என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர்.

    மதுரை:

    மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    இதில் மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (வயது 28) ஆகியோரும் கலந்துகொண்டனர். நண்பர்களான இவர்கள் இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

    படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்னும் சந்தேகத்தில் மதிச்சியம் காவல் துறையினர் சிலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் முடிந்ததும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதுவே மோதலாக வெடித்தது. முதலில் அவர்கள் கைளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சூழலில் மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர். அதற்குள் அங்கிருந்த பக்தர்கள் திரண்டு அந்த வாலிபர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து 2 தரப்பினரும் கூட்டத்தில் பக்தர்களோடு கலந்து பிரிந்து சென்றனர்.

    திருவிழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அழகர், கருப்பசாமி உள்ளிட்ட வேடமிட்டு கள்ளழகருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆளுயர திரி, அரிவாள், கத்தி போன்ற வடிவமைக்கப்பட்ட ஒப்பனைகளோடு தீர்த்த வாரியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் நிஜ பட்டாக்கத்தியுடன் திருவிழா கூட்டத்தில் புகுந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த இடத்தில் வாலிபர் கொலை மற்றும் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    ஊட்டி:

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தின் எல்லை மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்ட எல்லையிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள பிறப்பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிர கண்காணிப்பு செய்ய கக்கனல்லா, நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்ட வயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும், மனிதரையும் தாக்கவல்லது. நோய்தாக்கிய வெளிநாடுகளில் இருந்து வரும் வனப்பறவைகள் மூலம் இந்நோய் நமது மாவட்டத்திலும் நுழைய வாய்ப்பு உள்ளது.

    பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பண்ணையாளர்கள் தவறாது கடை பிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி, முதலிய பல்வேறு இனப்பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக்கூ டாது. இதரப் பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தலை மற்றும் கொண்டை வீக்கம், கொண்டையில் நீலநிறம் பரவுதல், சோர்வு, அதிக அளவில் இறப்பு, இறந்த கோழிகளின் தசைகளில் ரத்தக்கசிவு, மூச்சுக்குழலில் அதிக சளி, அனைத்து உள் உறுப்புகள் மற்றும் கால்களின் மீது இரத்துக்கசிவு காணப்படும். பறவைக்காய்ச்சல் நோய் பாதித்த பண்ணைகளில் நோயுற்ற மற்றும் இறந்த கோழிகளை கையாளுவோருக்கு இந்நோய் சுவாசக் காற்று மூலம் பரவக் கூடும். காய்ச்சல், தொண்டைப்புண், இருமல் ஆகியவை மனிதரில் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

    நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டை உண்பதால் இந்நோய் பரவாது. பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை.

    சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.

    மேலும், தற்காலிகமாக கேரளா மாநில பிற பகுதிகளிலிருந்து கோழியினங்கள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றிவருவது மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
    • திருநங்கைகள் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதலில் உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

     மேலும், இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.

    இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    நாளை (24-ந் தேதி) சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    25-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி கள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
    • ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. வீடுகளுக்கு குழாய் மூலமும் லாரிகள் வழியாகவும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பி வருகிறது.

    இந்நிலையில் கோடை கால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையில் 12 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து தடையின்றி குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    • தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
    • தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    `பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் `சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

    இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கோவில் தேரோனது தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர் ஆகும். இந்த தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல் தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா.. சாரங்கா... பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகளிலும் வலம் வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    • ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்ட கடவூர் தே.மு.தி.க தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆல்வின் (வயது47) முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்றுமுன் தினம் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கூட்டணி கட்சியான அ.தி.மு.கவை சேர்ந்த மணிகண்டன், ஆல்வினிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த அ.தி.மு.க கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரமேஷிடம் ஆல்வின் கருத்து மோதலில் ஈடுப்பட்டார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஆல்வினை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆல்வின், கரூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக ஆல்வின் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தே.மு.தி.க ஒன்றிய செயலாள் ஆல்வின் கூறுகையில், கொலை வெறி தாக்குதல் நடத்திய அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷை போலீசார் கைது செய்ய வேண்டும். அ.தி.மு.கவினர் கூட்டணி கட்சியனர் என்றும் பாராமல் தேர்தல் முடிந்ததும் தங்கள் வேலையை காட்டி உள்ளனர்.

    இதற்கு அ.தி.மு.க தலைமை பதில் செல்லியே ஆக வேண்டும் என்றார்.

    • கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர்.
    • ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. டோல் பிரி எண் மூலமும், சி-விஜில் ஆப் மூலமும் இதுவரை புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்ததால் அன்று இரவு வரை தேர்தலுக்கான பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் செயல்பட்டனர். பொதுமக்கள் வாக்காளர்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்களை அக்குழுவினருக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தேர்தலில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதும், ஈரோடு மாவட்டத்தை ஒட்டிய கர்நாடக மாநில எல்லையான பர்கூர் மற்றும் பண்னாரி, திம்பம் சோதனை சாவடியை ஒட்டிய பகுதியில் மட்டும் தலா 3 பறக்கும் படையினர் செயல்பட்டு வருகின்றனர். மற்ற அனைத்து குழுக்களும் 20-ந் தேதி கலைக்கப்பட்டு அவரவர் பணிக்கு திரும்பினர்.

    இதனால் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை தேர்தல் பிரிவினரே நேரடியாக விசாரிக்கின்றனர். ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றதால் வாக்காளருக்கு பணம் கொடுத்தல் பணம் கொண்டு செல்லுதல் போன்ற புகார்கள் வருவது நின்றுள்ளது.

    ஆனாலும் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று வரை சி-விஜில் ஆப் மூலம் 78 புகார், கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு 170 புகார் என மொத்தம் இதுவரை 248 புகார்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது.
    • கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 54). இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது. திடீரென கொய்யாப்பழம் வெடித்து சிதறியதில் 2 ஆடுகளும் அங்கேயே இறந்துவிட்டன.

    உடனே முருகன் ஓடி போய் ஆடுகளை பார்த்தபோது அந்த கொய்யாப்பழத்தில் வெடி மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தார். இதையடுத்து முருகன் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில் வனவிலங்குகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் அவை வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் வேறு இடங்களில் ஏதேனும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று தோட்ட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன் ஆய்வு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • கிராமுக்கு ரூ.2.50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கும் பார் வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்தது.

    தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் சூழல், அமெரிக்காவில் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.

    இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தினமும் தங்கம் விலை அதிகரித்த படியே இருந்தது.

    கடந்த மார்ச் மாதம் இறுதியில் பவுன் ரூ.50 ஆயிரத்தை தாண்டியது. அதன் பின்னரும் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருந்தது.

    ரூ.52 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை பவுன் விலை தாண்டியது. தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் ஒரு நாளில் அதிகரிக்கும் விலை தொடர்ந்து அதிகமாக இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பவுனுக்கு ரூ. ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது.

    இதற்கிடையே கடந்த 19-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ. 55 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது. இது ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இதற்கிடையே நேற்று பவுன் ரூ.55 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.6,845 ஆக இருந்தது.

    இந்த நிலையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலையில் இன்று அதிரடி மாற்றம் காணப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து விலையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் மூலம் பவுன் ரூ.54 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ.145 குறைந்து ரூ.6,700 ஆக உள்ளது.

    தங்கத்தை போல வெள்ளி விலையிலும் பெரும் சரிவு காணப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.86 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை தொடர்ந்து உச்சநிலையில் இருந்ததால் ஏழை, நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தபடி இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் ஒரே நாளில் பெரும் சரிவு ஏற்பட்டு இருப்பது அவர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. வரும் நாட்களிலும் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு தனது வட்டி விகிதத்தை குறைக்காது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதனாலும் வேறு சில காரணங்களாலும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    • ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.
    • பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.

    தென்காசி:

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.

    இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் இருந்து அம்பை, கல்லிடைக்குறிச்சி, நெல்லை சந்திப்பு வழியாக சென்னைக்கு தினசரி ரெயில் இல்லை. மேலும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கும் ரெயில் வசதி கிடையாது.

    எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி வழித்தடத்தின் பிரதான கோரிக்கையான சென்னைக்கு தினசரி ரெயிலை மத்தியில் புதிய அரசு அமைந்ததும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது செங்கோட்டை-தாம்பரம் இடையே வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினமும் இயக்க வேண்டும். மேலும் மும்பை, பெங்களூரு, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    • சரத்குமாரின் 4 வயது மகன் அந்த ‘ஏர்கன்’ துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது
    • தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வேங்கிபாளையம் பாப்பான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் தமிழரசி (வயது 30). இவரது அண்ணன் சரத்குமாரின் 4 வயது மகன் வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு இச்சி மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை சுற்றி திண்ணை போன்று அமைத்து இருந்தனர். அதில் 'ஏர்கன்' துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சரத்குமாரின் 4 வயது மகன் அந்த 'ஏர்கன்' துப்பாக்கியை அங்கும், இங்கும் தள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென 'ஏர்கன்' துப்பாக்கியில் இருந்து குண்டு மின்னல் வேகத்தில் வெளியேறியது.

    அப்போது அந்த வழியாக வந்த தமிழரசின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதில் தமிழரசி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

    தமிழரசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தமிழரசியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு தமிழரசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    அதன் விவரம் வருமாறு:-

    தமிழரசிக்கும், ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா கட்டியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முருகனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    தமிழரசியின் அண்ணன் சரத்குமாரும் (34), பெரியப்பா மகன் சதீஷ்குமாரும் (38) சேர்ந்து கோழி வளர்த்து வந்துள்ளனர். கோழி குஞ்சுகளை தூக்கி செல்ல கழுகு வருமாம். அந்த கழுகை விரட்டுவதற்காக 'ஏர்கன்' துப்பாக்கி வாங்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கியில் குண்டை போட்டு கழுகை சுடுவதற்காக தயாராக வைத்துள்ளனர்.

    இதனை சரத்குமாரின் 4 வயது மகன் எடுத்து விளையாடி உள்ளான். அப்போது சிறுவனின் கை பட்டு ஏர்கன்னில் இருந்து குண்டு வெளியேறி தமிழரசி மீது பாய்ந்து அவர் பலியானது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    தமிழரசி பலியானது தொடர்பாக அவருடைய அண்ணன் சரத்குமார், பெரியப்பா மகன் சதீஷ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

    • கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2015-ம் ஆண்டு முருகன் என்பவர் பணிபுரிந்தார். தற்போது அவருக்கு 62 வயதாகிறது.

    அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பாட்டி சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அப்போது சிவகங்கையில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே (தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) விசாரணை நடத்தி, தலைமையாசிரியர் முருகன் மீது போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச்சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

    இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்கு என தனியாக 47 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    ×