என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பா.ஜ.க.வை நேரடியாக வரவேற்று கூட்டணி வைத்து அ.தி.மு.க. வலுவிழந்துவிட்டது.
- பா.ஜ.க.வை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய்.
சேலம்:
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதல் மாநில கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2026-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்பது உறுதி. கட்சியின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சேலத்தில் மாபெரும் வெற்றி கூட்டமாக அமைந்துள்ளது. சேலத்தில் சாக்கடை கால்வாய், சாலை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனை ஆளுங்கட்சியினர் செய்து கொடுக்க மாட்டார்கள். 2026-ல் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைந்தவுடன் முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றவுடன் நிச்சயம் செய்து கொடுப்பார் என்றார்.
இதையடுத்து பேசிய த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா,
தி.மு.க.வின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்கிறது. பா.ஜ.க.வை நேரடியாக வரவேற்று கூட்டணி வைத்து அ.தி.மு.க. வலுவிழந்துவிட்டது. நாங்கள் ஏன் அ.தி.மு.க.வை எதிர்க்கவில்லை என்றால், அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தொண்டர்கள் த.வெ.க.வில் எப்போதும் இணைந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். எந்த குறிக்கோளோடு ஆரம்பித்தாரோ, ஜெயலலிதா அம்மா எந்த குறிக்கோளோடு அ.தி.மு.க.வை மீட்டு எடுத்தார்களோ... அந்த குறிக்கோளின் ஒற்றை நம்பிக்கை இன்றைக்கு நம்முடைய தலைவர் விஜய் மட்டும்தான். இந்த கொள்கையற்ற அரசியலால்தான் தி.மு.க. இன்றைக்கு சுலபமாக கடைசி 3 தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் இனி வெற்றி பெற முடியாது. ஏன் என்றால் உங்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்கள் பா.ஜ.க.விடம் சரணடைந்த தலைவர்கள் அல்ல. பா.ஜ.க.வை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய். இஸ்லாமிய தோழர்களே.. எங்களுக்கு குர்ஆனும் ஒரு கடவுளோடு நம்பிக்கைத்தான். குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம்.... எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் எங்களுக்கு கூட்டணி கிடையாது... உறவு கிடையாது என்பதை அழுத்தமாக இந்த சேலம் மாநாட்டில் உறுதியுடன் கூறுகிறோம் என்றார்.
- 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது
- QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.
ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " மெட்ரோ இரயில் நிலையங்களில் CMRL பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC Card - சிங்கார சென்னை அட்டை) மாற்றப்படவுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க CMRL பயணஅட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.
பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
- பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்
- ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்துள்ள கள்ளிப்பட்டி காந்திசிலை அருகே பங்களாபுதூர் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் வாகனத்தின் உள்ளே ஏராளமான ஆற்று மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து மணல் கடத்தி வந்த வேன் மற்றும் அதில் வந்த நான்கு பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கள்ளிப்பட்டி அடசப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன்(35) ,கணக்கம்பாளையம் புதுகாலனியை சேர்ந்த சுரேந்திரன்(45), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிக்குமார்( 28), அடசப்பாளையத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(21) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் நான்குபேரும், கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் மீன்பிடிப்பதற்காக செல்வதுபோல இரவு நேரத்தில் பரிசலுடன் சென்று ஆற்றில் உள்ள மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்து அதை மூட்டைகளாக கட்டி வாகனத்தில் கடத்தி சென்றதும், அதை ஒரு மூட்டை மணல் 120 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.
மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ,75 மணல் மூட்டைகளுடன் ஆற்றில் மணல் அள்ளப்பயன்படுத்திய பரிசல் மற்றும் ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பங்களாபுதூர் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல் சம்பவத்தில் கைதாகியுள்ள சந்திரசேகரன் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், இவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து பவானி ஆற்றில் மீன் பிடிப்பதாக கூறி பரிசலில் மணலை அள்ளி வந்து மூட்டைகளாக கட்டி விற்பனை செய்து வருவதாகவும் தெரியவருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக திருடி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன.
அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் நின்று குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனையானது.
- நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,440-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,285 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74,280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440
20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
18-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,880
17-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-07-2025- ஒரு கிராம் ரூ.126
20-07-2025- ஒரு கிராம் ரூ.126
19-07-2025- ஒரு கிராம் ரூ.126
18-07-2025- ஒரு கிராம் ரூ.125
17-07-2025- ஒரு கிராம் ரூ.124
- ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.
- ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.
தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு 5 இடங்களை தேர்வு செய்து நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள 5 இடங்களில் விமான நிலைய ஆணையம் விரைவில் ஆய்வு செய்து இடத்தை முடிவு செய்ய உள்ளது.
- வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை:
தமிழகம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இதன்படி வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே நாளை (புதன்கிழமை) அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்திற்கும், வருகிற 24-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
- இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான்.
- இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் 'அவரும், நானும்' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர், புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி 'அவரும், நானும்' புத்தகத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் 2-ம் பாகத்தை கடந்த 19-ந்தேதி அன்று வெளியிடுவதற்கு துர்கா ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்தார். அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க.முத்து மரணம் அடைந்ததால் இந்த விழா நேற்று ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் இந்த விழா திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவை ஒத்திவைக்காமல் நடத்த வேண்டும் என்று துர்கா ஸ்டாலினிடம் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' 2-ம் பாகம் புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

2-ம் பாகத்தின் முதல் பிரதியை எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட்டார். அதனை 'டாபே' குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதியை துர்கா ஸ்டாலினின் பேரன்கள் இன்பநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா, நிலானி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மேல் முறையீட்டு ஆணைய தலைவருமான பவானி சுப்பராயன், கோவை சந்திரா, ஜி.ஆர்.ஜி.நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
துர்கா ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:-
பத்திரிகையில் வெளிவந்த 2 பாகங்களுக்கு பிறகு, என்னுடைய கணவர் முதலமைச்சரான பிறகான நிகழ்வுகளை புதிய அத்தியாயங்களாக இதில் சேர்த்துள்ளோம்.
இந்த நூல் உருவான வகையில் நான் மீண்டும் நன்றி சொல்ல வேண்டியது என் கணவருக்குதான். மனப்பூர்வமாக, முழுமையாக எனக்கு ஆதரவு அளித்து, 'நீ எழுது துர்கா' என சொல்லி உற்சாகப்படுத்திய எனது கணவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த நூல் என் கணவர் பற்றியும், என்னை பற்றியும், எங்கள் 50 ஆண்டுகால வாழ்க்கை பற்றியும் என்னுடைய பார்வையில் சொல்லும் நூல்.
சிறப்பாக விழா நடக்கட்டும் என என்னை வாழ்த்தி அனுப்பியதே, மருத்துவமனையில் இருந்து விழாவை பார்த்துக்கொண்டு இருக்கும் என் கணவர் தான்.
எப்போதும் என்னுடைய கணவர் உங்களில் ஒருவன் நான் என்று சொல்லுவார். நூலும் அதே தலைப்பில் வெளியிட்டார். அதேபோல், நானும் உங்களில் ஒருத்தியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. வரவேற்று பேசினார். 'உயிர்மை' நிர்வாக ஆசிரியர் செல்வி ராமச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்களும், தி.மு.க. வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், நக்கீரன் கோபால், கிருத்திகா உதயநிதி, லோகநாயகி, புத்தகத்தின் பதிப்பாளர் கவிஞர் மனுஷ்ய புத்திரன் மற்றும் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வரிசையாக வந்து துர்கா ஸ்டாலினிடம் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
- அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும்.
- தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
2026 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும். கட்சியினரை குஷிப்படுத்த கூட்டணி ஆட்சி என்று பேசுவதை எல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
அடுத்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும். தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
சீமான், விஜய் தரப்புடன் கூட்டணி தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆனால் தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒத்த மனமுடைய அனைத்து கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைய வேண்டும். அந்த வகையில், விஜய், சீமான் தரப்பும் அடங்கும் என்றார்.
இதனிடையே, பா.ஜ.க. கூட்டணி உடையுமா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உடைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று கூறினார்.
- தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதலமைச்சருக்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
- முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், வழக்கம் போல் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்றார்.
அங்கு தி.மு.க.வில் இணைய வந்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை இன்முகத்துடன் வரவேற்றார்.
அதன் பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவாலயம் வந்திருந்தார். அவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் கொளத்தூர் தொகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு உட லில் வியர்க்க தொடங்கியது. சோர்வாகவும் காணப்பட்டார்.
இதனால் உடனே ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போகுமாறு கூறினார். உடனே அவரது கார் 'கான்வாய்' அப்பல்லோ ஆஸ்பத்திரி நோக்கி சென்றது.
அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றதும் நேற்று காலை 10.40 மணியளவில் அவருக்கு டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் பெரிய அளவில் அவருக்கு பிரச்சனை ஏதும் இருப்பதாக கண்டறியப்படவில்லை. 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் முதலமைச்சரின் நேற்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் திருப்பூர், கோவை செல்ல இருந்த பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்து விட்டு சென்றனர்.
அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்களும் ஆஸ்பத்திரிக்கு பார்க்க சென்றனர். அப்போது துரைமுருகன் கூறுகையில், 'முதலமைச்சர் நலமாக இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று முழுவதும் ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று காலை 7 மணியளவில் அருகில் உள்ள தேனாம் பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சில மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
'முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் மீண்டும் ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு காலை 9.30 மணியளவில் திரும்பினார். அங்கு முதலமைச்சர் 2 நாட்கள் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு செல்கின்றனர்.
- ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
- இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.
அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- சர்தார் படேல் ரோடு, தரமணி, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4 -வது தெரு வரை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
தரமணி: வி.எச்.எஸ். மருத்துவமனை, சர்தார் படேல் ரோடு, தரமணி, ஸ்ரீராம்நகர் 1 முதல் 4 -வது தெரு வரை, பள்ளிபேட்டை, ஸ்ரீராம்நகர் மெயின் ரோடு மற்றும் காலனி, பள்ளிபேட்டை மெயின் ரோடு, பஜனை கோவில் தெரு, யோகி தோட்டம், புதிய தெரு, கந்தசாமி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சிறுசேரி: சிறுசேரி சிப்காட் நவலூர், தாழம்பூர் பகுதி, சிறுசேரி மற்றம் காரணை கிராமம், ஏகாட்டூர், ஓஎம்ஆர் நாவலூர், படுபாக்கம், எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சாந்தியா கார்டன் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.






