என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
- தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி:
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரெயில்நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் இந்தியை எதிர்த்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தும் பொள்ளாச்சியில் ஆட்டுக்குட்டியை ஊர்வலமாக அழைத்து வந்து தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டுக்குட்டிக்கு வாழைப்பழம் வழங்கி போராட்டம் நடத்தினர்.
தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்துக்கு தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல்செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசபை துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23-ந்தேதி 13 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். நள்ளிரவில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து மீனவர்களின் விசைப்படகை மடக்கிப்பிடித்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 13 மீனவர்களையும் கைது செய்தது.
இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த ஜனவரி 26ந்தேதி 14 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் கடலுக்குச்சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடலோர காவல்படையின் ரோந்து கப்பல், ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 14 மீனவர்களையும் கைதுசெய்து, அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 14 பேரையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களை கண்டித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் மீனவர்கள் 27 பேரும், விடுவிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உடனடியாக தூதரக அதிகாரிகள், மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 27 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்களை, தூதரக அதிகாரிகள் வழங்கினர். அதோடு மீனவர்களுக்கு விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தனர்.
இதை அடுத்து நேற்று இரவு, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 27 மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம், மீனவர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை.
- ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை.
தருமபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதன் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன். அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது.
சில பேர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசான வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, இளமையான காலத்தையெல்லாம் சொகுசாக கழித்து விட்டு, தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் ஊர் ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊர் ஊராய் போய் கொடி ஏற்றவேண்டியதில்லை. ஊர் ஊராய் சென்று மக்களை சந்திக்க வேண்டியது இல்லை. உடனே கட்சியை தொடங்கலாம்.. அடுத்து ஆட்சிக்கு போகலாம் என்று கூறினார்.
திருமாவளவன் தொடர்பான இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து கருத்து கூறும் அரசியல் நிபுணர்கள், திருமாவளவன் குறிப்பிடுவது கமல்ஹாசன் தான் என்று கருதுகிறார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சு கமல்ஹாசனை தொடர்புப்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன்.
- நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பூமி சமுத்திரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியான 3 பேர் குடும்பத்தினர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:-
1990 இல் இந்த இயக்கத்தினுடைய தலைவராக நான் பொறுப்பேற்றேன். அதன் பின் 35 ஆண்டு காலம் எனது இளமையை இழந்தேன், வாழ்க்கையை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், உறவுகளை இழந்தேன். ஆனால் இவற்றையெல்லாம் இழந்து இந்த இயக்கத்திற்காக நான் கடுமையாக உழைத்தேன்.
அதன் விளைவாக தான் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்று இருக்கிறது. இதை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதேபோல் பத்திரிகையாளர்கள் என்னை அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் முதல்வர் ஆகுவேன் என்று கூறுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்வேன். புதுசு புதுசா வந்தவர்கள், இந்த நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்காதவர்கள்.
திடீரென வந்தவர்கள் எல்லாம் தாங்கள் முதலமைச்சராக வருவோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
முதலமைச்சர் பதவி என்பது மக்களால் வழங்கக்கூடிய பதவி. ஆனால் இவர்களாகவே முதலமைச்சராக வருவோம் என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கட்டுக்கோப்பாகவும், கடுமையாகவும் கட்சி பணியாற்றினால் கோட்டை சிறுத்தைகள் வசமாகும். அதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த குடும்ப உறவினர்களை இங்கு பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் கதறி கண்ணீர் விட்டு என்னிடம் அழுதார்கள்.
இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஆனால் ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் ஆறுதல் கூறுவதற்கு வெறுங்கையோடு வரவில்லை. நான் முடிந்த அளவு நிதியை கொடுத்து ஆறுதல் கூறியிருக்கிறேன்.
எவ்வளவு லட்சங்கள் கொடுத்தாலும் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. ஆனால் அந்த துயரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கெடுத்து ஆறுதலாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார்.
- 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 100 ஆண்டுகளாக சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு அதில் பனைவெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டியை பயன்படுத்தாமல் வெறும் கையால் அப்பத்தை எடுத்தது சுற்றி நின்றிருந்த ஏராளமான பக்தர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
மேலும் கொதிக்கும் நெய்யை எடுத்து இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றியில் பூசி விட்டு அப்பத்தை பிரசாதமாக வழங்கினர்.
இன்று அதிகாலை வரை நடந்த இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்திருந்தனர்.
மகா சிவராத்திரி அன்று முத்தம்மாள் என்ற மூதாட்டி கடந்த 52 ஆண்டுகளாக அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர், விலை குறைவதும், ஏறுவதுமாக விற்பனையாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,010-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-02-2025- ஒரு கிராம் ரூ.106
25-02-2025- ஒரு கிராம் ரூ.108
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
22-02-2025- ஒரு கிராம் ரூ.108
- 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- அதிகாலை முதல் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
குறிப்பாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி மாசி மாத அமாவாசையான இன்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்து புனித நீராடி பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி திருவிழாவில் இன்று காலை சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் எழுந்தருளினர். மாலையில் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
- தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்வது பற்றி நிர்வாகிகளிடம் சீமான் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார்.
- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வரும் சீமான் இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தல்களையுமே தனித்தே சந்தித்துள்ளார்.
சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போதிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்தை தாண்டி ஓட்டுகளை வாங்கியது. இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது போன்ற சூழலில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகிறார்கள். இப்படி கட்சி நிர்வாகிகள் விலகிச் செல்வது குறித்து கருத்து தெரிவித்த சீமான், கட்சியில் இருப்பதும் விலகி செல்வதும் அவரவர்களின் விருப்பம். இது நாம் தமிழர் கட்சிக்கு களையுதிர்காலம் என்று தெரிவித்தார்.
இப்படி தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகள் விலகிச் சென்ற போதிலும் அதுபற்றி கவலைப்படாமல் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு சீமான் தயாராகி வருகிறார்.
கடந்த 3 மாதங்களாக தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்வது பற்றி நிர்வாகிகளிடம் சீமான் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளார். இன்னும் சில நாட்களில் 2-ம் கட்ட சுற்று பயணத்தை அவர் தொடங்க இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும் போது, கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்களால் நிச்சயம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைய போவதில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும். அதற்கேற்ப கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களமிறங்குகிறார். ஏற்கனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் சார்பில் தனித் தனியாக கூட்டணி அமைந்துள்ளது. இளைஞர்களின் வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக அளவில் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரிய சவாலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
- அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களால் பொது போக்குவரத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுவது மின்சார ரெயில்களே. அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு மின்சார ரெயில்களில் பயணம் செய்து பணிக்கு சென்று வருகின்றனர்.
மின்சார ரெயில்களால் பெரும்பாலும் நன்மை அடையும் மக்களுக்கு சில சமயங்களில் அசவுகரியங்களும் ஏற்படுகிறது.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் சீரமைப்பு பணி காரணமாக காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- மத்திய அரசு திணிக்க முயற்சிக்கும் இந்தி மொழியின் முகமூடியில் சமஸ்கிருத முகம் ஒளிந்திருக்கிறது.
- வடமாநிலங்களை போல் தாய்மொழியை புறக்கணித்து சமஸ்கிருத மயமாக்கும் திட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உங்களில் ஒருவன் என்ற கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியைப் படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்று தி.மு.க. பயப்படுகிறதா எனக்கேட்கின்ற ஓரு கூட்டத்தார் இன்று நேற்றல்ல, பெரியார் முன்னெடுத்த 1937-39 மொழிப் போராட்டத்தின் போதும் இருந்தனர். இதே கேள்வியை அப்போதும் கேட்டனர். இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி.
கீழடி அகழாய்வுகள் மூலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துகளைக் கண்டறிந்திருக்கிறோம். மாங்குளம், மயிலாடும் பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளில் கிடைத்த இரும்புப் பொருட்களை நவீன அறிவியல் தொழில் நுட்பமான கதிரியக்கக் கரிம காலக் கணிப்புகள் மற்றும் தூண்டொளி காலக் கணிப்புகளுக்கு உட்படுத்தியதன் விளைவாக, தமிழர்கள் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்திறன் பெற்றிருந்தனர் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க தமிழ்மொழியை இந்தி மொழியாலோ, இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாகத் திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒரு போதும் அழிக்க முடியாது.
பிறகு எதற்காக அவற்றை நாம் எதிர்க்கிறோம்? அதற்கான காரணத்தைத் தந்தை பெரியார் அன்றே சொன்னார். "இந்தியால் தமிழ் அழியாது. ஆனால், தமிழ்ப் பண்பாடு அழிந்து போகும். இன்று வேலைக்காரியாக வரும் இந்தி, நாளை தமிழ் நாட்டரசி ஆவது நிச்சயம்" என்று எச்சரித்தார். ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி மீது தாக்குதல் நடத்தி, பண்பாட்டை சிதைக்க வேண்டும் என்பதை பாசிச எண்ணம் கொண்டோர் கடைப்பிடித்தார்கள்.
அண்மையில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இந்தியா மீதான முந்தைய படையெடுப்புகள் குறித்துப் பேசியபோது, "ஒரு மாநிலத்தைக் காக்க கைப்பற்ற வேண்டும் என்றால், அதன் கலாச்சாரத்தை கையில் எடுப்பதும், மொழியை அழிப்பதுமே சிறந்த வழி" என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.
தமிழர்களின் கலாச்சாரத்தை தனித்துவமானப் பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப்பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது. இந்த நெடிய தமிழ்ப் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி தான் திராவிட இயக்கம்.
தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் எனும் கோட்டைக்குள் ஓட்டை போட்டு நுழைய நினைக்கும் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை அன்று முதல் இன்று வரை தடுத்து விரட்டும் காவலர்களாகத் திராவிட இயக்கத்தினர் திகழ்கின்றனர். ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய்மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை, இந்தி பரவிய நிலப்பரப் பெங்கும் காண முடியும்.
இந்தி மொழியை ஏற்றுக்கொண்ட பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைத்திலி, அந்த மாநிலத்தின் அடுத்தடுத்த தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. அண்மைக்காலமாகத்தான் மைத்திலி மொழி பேசும் மக்கள் மெல்ல விழிப்புணர்வு பெற்று, தாய்மொழியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இந்திதான் அந்த மாநிலத்தின் தாய்மொழி எனப் பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல.
வடமேற்கு உத்தரபிரதேச மக்களின் மொழி பிரஜ்பாஷா, தென்மேற்கு உத்தர பிரதேசத்தின் தாய்மொழி புந்தேல்கண்டி. வடகிழக்கு உத்தரபிரதேசத்தின் சொந்த மொழி போஜ்புரி. மத்திய உத்தர பிரதேசத்தின் உள்பகுதிகளில் பேசப்பட்டு வந்த மொழி ஆவ்தி. அத்துடன், கண்ணோஜி என்ற மொழியும் இப்பகுதியில் வழக்கில் இருந்தது.
உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான உத்தரகாண்டில் வாழும் மக்களின் பூர்வீக மொழி கடுவாலி மற்றும் குமோனி. மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்துவிட்டது. போஜ் புரி, ஆவ்தி போன்ற மொழிகள் பெரும் அவதிகளுக்கிடையே இப்போதுதான் மெல்லத் துளிர்க்கின்றன.
இவை மட்டுமா? ஹரி யாண்வி, ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி, மால்வி, நிமதி, பகேலி, ஜார்கன்ஷி, சந்த்தலி, சட்டீஸ்கரி, கோர்பா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரைத் தேட வேண்டியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், ஜார்கண்ட், சத்திஸ்கர், அரியானா, ராஜஸ்தான் என இந்தியை ஆட்சிமொழியாகக் கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில், அந்த மொழி பேசும் மக்களின் பண்பாட்டு விழுமியங்களும், இலக்கியச் செழுமைகளும், மரபார்ந்த அறிவுத்திறனும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன.
வடஇந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட அந்தந்த மண்ணின் தாய்மொழிகளை கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இந்தி-, சமஸ்கிருதம் எனும் ஆதிக்க மொழிகளின் படையெடுப்பு சிதைத்திருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த திராவிட இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வினாலும், அதன் தொடர்ச்சியானப் போராட்டத்தினாலும் நம்தாய்த் தமிழ் மொழி காப்பாற்றப்பட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
இதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை உணர்ந்திருப்பதால்தான் தமிழ்நாடு எதிர்க்கிறது.
என்றும் தமிழைக் காத்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன. கழகத்தை அரசியல் களத்தில் எப்போதும் எதிர்க்கும் கட்சிகளும்கூட இந்தித் திணிப்பு கூடாது என்கின்றன.
தமிழ் மண்ணிற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத; தமிழர்களின் பண்பாட்டிற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க.வும் அதன் கூலிப்படையினரும் மட்டும், தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டத்தை ஆதரித்தபடியே, "இந்தி-சமஸ்கிருதம் என்று எங்கே இருக்கிறது? மூன்றாவது மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். அயல்நாட்டு மொழிகளைக் கூடக் கற்கலாம்" என்று ஒரு 'தினுசாக'ப் பேசுகிறார்கள்.
மும்மொழித்திட்டம் என்ற பெயரில் என்னென்ன மொழிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என அட்டவணையைப் பார்த்தால் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. தமிழர்கள் வாழும் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தவிர வேறெங்கும் தமிழ் மொழி இடம் பெறவில்லை. இதுவும்கூட எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உருது ஆசிரியர்களுக்குப் பதில் சமஸ்கிருத ஆசிரியர்களை நியமிக்கும் மொழிப் பாசிசம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், வடமாநிலங்களைப் போலத் தாய் மொழியை முற்றிலும் புறக்கணித்து சமஸ்கிருதமயமாக்கும் திட்டம்தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்.
தேசிய கல்விக் கொள்கை 2020ன் 4.17வது பிரிவு, "இந்தியஅரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள செம்மொழியான சமஸ்கிருதம் இலக்கியம், கணிதம், அறிவியல், மருத்துவம், தத்துவம், இசை, அரசியல் இன்ன பிற உள்ளிட்ட பல்வேறு கலைச்செல்வங்களைக் கொண்டுள்ளது, இதனால் சமஸ்கிருத மொழி பள்ளிகளிலும், உயர்கல்வியிலும் அனைத்து நிலைகளிலும் மும்மொழித் திட்டத்தில் ஒன்றாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே, மூத்த மொழியான தமிழ் மற்றும் இந்தியாவின் பிற மொழிகள் பற்றி 4.18வது பிரிவில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
அதுவும், சமஸ்கிருதத்துடன் கூடுதலாக தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்கு ஆன்லைன் முறையில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுஉள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தைத் திணிக்கவும், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளைப் புறங்கையால் ஓரங்கட்டவும் திட்டமிட்டே மத்திய பா.ஜ.க. அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதன் வழியாகமும் மொழித் திட்டத்தையும் நம் மீது திணிக்கிறது என்பது தெளிவாகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி. அந்தந்த மாநில மொழிகளைக் கற்பதற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற பட்டியலைக் கோரியதுடன், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திடம் ஏதேனும் விவரம் உள்ளதா? என்றும் எழுப்பிய கேள்விகளுக்கு, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழிகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், 15 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களின் மாநில மொழியைக் கற்க விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுதான் பா.ஜ.க அரசின் தமிழ் மீதான அக்கறை. இவர்கள்தான் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தேசியக் கல்விக் கொள்கையின்மும்மொழித் திட்டம் மூலம் தமிழைக் கற்றுத் தரப் போகிறார்களாம். அதனால், தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டுமாம்.
தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைத்து, சமஸ்கிருதம், இந்தி மொழிகள் மூலம் ஆரியப் பண்பாட்டைத் திணிக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு இந்த மண்ணில் இடம் கிடையாது என்கிற வகையில்அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை சட்டமாக்கினார் பேரறிஞர் அண்ணா. அந்த வரலாற்றுப் பக்கத்தைப் புரட் டினால் தான் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களின் வஞ்சகத்தை இளைய தலைமுறை புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- சாமி தரிசனம் செய்ய அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
சென்னை:
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் (முதல் ஜாமம் பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9மணி வரை-இரண்டாம் ஜாமம் பூஜை இரவு 9 மணி முதல் 12 மணி வரை-மூன்றாம் ஜாமம் பூஜை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை-நான்காம் ஜாமம் பூஜை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை) 4 கால பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேக பொருட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜாமத்திலும் அபிஷேகங்கள் செய்யப்படும். விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை பட்டீஸ்வர சாமி கோவில், நெல்லையப்பர் கோவில், ஸ்ரீரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விடிய விடிய நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அனைத்துக் கோவில்களிலும் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள்.
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,"ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா" போன்று நடைபெறுகிறது எனப் புகழாரம் சூட்டினார்.

இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-
சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.
இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
பிராயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது.
ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.
இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.
நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் "ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிற ஞானி" என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்கள்.

சத்குரு மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின்போது அவரோடு நானிருந்தேன். சத்குரு உங்களை பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன். நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார்.
அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி.
தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. சத்குருவின் மகா சிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்வு.
சத்குரு இந்த மகா சிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசினார். இதில் அவர்," நம்முடைய உள்துறை அமைச்சர் ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்திருக்கார்.
காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். ஆர்டிக்கிள் 370 நீக்கம் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள்.
நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனிக்கவில்லை என்றால், கல்வி, தொழிநுட்பம், ஆன்மீகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் வீணாகிப் போகும். நம் மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு நன்றி.
இன்று மகா சிவராத்திரி எந்த ஜாதி, மதம், பாலினத்தவராக இருந்தாலும் உயிர் சக்தி மேல் எழுவதற்கான நாள். ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்னிடம் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மஹாசிவராத்திரிக்கு வரலாமா எனக் கேட்டார், அதற்கு நான் கூறியது முஸ்லீம், கிறிஸ்துவர்கள் குறிப்பாக இந்துக்கள் யாரும் வர முடியாது.
மனிதர்கள் மட்டுமே மஹாசிவராத்திரிக்கு வர முடியும் என பதிலளித்தேன். இது மனித குலத்திற்கான கொண்டாட்டம். நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால் ஆதியோகி உங்களுக்கானவர். ஆதியோகி வருங்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறார். ஆதியோகி நாட்டின் பல்வேறு இடங்களில் வர உள்ளார்" என்றார்.
மேலும், ஆதியோகி முன்பு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருந்த கயிலாய மலை போன்ற அரங்கமைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மிராக்கிள் ஆப் தி மைண்ட் செயலியை சத்குரு வெளியிட்டார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகில் 300 கோடி மக்களை தியானத்தில் ஈடுபடுத்தினால் உலகளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்.
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நள்ளிரவு சந்தியா கால நேரத்தில் சத்குரு திருவைந்தெழுத்து மஹா மந்திர தீட்சையினை வழங்கி சக்திமிக்க தியானங்களை வழி நடத்தினார்.

ஈஷா யோக மையத்திற்கு மாலை வந்தடைந்த அமித் ஷா அவர்களை சத்குரு சூர்ய குண்ட மண்டபம், நாகா சன்னதி, லிங்க பைரவி சன்னதி மற்றும் தியானலிங்கம் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்ய அழைத்து சென்றார். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத கிரியாவிலும் அமித் ஷா அவர்கள் கலந்து கொண்டார்.
ஈஷா புராஜக்ட் சமஸ்கிருதி குழுவினரின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் மக்களை இரவு முழுவதும் விழிப்புடன் வைத்திருந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் ஆகியோர் பங்கேற்றனர்.






