு நேரத்தையும் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பிளஸ்-2 தேர்வு நேரம் 3 மணி என்பது 2½ மணி நேரமாக குறைக்கப்பட இருக்கிறது.



    மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய இரண்டு வகுப்புகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும் பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

    கல்லூரிகளில் 3 ஆண்டுகளில் மதிப்பெண்ணை சேர்த்து ஒரே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதே முறையை மேல்நிலைப் பள்ளிகளில் பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளில் உள்ள மார்க்குகள் கணக்கிடப்பட்டு ஒரே மதிப்பெண் சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான அரசாணை இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தெரிகிறது. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதே போல தமிழக அரசின் பாடத்திட்டத்திலும் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

    அரசு பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சீருடை முறையை கொண்டு வரவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×