என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் கேட்டு பெறவும் முடிவு செய்யப்படுகிறது.
- தனி சின்னத்தில் நிற்பதா? பா.ஜனதா சின்னத்தில் நிற்பதா? அவற்றின் சாதக-பாதகம் குறித்து பேசுகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதாவுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திக்கிறது. கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் பணிகளை அ.தி.மு.க. தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ். அணி இதுவரையில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விருப்ப மனுக்களும் பெறப்படவில்லை.
இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எழும்பூரில் நடக்கும் கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் எந்த தேதியில் இருந்து பெறுவது என முடிவு செய்யப்படுகிறது.
கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு தொகுதிகள் கேட்டு பெறவும் முடிவு செய்யப்படுகிறது. தனி சின்னத்தில் நிற்பதா? பா.ஜனதா சின்னத்தில் நிற்பதா? அவற்றின் சாதக-பாதகம் குறித்து பேசுகிறார்கள்.
பா.ஜனதா கூட்டணியில் புதிதாக இடம் பெறும் கட்சிகள் குறித்த முடிவு தாமதம் ஆவதால் தொகுதிகள் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் குறைந்தது 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
- ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர்.
- ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி:
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் யுவராஜ் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்திற்காக தனது மனைவி சத்யா (35) மகன்கள் பிரகதீஸ்வரன் (11), அரிப்பிரசாத் (7) மற்றும் உறவினர்களுடன் சென்றார்.
திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு, யுவராஜின் உறவினரான சென்னை குன்றத்துரை சேர்ந்த கலிவரதன் மகன் உத்தரகுமார் (30), அவரது மனைவி உறவினர்கள் என மொத்தம் 9 பேர் சென்னை செல்ல திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டனர். வீடு திரும்பும் வழியில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புலி வந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டனர். இதனை தொடர்ந்து யுவராஜின் மாமியார் வீடு உள்ள கப்பை கிராமத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் கப்பை கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு திருப்பத்தில் வந்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர். இதில் ஒரு சிலர் பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளை பிடித்து வந்து மேலே ஏறி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, மீதம் இருந்தவர்களை கிணற்றில் இருந்து மீட்டு அவர்களை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் யுவராஜின் 2 குழந்தைகளை மீட்க முடியாததால், செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கி இறந்த 2 குழந்தைகளின் உடலை மீட்டனர். தொடர்ந்து அங்கு வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கிணற்றில் மூழ்கி இறந்த பிரகதீஸ்வரன், அரிபிரசாத் ஆகியோரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ், அவரது மனைவி சத்யா, உத்தரகுமார், அவரது மனைவி பொன்னி (20), மற்றும் உறவினர்களான பாஞ்சாலி (50), அம்மச்சி (50), அம்மச்சியின் மகன் ஆகாஷ் (18) ஆகிய 7 பேரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, குலதெய்வம் கோவிலில் வழிபட்டு வீடு திரும்பிய போது, ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன.
- ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.
வால்பாறை:
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை மாவட்டம் ஆனைமலையிலும் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு அ.தி.மு.க.வினர் தயாராகி வந்தனர்.
இதற்காக ஆனைமலை முக்கோணம் பகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், முக்கோணம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் சட்டவிரோதமாக வைத்ததாக கூறி அகற்றி, போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இதற்கிடையே இன்று காலை ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆனைமலையில் இருந்து அ.தி.மு.க.வினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் முக்கோணம் பகுதிக்கு வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் அகற்றப்பட்டிருந்தன. பேனர்களை போலீசார் அகற்றியது தெரியவந்ததும், அ.தி.மு.கவினர் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி தலைமையில் ஆனைமலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அகற்றப்பட்ட பேனர்களை உடனே இங்கு வைக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டன.
இதையடுத்து அ.தி.மு.கவினர் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.வினரின் போராட்டத்தால் இந்த பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம்.
- ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம்:
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.4.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 3, ஆர். ஆர்.கார்டன், பரந்தூர் சாலை கற்பூரம் கம்பெனி அருகில், அங்காள பரமேஸ்வரி கோவில் பின் புறம், பொன்னேரிக்கரை, காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ந்தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.
- அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
- கோவில்கள் மக்களிடம் ஒப்படைக்கப்படும்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள் ' நடைபயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழக அரசின் இலவச வேஷ்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. 2019-ல் பா.ஜனதா 295 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதில் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம்.
கடந்த 2021-ல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 511 தேர்தல் வாக்குறுதியை கூறியது. அதில் 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறினார்கள். பெண்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறினார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள்.
ஆனால் எதனையுமே தி.மு.க. செய்யவில்லை. ராமர் கோவில், 370 சட்ட திருத்தம், முத்தலாக் தடை சட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் போன்ற வாக்குறுதிகளை பா.ஜனதா நிறைவேற்றி உள்ளது. 73 சதவீதம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துள்ளோம்.
அடுத்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு 33 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும். நீர் ஆதாரத்தை உயர்த்துவதற்கு காமராஜர் கொண்டு வந்த திட்டமான இரட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் ஏழை குழந்தைகளுக்காக அனைத்து மாவட்டங்களிலும் காமராஜர் பெயரில் நவோதயா பள்ளி தொடங்கப்படும்.
2026-ல் பா.ஜனதா ஆட்சி அமைத்தால் 3 வருடங்களில் மதுக்கடையை ஒழிப்போம். மதுக்கடைகளை ஒழித்து விட்டு புதிதாக கள்ளுக்கடைகளை திறப்போம். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை நீக்கப்படும். கோவில்கள் மக்களிடம் ஒப்படைக்கப்படும். கனிம வள கொள்ளை தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
- வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.
குளச்சல்:
குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.
இதில் சாளை, நெத்திலி, வௌ மீன்கள் பிடிக்கப்படுகிறது. கடலில் தொடர் சூறாவளிக்காற்று எச்சரிக்கை காரணமாக கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய பின்பு சீராக மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தற்போது குளச்சலில் மீன் பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்துள்ளது. குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றுள்ளன.
இதனால் கடந்த சில நாட்களாக குளச்சலில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது குளச்சல் கடல் பகுதியில் கேரை மீன்கள் சீசனாகும். ஆனால் ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகளில் கேரை மீன்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே கட்டுமரங்களில் பிடிக்கப்படும் சாளை, நெத்திலி போன்ற மீன்களும் கிடைக்கவில்லை. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் சாளை, நெத்திலி மீன்களை பிடிக்க செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. ஓரளவு செம்மீன் எனப்படும் கிளி மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் வைத்து ஏலமிட்டனர். ஒரு கிலோ கிளி மீன் தலா ரூ.180 வரை விலைபோனது. இதனை வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.
கிளி மீன் சீசன் தென்பட்டுள்ளது ஆறுதலாக உள்ளது. தொடர்ந்து கிடைக்குமா? என்பது போகப்போகத்தான் தெரியும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சில கேரை மீன்களும், ஒரு சில சுறா மீன், 2 திருக்கை மீன்களும் கிடைத்தன. இதனால் மீனவர்கள் ஆறுதல் அடைந்தனர்.
- தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
- அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் "தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்கிற முழக்கத்துடன் கூடிய இலச்சினை மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் ஜெயலலிதா பேசிய பிரசார ஆடியோ இன்று வெளியிடப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி அதனை வெளியிட்டார்.
பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம் என்ற முதன்மை முழக்கத்தோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், நிச்சயம் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.
விரைவில் அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும். அதனை விரைவில் அறிவிப்போம்.
எங்களிடம் மத்திய அரசின் அதிகாரமோ, மாநில அரசின் அதிகாரமோ இல்லை. எங்கள் கட்சியின் இதய தெய்வங்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நல்லாசி உள்ளது. 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் எங்களுக்கு பலமாக உள்ளனர். தமிழக மக்களும் எங்களை ஆதரிக்க தயாராகி விட்டனர்.
இன்று தொடங்கி உள்ள பிரசாரத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் முன்னெடுத்து உள்ளனர். இரவு-பகல் பாராமல் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது உழைத்து பார் போற்றும் வெற்றியை உறுதி செய்வோம்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலும் அ.தி.மு.க. சார்பில் 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றார்கள். எங்களது குரல் பாராளுமன்றத்துக்குள் வலுவாக ஒலித்தது. தமிழக நலனுக்காக எங்களது எம்.பி.க்கள் குரல் கொடுத்தார்கள்.
அப்போது 14,619 கேள்விகளை எங்கள் எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் எழுப்பி உள்ளனர். தற்போது தி.மு.க. சார்பில் உள்ள 38 எம்.பி.க்கள் 7 ஆயிரம் கேள்விகளை கேட்டு உள்ளனர். இதன் மூலம் எங்களது செயல்பாடும், அவர்களது செயல்பாடும் தெரியும்.
காவிரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் தான் அமைத்தோம். தற்போது மேகதாது விவகாரம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுபற்றி தி.மு.க. எம்.பி.க்கள் கவலைப்படவில்லை.
காவிரி மேலாண்மை ஆணையத்திலும் அவர்களால் சிறப்பான வாதத்தை எடுத்து வைக்க தெரியவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்தனர். விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால் நீட் தேர்வை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசில் தி.மு.க. அங்கும் வகித்தபோதுதான் அவர்களது ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தற்போது அதனை ஒழிக்கப் போவதாக தி.மு.க. நாடகமாடி வருகிறது.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிய பிறகும் எங்களை பற்றி தி.மு.க. அவதூறு பரப்பி வருகிறது. நாங்கள் ரகசிய உடன்பாடு செய்து உள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க.தான் ரகசிய உறவு வைத்துள்ளது. ஆட்சியில் இல்லாதபோது 'கோ பேக்' மோடி என்றார்கள். தற்போது 'வெல்கம் மோடி' என்கிறார்கள். இதன் மூலமே தெரியும் யார் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்பது.
தி.மு.க.வை பொறுத்தவரை வாக்களித்த மக்களுக்காக நன்மை எதுவும் செய்ய மாட்டார்கள். மக்களை பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. எங்களுக்கு தற்போதைய காலத்தில் எதிரிகளே இல்லை. தேர்தலில் எங்களை வெற்றி பெற செய்வதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.
எத்தனை முனை போட்டி நிலவும் என்பதை பற்றி நான் இப்போது கூற முடியாது. இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு சக்கரமாக கழன்று கொண்டு இருக்கிறது. 4 சக்கரங்கள் ஒன்றாக இருந்தால்தான் காரை ஓட்ட முடியும். இந்தியா கூட்டணி தற்போது சக்கரம் இல்லாத கார் போல உள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
- தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை கவுண்டம்பாளையம் ஜவகர்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது65). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவருக்கு விமலா(55) என்ற மனைவியும், தியா காயத்ரி(25) என்ற மகளும் உள்ளனர். தியா காயத்ரி ஐ.டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி தனது மகள் தியா காயத்ரிக்கு, வடவள்ளியை சேர்ந்த தீட்சித் என்பவருடன் திருமணம் நடந்தது. இவரும் ஐ.டி.யில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு தியா காயத்ரி தனது கணவர் தீட்சித்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே தியா காயத்ரிக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசனுக்கு, அவரது தம்பி பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அவர் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு வீட்டில் உள்ள அறையில் கணேசன், அவரது மனைவி விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.
தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், திருமணமான சில மாதங்களிலேயே தங்களது மகள் திரும்பி வந்ததால் பெற்றோர் மன வருத்தத்தில் இருந்ததும், அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததும் தெரியவந்தது.
இதற்காக அவர்கள் பேக்கரியில் சென்று கேக் வாங்கி வந்து, அதில் விஷத்தை தடவி 3 பேரும் சாப்பிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் ஏதாவது இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்குள் உள்ள அறையில் தியா காயத்ரி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு காரணமான யாரையும் சும்மா விடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள் என எழுதப்பட்டிருந்தது.
கடிதத்தை கைப்பற்றி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதத்தில் எழுதப்பட்டு உள்ள விவரங்கள் தொடர்பாக தியா காயத்ரியின் கணவரிடமும், அவரது உறவினர்களிடமும் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
திருமணம் ஆகி சில மாதங்களிலேயே தியா காயத்ரி தற்கொலை செய்துள்ளதால் அவரது மரணத்துக்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
- எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது.
- தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசுவது போன்ற இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளான தாலிக்கு தங்கம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய சாதனைகளுக்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஆதரித்தார்கள். மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தில் ஆளும் அரசும் தமிழக நலனுக்கு எதிராக உள்ளனர். எனவே தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். மக்களாலே நாம் மக்களுக்காகவே நாம்.
இவ்வாறு ஜெயலலிதா பேசியது போன்று ஆடியோ வெளியிடப்பட்டது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலை சீசன் முடிந்த நிலையில் அவர்களது வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது.
இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. அதன்படி விடுமுறைநாளான இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள், கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். சுமார் 1 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.விடம் இருந்து தட்டி பறிக்க தமிழக பாரதிய ஜனதா அதிரடி திட்டம் ஒன்றுடன் களத்தில் இறங்கி உள்ளது.
- ராமதாஸ் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக மிக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
தி.மு.க. கூட்டணிக்கு சவால் விட வேண்டும் என்றால் தங்கள் கூட்டணியில் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சியும், பிரேமலதா விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் சேர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்காக அந்த 2 கட்சிகளுடனும் பா.ஜ.க. தலைவர்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பா.ம.க. வையும், தே.மு.தி.க.வையும் நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வும் தீவிரமாக உள்ளது. அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தொடர்ந்து இந்த இரு கட்சி தலைவர்களிடமும் மாறி மாறி பேசி வருகிறார்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் தங்களிடம் தொடர்ந்து பேசுவதால் பா.ம.க., தே.மு.தி.க. இரு கட்சி தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தே.மு.தி.க.வை விட பா.ம.க.வை தங்கள் அணியில் வைத்திருக்க வேண்டும் என்பதில்தான் அ.தி.மு.க. தீவிரமாக உள்ளது. ஏனெனில் வட மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடன் இருந்தால் பல எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க அ.தி.மு.க. தலைவர்கள் சம்மதித்து உள்ளனர். குறிப்பாக பா.ம.க. கேட்கும் 8 தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க அ.தி.மு.க. முன் வந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தர்மபுரி, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட 8 தொகுதிகளை வலியுறுத்தி கேட்கிறார்கள். இதில் தர்மபுரி தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாசை களம் இறக்க முடிவு செய்தி ருப்பதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் விருதுநகர், திண்டுக்கல்லில் தங்கள் கட்சியில் உள்ள தென்மாவட்ட தலைவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க பா.ம.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதை அ.தி.மு.க. தலைமை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமியுடன் 3 பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினார்கள். அப்போது டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியை அ.தி.மு.க.விடம் இருந்து தட்டி பறிக்க தமிழக பாரதிய ஜனதா அதிரடி திட்டம் ஒன்றுடன் களத்தில் இறங்கி உள்ளது. அதன்படி பா.ம.க. வுக்கு அ.தி.மு.க. தருவதை விட கூடுதல் தொகுதிகள் தருவதாக பாரதிய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 12 எம்.பி. தொகுதிகள், 2 மேல்சபை எம்.பி. இடங்கள், ஒரு மத்திய மந்திரி பதவி ஆகியவற்றை ஒதுக்கி தருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவரிடம் பாரதிய ஜனதா மேலிடம் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. பா.ம.க.விடம் ஆசை காட்டும் வகையில் இந்த தொகுதி ஒதுக்கீட்டை பா.ஜ.க. தலைவர்கள் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்று தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேசி விட்டு இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக அ.தி.மு.க. அணியில் பா.ம.க. சேருமா? அல்லது பாரதிய ஜனதா பக்கம் செல்வார்களா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். அவரை வரவேற்று திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே வைக்கப்பட்டிருந்த பேனர்களை நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இதையறிந்த அக்கட்சி நிர்வாகிகள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பேனர்களை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






