என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமத் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த எருமை மாடு ஒன்று திடீரென பொது மக்களை விரட்டி, விரட்டி முட்டிதள்ளியது.

    இதில் அதே பகுதி அம்சா தோட்டம், 2-வது தெருவை சேர்ந்த வினோத் என்பவரின் மனைவி மதுமதி (33) என்பவரையும் எருமை மாடு முட்டி தூக்கியது. அப்போது மாட்டின் கொம்பில் சேலை சிக்கிக் கொண்டதால் மது மதியை தரதரவென சாலையில் இழுத்தபடி சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மாடு இழுத்து சென்றது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது.

    எருமை மாடு இழுத்து சென்றதில் மதுமதியின் கால், கை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மதுமதியின் காலில் ஏற்பட்ட காயம் குணமாகாமல் பெரிதானது. மேலும் தொடர்ந்து காயம் அதிகரித்ததால் தற்போது மதுமதியின் காலில் புண் இருந்த இடம் அழுக தொடங்கி இருக்கிறது. அதில் அறுவை சிசிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர். மதுமதிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க அரசும், மாநகராட்சியும் உதவி செய்யவேண்டும் என்று மதுமதியின் கணவர் வினோத் கண்ணீர்மல்க தெரிவித்து உள்ளார்.

    வேன்டிரைவராக வேலைபார்த்து வரும் வினோத் மனைவியை கவனித்து வருவதால் அவரும் வேலைக்கு செல்லமுடியாமல் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மாடு முட்டியதில் காயம் அடைந்த மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது காலில் உள்ள காயம் தற்போது அழுகும் நிலையில் உள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

    இதுவரை ரூ.1 லட்சத்துக்கும்மேல் செலவு செய்து விட்டேன். என்னிடம் மேலும் வசதி இல்லாததால் மேல் சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகிறேன். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். மனைவியின் மேல் சிகிச்சைக்கு உதவவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மதுமதி சிகிச்சை பெற்று வரும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, மாட்டின் கொம்பு மதுமதியின் காலில் குத்தி கிழித்து உள்ளது. இதனால் அவரது காலில் 12 செ.மீட்டர் அளவுக்கு சதை கிழிந்தது. அந்த இடத்தில் சதை அழுகி சேதம் அடைந்து உள்ளது. அறுவை சிகிச்சை செய்து அதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவேண்டும். காலில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது என்றார்.

    • கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது.
    • காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் காசி (வயது 55). லாரி டிரைவர். இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக திருவொற்றியூர் டோல்கேட்டில் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை அவரது மகன் யோகராஜ் (22) அங்கிருந்து ஓட்டி வந்தார்.

    தண்டையார்பேட்டை கும்பாளம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த யோகராஜ் காரை நிறுத்திவிட்டு உடனே வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி மளமளவென்று தீ பரவியது. அப்போது அதே பகுதியில் உள்ள விநாயகபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ் (41) என்பவர் ஏற்கனவே அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்து வீரப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீயில் 2 கார்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யோகராஜ் புகை வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடி வந்ததால் தப்பினார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    25-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    26-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.
    • சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.

    • வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19) ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்தவர் டிராவிட் (21). ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வதி (21) மற்றும் சக்தி (21).

    இதில் விஷ்ணுவும், அஸ்வதியும் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரியின் மீது மோதியது. காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு தி.மு.க.வினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
    • பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு தி.மு.க.வினர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி பா.ம.க.வினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்த வார இறுதியில் இருந்து தேர்தல் களம் மேலும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி முடிவடைந்த பின்னர் அடுத்த வாரம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நாளை மறுநாளில் இருந்து விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். தி.மு.க. அரசை கண்டித்து அவர் தொடர்ந்து அங்கு பிரசாரம் செய்ய உள்ளார்.

    மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற பிறகு நாம் தமிழர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அந்த கட்சி விக்கிரவாண்டி தொகுதியில் எவ்வளவு ஓட்டுகளை பெற உள்ளது என்பதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையில் இருந்து மேலப்பாளையம், சேரன்மகாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக சேரன்மகாதேவி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிக்காக இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரம் சுமார் 20 அடிக்கும் மேல் இருந்த மண் உச்சியில் இருந்து உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பொக்லைன் ஆபரேட்டரான நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மகேந்திரன் அதன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடனடியாக அங்கு பணிபுரிந்த சக தொழிலாளர்கள் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் அங்கே விரைந்து சென்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலமாக பொக்லைன் எந்திரத்தை அப்புறப்படுத்தி பலியான மகேந்திரன் உடலை மீட்டனர். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும்.
    • புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்தனி கூட்டணியை ஏற்படுத்தி உள்ள நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சீமானுடன் விஜய் கைகோர்க்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இப்படி இருவரும் கை கோர்க்க இருக்கும் புதிய கூட்டணி தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சீமானுடன் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளையும் எதிர்க்கும் முக்கிய கட்சிகள் பலவும் கை கோர்க்க இருப்பதாக பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள கட்சிகளோடும், சிறிய கட்சிகள் சிலவற்றுடனும் கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை நாம் தமிழர் கட்சி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சி 8 சதவீத ஓட்டுகளை எட்டிப்பிடித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நிலையில் விஜயும் கைகோர்க்கிறார்.

    அதுபோன்ற சூழலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைப்பதால் நிச்சயம் பெற்றி பெற முடியும் என்பதே புதிய கூட்டணியின் கணக்காக உள்ளது.

    இதுபற்றி அரசியல் நிபுணர் ஒருவர் கூறும்போது, 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. சீமானின் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி இருப்பதும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்குவதுமே அதற்கு முக்கிய காரணமாகும்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தாலே அது திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும். இவர்களோடு மற்ற கட்சிகளும் சேரும்பட்சத்தில் புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அது போன்று ஒரு கூட்டணி உருவானால் நிச்சயம் அது 2 திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிக்கும் வகையிலேயே அமையும் என்றார்.

    • மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் கே.அகோரம், திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகிய 3 பேர் அவர்கள் வகித்து வரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இவர்களை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நீக்கி உள்ளார்.

    நீக்கப்பட்ட 3 பேரும் குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஆவர். குடவாசல் காவனூர் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் பா.ஜ.க.வில் விவசாய பிரிவு மாவட்டத் தலைவராக பதவி வகித்தவர். இவர் ஓகை என்ற இடத்தில் அடகு கடை நடத்தி வந்த நிலை நிலையில் பைக்கில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மது சூதனனின் மனைவி ஹரிணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்திலரசன் ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே கூலிப் படையினர் தனது கணவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பாஸ்கர், செந்திலரசன் ஆகியோரை கைது செய்தனர். பின்பு அவர்கள் ஜமீனில் வெளியில் வந்தனர்.

    தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலை தளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை.
    • தி.மு.க.வை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாகத்தான் இருக்கும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இப்படி போட்டி போட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறியதால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வுடன் விஜய் கூட்டணி சேருவாரா? என்று ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    விஜய்யும் பொதுச்சேவையில் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தது அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் தான். வாழ்த்து சொன்னதை வைத்து கூட்டணிக்கு அழைத்ததாக அர்த்தம் இல்லை.

    ஆனால் அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. தேர்தல் நேரத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணிகளை கட்சி தலைமைதான் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் இந்த ஆட்சியின் அவலத்தை காட்டுகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை.

    தவறு செய்தவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே விழுப்புரத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராய சாவுகள் ஏற்பட்ட போதும் இதே டயலாக்கைதான் சொன்னார்கள். ஆனால் அடக்க முடியவில்லை. அதற்கு பதிலாக குற்றவாளிகளும், சமூக விரோதிகளும் தான் இந்த அரசை அடக்கி வைத்துள்ளார்கள்.

    தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்கட்சிகள் மீது இரும்புக்கரத்தை நீட்டுவதும், ஆனால் சாராய வியாபாரிகள் மீது கரும்பு கரத்தை நீட்டுவதும்தான் இந்த ஆட்சியில் நடக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது மு.க.ஸ்டாலின் வாயில் கருப்பு துணிகட்டி, கருப்பு உடையும் அணிந்த படி குடும்பத்தோடு மதுக்கடையை மூடுவோம் என்று கோஷம் எழுப்பினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக்கை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாகத்தான் இருக்கும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை.

    கள்ளச்சாராய சாவுகளுக்கு அதிகாரிகள் மீது பழிபோட்டு சஸ்பெண்டு செய்துள்ளார்கள். இந்த ஆட்சியை அடுத்து வரும் தேர்தலில் மக்கள் சஸ்பெண்டு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார்.
    • காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 56 பேர் பலியாகினர். மேலும், கள்ளக்குறிச்சி, முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கள்ளக்குறிச்சிக்கு இன்று வந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியானது துயரமான சம்பவமாகும். மேலும், பலி எண்ணிக்கை உயரும் அபாயமும் உள்ளது. பலியானவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ள போது, கள்ளச்சாராய பலிக்கு இவ்வளவு தொகை அறிவிப்பது தவறான முன்னுதாரணமாக மாறி விடக்கூடாதென பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இதனையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

    தங்கள் மீதான குற்றச்சாட்டை நிருபிக்க முடியுமா என தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் கூறியுள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளே இதற்கு நிருபனமாக அமையும். தி.மு.க.வினருக்கும், கள்ளச்சாராயத்திற்கும் சம்மந்தமில்லை எனில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு வந்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

    காவல் துறையினரை ஆளங்கட்சியினர் செயல்படாமல் வைத்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளது என அனைத்து தரப்பு மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்திலேயே, கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் பின்புறம் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதால் தான் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயனுக்கு தொடர்பு உள்ளதாக பொதுமக்களே பேசுகின்றனர். இதைத்தான் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    எனவே, இது தொடர்பாக சி.பி,ஐ விசாரணை நடத்த வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்துகிறது. அப்போதுதான் கள்ளச்சாராய வியாபாரிகளும், அதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகளும் பிடிபடுவார்கள். இது மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
    • விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

    தருமபுரி:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 11-ந்தேதி தருமபுரி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார் பார்வதி ஆகியோர் அந்த பள்ளியில் போதுமான இடம் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கவுதம், பிளாஸ்டிக் செல்வம், நவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    ×