என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி அதிகமுறை பயணமாகி வந்தார்.
- 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
திருப்பூர்:
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் அதிக முறை பயணம் செய்யும் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து போக்குவரத்து கழகம் சார்பில் ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து இரவு புறப்பட்டு, மறுநாள் காலை நாகர்கோவில் செல்லும் மார்த்தாண்டம் அரசு பஸ்சில், திருப்பூர் பூலுவப்பட்டியை சேர்ந்த பள்ளி ஆசிரியை கஸ்தூரி (வயது 26) அதிகமுறை பயணம் செய்து வந்தார்.
சமீபத்தில் நடந்த பரிசு போட்டி குலுக்கலில் இவர் தேர்வானார். இதையடுத்து அவருக்கு திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசை, திருப்பூர் மண்டல மேலாளர் (பொறுப்பு) செல்வக்குமார், பொது மேலாளர் (வணிகம்) ராஜேந்திரன், பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோதிமணிகண்டன் உள்ளிட்ட கிளை மேலாளர்கள் வழங்கினர்.
பயணி கஸ்தூரி கூறுகையில், பாதுகாப்பான பயணம். பெண் தனியாக பயணிக்கும் போது பாதுகாப்பு உள்ளது. அரசு பஸ்களை நம்பி, இரவில் பயணிக்கலாம். 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
- பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் தேயிலை, மலை காய்கறிக்கு அடுத்தபடியாக சீச்சீஸ், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழவகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சோலூர், எல்லநள்ளி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இவை குளிர் மற்றும் பனிக்காலத்தில் செழிப்பாக வளரும். அங்கு தற்போது மழை பெய்து வருவதால் அங்கு விளைவிக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராபெர்ரி செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழசீசன் தொடங்கி உள்ளதால், அங்கு விவசாயிகள் தற்போது பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் கூறியதாவது:-
ஸ்ட்ராபெர்ரி பயிரிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒருநாள்விட்டு ஒருநாள் பழங்களை அறுவடை செய்யலாம். ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்திருந்து, ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்களை ரூ.300 வரை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.
அவை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பயிர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜப்பைகுரி பகுதியில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெறுவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ரெயில் பாதையில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ள நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ரெயில்வே போக்குவரத்தை சரிவர கண்காணிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
- தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதற்கு தி.மு.க.வை குறை கூறியதற்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பூத் கேப்சரிங்கை தொடங்கியதே அ.தி.மு.க.தான். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் கலாச்சாரம் தொடங்கியது ஜெயலலிதா ஆட்சியில் தான். பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. சொல்லும் சாக்குதான் புறக்கணிப்பு. டெபாசிட் பறிபோய்விடும் என்ற அச்சத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
இடைத்தேர்தலில் ஓட்டுப்போட வேண்டாம் என அதிமுகவினரிடம் சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்களித்தால் எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்தார்கள் என்று அர்த்தம்.
வன்னியர் சமூகத்தினருக்கு பல நன்மைகளை செய்துள்ளதால் எதையும் சந்திக்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பயன்பெற்ற மக்கள் அனைவரும் அன்புமணி சொன்னால் கூட தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பர் என்றார்.
- ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
- கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூா்:
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நீர்வரத்து, வடிகால் வாரிகளையும், ஏரி குளங்களையும் உடனே தூர்வார வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் செய்து வருகிறது . கடந்த ஆண்டு தமிழகத்திற்கு தரவேண்டிய 90 டி.எம்.சி. தண்ணீர் தரவில்லை. நடப்பாண்டில் 10 டி.எம்.சி தண்ணீர் தரவில்லை. ஒட்டு மொத்தத்தில் தமிழத்திற்கு தரவேண்டிய 100 டி.எம்.சி தண்ணீரை தராமல் வஞ்சிக்கிறது.
எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளது. எனவே உடனடியாக நம்மக்குரிய தண்ணீரை பெற்று தர வேண்டும். அடுத்த கட்டமாக அனைத்து விவசாய அமைப்புகள், பல்வேறு கட்சி நிர்வாகிகளை அழைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
- ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா நிறுத்தப்பட்டுள்ளார். இவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக 9 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து உள்ளார்.
இந்த குழுவில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் உள்ளூர் எம்.எல்.ஏ. ஆர்.லட்சுமணனும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் விக்கிரவாண்டியில் கடந்த 14-ந்தேதி கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் உள்ளூர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
தேர்தலில் யார் யாருக்கு எந்த ஏரியாவை ஒதுக்குவது என்றும் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் காணை மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்தந்த நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளனர்.
இதே போல் காணை வடக்கு ஒன்றியத்தில் அமைச்சர் சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் எவ்வளவு ஓட்டுகளை பார்க்க சொல்வது என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு உதவ கட்சி நிர்வாகிகளையும், பேச்சாளர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என்று தலைமை கூறி உள்ளதால் இப்போதே கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டி செல்ல தயாராகி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கூட்டணி கட்சி உள்ளூர் பிரமுகர்களும் பிரசாரத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
அதே போல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்தும் பேச பிரசார சுற்றுப்பயணத்துக்கு தயாராகி வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வைச் சேர்ந்த நிபந்தன் என்பவர் வெற்றி பெற்று பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதாகவும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வழங்க கோரி துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் முறையிடச் சென்றனர்.
அப்போது துப்புரவு பணியாளர்களை அவதூறாக பேசியதாக அறிவழகன் என்பவர் தேனி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இன்று தேவதானப்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் 40-க்கும் மேற்பட்டோர் துப்புரவு பணியாளர் அல்லாத தனி நபர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபந்தன் மீது பொய் புகார் கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் புகார் கொடுத்த நபர் துப்புரவு பணியாளர் அல்லாத நபர் என்றும் நடைபெறாத செயலை சித்தரித்து தனது சுயலாபத்திற்காக பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
- கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.
மதுரை:
தமிழகத்தில் பல்வேறு சிறப்புகளையும் பெருமையும் கொண்ட பழமையான மதுரை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்திலுள்ள வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் மதுரை, சோழவந்தான், உசிலம்பட்டி, மதுரை வன உயிரினச் சரகம், மதுரை சமூக நலக் காடுகள் சரகம், திருமங்கலம் சமூக நலக்காடுகள் சரகம் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது.
இந்த வனச்சரகப் பகுதிகளில் அழகர்மலை, நாகமலை, யானைமலை, கொட்டாம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, அழகர்கோவில் மலை ஆகிய சிறுசிறு மலைகள் உள்ளது.
இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாததால் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை, புலி, யானை போன்ற பெரிய வனவிலங்குகள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்றாலும் மான், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட சிறுசிறு வன விலங்குகளும், பறவைகளும் அதிக அளவில் வசிக்கின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்களும், பறவைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களை விட தேசிய பறவைகளான மயில் மதுரையில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மர்மமான முறையில் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இது தொடர்பான தகவலை அறியும் வகையில் மதுரை வனக்கோட்டத்தில் கடந்த 2015 முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை எத்தனை வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது? எத்தனை வன விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது? எத்தனை வனவிலங்குகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டது? என்ற விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மதுரை வனக்கோட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பம் வந்தது.
இது தொடர்பாக அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்து உள்ளது.
மதுரை வன கோட்டத்தை பொறுத்தவரை மயில், காட்டு மாடு, காட்டுப்பன்றி, புள்ளிமான், குரங்கு உட்பட 28 அரிய வகை உயிரினங்கள், பறவைகள் ஊர்வன வகைகள் உயிரிழந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மயில் 435 உயிரிழந்ததுள்ளது. அதேபோல் புள்ளிமான் 258, காட்டு மாடு 71, காட்டுப்பன்றி 43, குரங்கு 40 என மொத்தமாக சுமார் 1,030 வன உயிரினங்கள் உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 93 வன உயிரினங்கள் சாலை விபத்தின் மூலம் மட்டும் உயிரிழந்துள்ளது.
மதுரை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் வன விலங்குகளுக்கு விஷம் வைத்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன உயிரினங்கள் உயிரிழக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள வனக்கோட்ட அலுவலகம், வயல்வெளிகளில் மயில்களுக்கு விஷம் வைத்தல், சட்டவிரோதமாக அமைக்கப்படும் மின்வெளிகளில் வனவிலங்குகள் சிக்கி பலியாகிறது.
அரிய வகை உயிரினங்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுதல், வன விலங்குகள் வேட்டையாடிய அதன் இறைச்சி மற்றும் விலங்குகள் கறி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயல்வெளிகளில் நெற்பயிரை உண்ண உணவு தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொலை செய்யும் சம்பவம் மதுரை அதை சுற்றியுள்ள பகுதியில் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக உயிரினங்கள் வேட்டையாடுதல் மற்றும் வன உயிரினங்கள் குற்றம் தொடர்பாக கண்காணிக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு வன மற்றும் வன உயிரினங்கள் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு கீழ் நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மண்டல வாரியாக வன காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடும் முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மேலும் வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர்பாக வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு வேட்டையாடும் சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் வன அதிகாரிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரையில் சிவப்பு பகுதி என்று அறியக்கூடிய பகுதிகளில் அதிக வனவிலங்குகள் உயிரிழந்த பகுதிகளாக மதுரை ரெயில் நிலையம், சூர்யா நகர் ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்டவற்றில் அதிக அளவு மயில்கள் இறந்துள்ளது. சிவரக்கோட்டை, திருமங்கலம், கள்ளிக்குடி, உசிலம்பட்டி பகுதியில் புள்ளி மான்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளது. உசிலம்பட்டி, சோழவந்தான், பாலமேடு, உள்ளிட்ட பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழப்பு அதிகம் உள்ளது.
மேலும் தமிழ்நாடு வனத்துறை சார்பாக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டதன் மூலம் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், படிப்படியாக வனவிலங்குகள் மீது தாக்குதல் மற்றும் வனவிலங்குகள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் வாழ்வியல் முறைகள்,வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்துள்ளது.
இன்றைய மனிதனின் வாழ்க்கை முறை நிற்கக்கூட நேரமில்லாமல் எந்திர மயமாகி விட்டதால் வனவிலங்குகள், காடுகளின் மதிப்பு தெரியவில்லை. காடுகளையும், அதில் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க தவறியதால் தற்போது சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகளும், காடுகளும் ஒன்றையொன்று சார்ந்தது. இதில் ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும்.
அதனால் இந்த வன விலங்குகளை பாதுகாக்க வனவிலங்கு காப்பகங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்களும் ஒத்துழைப்புகள் நல்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் தருண்குமார் கூறுகையில், வறட்சி காலங்களில் சாலை விபத்து மூலம் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் வனவிலங்குகள் அருந்தும் வகையில் உணவுகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சாலையை கடக்கும் குறிப்பிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வன விலங்குகளை உயிரிழக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேட்டையாடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது வன விலங்குகள் வேட்டையாடும் சம்பவங்கள் படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
- விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன்.
ரெட்டியார்சத்திரம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் இருந்து கோவை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள அப்பியம்பட்டி நால்ரோடு கிராமத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு உணவிற்காக காய்கறிகளை அனுப்பி வரும் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளை நசுக்கின்ற திட்டமாக தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை கொத்தையம் கிராமத்தில் தி.மு.க. அரசு கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அத்திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியிடம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் அங்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் கொத்தையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமையில் அ.தி.மு.க. கிளை செயலாளர் வஞ்சிமுத்து மற்றும் கிராம மக்கள் கொத்தையம் கிராமத்தில் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்க உள்ளதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி விவசாய நிலங்களை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டி வருகின்ற 20ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன்.
விவசாயிகளை வாழ வைக்கும் குளத்தை அழித்து தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை நிறுத்த தமிழக அரசை வலியுறுத்துவேன் என்று கிராம மக்களிடம் உறுதி அளித்தார். பின்னர் அங்கிருந்து கோவை புறப்பட்டுச்சென்றார்.
- பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
- மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருப்பூர்:
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் 2 பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் தியாக திருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.
அதன்படி இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் சார்பாக திருப்பூர் பெரிய கடை வீதி நொய்யல் வீதி அரசுப்பள்ளி வளாகத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தலைவர் நூர்தீன் தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில், மாவட்ட ச்செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட பொருளாளர் சிராஜித், மாவட்ட துணை தலைவர் ஜாகீர் அப்பாஸ் , மாவட்ட துணைச்செயலாளர் காஜா பாய் ஆகியோர் உரை யாற்றினர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 28 கிளைகளில் தொழுகை நடைபெற்றது. இதே போல் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை உள்பட பல்வேறு இடங்க ளில் உள்ள மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
காலை 7 மணியில் இருந்து சிறப்பு தொழுகை தொடங்கியது. தொழுகை முடிந்த பிறகு பிரார்த்தனை செய்தனர். உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொழுகைக்கு பிறகு குர்பானி கொடுக்கப்பட்டது. ஆடுகள் தனி நபராகவும், மாடுகள் கூட்டு குர்பானியாகவும் கொடுக்கப்பட்டது.
குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டு இறைச்சியின் ஒரு பங்கை தாங்கள் வைத்து கொண்டனர். மற்ற 2 பங்குகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர்.
சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றோம்.
பின்னர் ஆட்டு கிடாய்களை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை-எளிய மக்களுக்கும், ஒரு பங்கை உற்றார், உறவினர்களுக்கும், ஒரு பங்கு எங்களுக்கும் என்று பிரித்து கொடுத்து உற்சாகமாக கொண்டாடினோம்.
உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் வேண்டிக்கொண்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வட மாநிலத்தவர்கள் புகுந்ததால் ரிசர்வேஷன் பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை.
- முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.
சென்னை:
வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளை முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்து கொள்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கடந்த வாரம் சென்னையில் இருந்து ஹவுரா சென்ற ரெயிலில் முன்பதிவு செய்யாத வட மாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் புகுந்ததால் ரிசர்வேஷன் செய்த பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
வட மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் அத்துமீறி ரெயில் பெட்டிகளை ஆக்கிரமித்து கொள்ளும் சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
அதன் அடிப்படையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், தமிழகத்திற்கு உள்ளே ஓடக்கூடிய ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஆர்.பி.எப். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.
அதன்படி வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் குறிப்பாக அதிக பயணிகள் பயணிக்கும் ரெயில்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் சுற்றித்திரியும் நபர்களிடம் டிக்கெட்டை கேட்டு விசாரித்து முன்பதிவு டிக்கெட் இல்லாதவர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் கீழே இறக்கி பொதுப் பெட்டிக்கு மாறி செல்ல அறிவுறுத்துகின்றனர்.
பரிசோதகர்களும் விரைவாக டிக்கெட்டை ஆய்வு செய்து சாதாரண டிக்கெட்டுடன் யாரும் பயணிக்கிறார்களா? என்பதை கண்காணித்து வெளியேற்றுகிறார்கள்.
சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் எல்லா ரெயில்களிலும் போலீசார் பயணம் செய்து முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.
ரிசர்வேஷன் செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் ரெயில்வே போலீசாரும் டிக்கெட் பரிசோதகரும் பாதுகாப்பு அளித்திட தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
- மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
- சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார்.
கோவை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது27). தொழில் அதிபரான இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 12-ந் தேதி அஸ்லாம் சித்திக் தனது நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் வாங்க பெங்களூருவுக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மறுநாள் மாலை கேரளாவிற்கு புறப்பட்டார்.
இந்த நிலையில் அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்ததாக நினைத்த கேரளாவை சேர்ந்த கும்பல் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.
அஸ்லாம் சித்திக் கோவை வழியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலையில் மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள், தங்கள் காரை வேகமாக இயக்கி சென்று, அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து திபு, திபுவென இறங்கிய 7 பேர் கும்பல், அவரது காரை நோக்கி வேகமாக சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை காரை நோக்கி வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருந்தனர். இதனை பார்த்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்து தாக்கியது கேரள மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) என்பதும் தெரியவந்தது.
சிவ்தாஸ் மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுவதும், விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்ற ரகசிய தகவல் பெங்களூரில் இருக்கும் கேரளாவை சேர்ந்த குழுவுக்கு கிடைத்துள்ளது.
அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின்தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க கூறியுள்ளனர்.
அதன்படியே இந்த 7 பேர் கும்பல் 3 கார்களில் அஸ்லாம் சித்திக்கை பெங்களூருவில் இருந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
கோவை அருகே வந்ததும், காரை வழிமறித்து சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், போலீசார் ரோந்து பணியில் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவ்தாஸ், அஜய்குமார், விஷ்ணு, ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி உள்ள ராணுவ வீரரான விஷ்ணு, கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.
அதன்பின்னர் அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்பு உள்ளதா?
அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்ற தகவலை இவர்களுக்கு சொன்னவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






