search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tondiarpet"

    தண்டையார்பேட்டை அருகே சிறுமியிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை காந்தி நகரை சேர்ந்த சிறுமி திவ்யா. இவர் செல்போன் பேசியபடி அங்குள்ள வைத்தியநாதன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் திவ்யாவிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர்.

    இதில் ஒருவர் நிலைதடுமாறி கீழேவிழுந்தார் சிறுமியின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து செல்போன் பறித்த கொள்ளையர்களை பிடித்தனர். இதில் ஒருவர் காசிமேட்டை சேர்ந்த ரூபான்குமார் (19), மற்றொருவன் 16 வயது சிறுவன். 2 பேரையும் ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை ஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. யில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை ஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஐ.ஓ.சி. யில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக பொது மக்கள் சிலர் தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் சென்று இது தொடர்பாக புகார் அளிக்க அந்த பகுதிக்கு சென்றனர்.  அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் இது தொடர்பாக விவரம் பெறப்படவில்லை.

    மேலும் இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காத நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
    தண்டையார்பேட்டையில் ஜவுளிக்கடை ஊழியரை தாக்கி துணி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் ரெடிமேடு துணிக்கடை உள்ளது. இந்த கடையில் விக்னேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு 4 பேர் துணி எடுக்க கடைக்கு சென்றனர். ரெடிமேடு துணி வகைகளை எடுத்துக்காட்டிய ஊழியரை தாக்கி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை கொள்ளை அடித்தனர்.

    மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ஜவுளிக் கடையில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து விக்னேஷ் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் உருவமும், தாக்கியதும் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    காசிமேடு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்தது. முகேஷ், விமல், சூர்யா, பிரகாஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து துணிகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

    தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை ராஜிவ்காந்தி நகர், ராஜ சேகரன்நகர், தமிழன் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு மேலாக சரிவர குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    சிலநேரங்களில் வரும் குடிநீரும் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், குடிநீர் முறையாக சப்ளை செய்ய கோரியும் இன்று காலை அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஆர்.கே.நகர் போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தண்டையார்பேட்டையில் மாடியில் இருந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    சென்னை தண்டையார்பேட்டை கப்பல் போலு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சோமசேகர் (வயது 14). 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த சோமசேகர் திடீரென்று தவறி கீழே விழுந்தான். இதில் பலத்த காயம் அடைந்த அவனை சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டையார்பேட்டையில் கந்துவட்டி கொடுமையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். இரும்பு வியாபாரி. இவர் தொழிலுக்காக சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

    இதற்காக வாரம் தோறும் ரூ.25 ஆயிரம் வட்டி கட்டி வந்தார். கடன் வாங்கிய பணத்துக்கு அதிகமாக வட்டி கட்டினார். ஆனால் அவரிடம் கந்து வட்டிக்காரர்கள் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதுகுறித்து துரைமுருகன் கடந்த மார்ச் மாதம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது துரைமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துரைமுருகன் உடலை கைப்பற்றினர். அப்போது அவரது சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில், “என் தொழிலுக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். வாங்கிய தொகைக்கு அதிகமாக வட்டி கட்டி விட்டேன். ஆனாலும் இன்னும் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். மேலும் என்னை அவமானப்படுத்தி பேசினார்கள். இதனால் இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை. கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி 3 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×