search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கி.வீரமணி
    X
    கி.வீரமணி

    பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தி.க. தீவிர பிரசாரம்- கி.வீரமணி பேட்டி

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது கொள்கை திட்டங்களை அடிப்படையாக கொண்டது என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் மாநில உரிமையை எல்லாம் மத்திய அரசுக்கு அடகு வைத்துவிட்டு, சமூக நீதி சட்டங்களை எல்லாம் குழி தோண்டி புதைத்திருக்கிற சூழலில் இப்படி ஒரு ஆட்சி கொடுமை அ.தி.மு.க. தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது.

    தி.மு.க. கூட்டணி என்பது முற்போக்கு கூட்டணி மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு விடுதலை தரக்கூடிய கூட்டணி என்பதோடு, அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.வுக்கு ஒரு நல்ல தோல்வியை கொடுத்து, அதன் மூலம் மீட்க கூடிய நல்ல வாய்ப்புள்ள கூட்டணி.

    அந்த தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி, மாறாக எதிர்கூட்டணி என்பது கொள்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை வெளிப்படையாக கூறும் கூட்டணி. எனவே திராவிடர் கழகம் தி.மு.க. கூட்டணிக்கு பிரசாரத்தை வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் 4-ம் தேதி வரை என்னுடைய தலைமையில் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். திருவாரூரில் பிரசாரத்தை முதலில் தொடங்க உள்ளோம்.குறிப்பாக எங்களுடைய இலக்கு எங்கெல்லாம் பா.ஜ.க. போட்டியிடுகிறதோ அங்கு தீவிரமான பிரசாரத்தை செய்ய உள்ளோம். அங்கு பா.ஜ.க. காலுன்ற முடியாது, காரணம் இது பெரியார் மண், சமூக நீதி மண், இந்த மண்ணில் மதவெறி காலுன்ற முடியாது என்பதை எடுத்துகூறி பிரசாரம் செய்ய உள்ளோம்.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது கொள்கை திட்டங்களை அடிப்படையாக கொண்டது. எப்போதும், இந்தியாவுக்கு கதாநாயகனாக திகழக்கூடியதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும், அது இப்போதும் உள்ளது. தி.மு.க. வரும் தேர்தலில் உறுதியாக ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது தெரிந்த ஒன்று.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியும் அதே போல் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மட்டுமே தான். மற்ற கூட்டணி எல்லாம் பொருட்படுத்த வேண்டிய கூட்டணி இல்லை. அது கூட்டணி என்பதை விட கூட்டு அணி என்று தான் சொல்ல வேண்டும்.

    பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு என்று கூறப்பட்டுள்ளதால், நீட் தேர்வு எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறிவோம். இப்போது நர்சிங் தேர்விலும் அவை வந்துள்ளது மிகப்பெரிய கேடு. ஆகவே தான், இந்த ஆட்சி ஏன் ஒழிக்கப்பட வேண்டும், தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர்களே காரணங்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×