என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் ஆகியவற்றின் விலை கடந்த 2011-ம் வருடத்தில் இருந்து ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு இவை யாவும் தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த பிரசாதங்கள் தற்போது 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலையேற்றம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வளாகத்திற்குள் பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய இந்த பிரசாதங்களின் விலை ஏற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
- தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை யொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இன்று காலை முதல் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த 2 நாட்களும் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
வருகிற 22, 23-ந் தேதிகளில் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 23-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதற்கு அடுத்த நாள் 24-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது.
- தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை, கே.கே.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தங்கச்சிமடம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மணிக்கு 45 முதல் 65 கி.மீட்டர் வரை கடல் காற்று வீசக்கூடும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று தடை விதிக்கப்படுகிறது. மேலும் வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தங்கு தளத்தில் உள்ள விசைப்படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
அதன்படி ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட் விசைப்படகுகள், நாட்டு படகுகள், துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. மீன்பிடி தடையால் 15 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
- சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,400-க்கும், சவரன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ1,120-ம் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,400-க்கும், சவரன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,200
17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320
16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400
15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400
14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-11-2025- ஒரு கிராம் ரூ.170
17-11-2025- ஒரு கிராம் ரூ.173
16-11-2025- ஒரு கிராம் ரூ.175
15-11-2025- ஒரு கிராம் ரூ.175
14-11-2025- ஒரு கிராம் ரூ.180
- தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கார் மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த மருத்துவ மாணவர்களான சாருபன், ராகுல் செபஸ்டியன், முகிலன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த கிருத்திக்குமார், சரண் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம்.
- கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை:
மதுரை, கோவை மாநகரங்களில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
கோவில் நகர் 'மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்!
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
- குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ச்சியான சூழலும் நிலவியது. மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்டம் அம்பை, ராதாபுரம், நாங்குநேரி மற்றும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியான நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலையிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.
இதேபோல் தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மேக்கரை, மத்தளம்பாறை, இலஞ்சி, குத்துக்கல்வலசை, வல்லம், ஆய்க்குடி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக செங்கோட்டையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
குற்றாலத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதிக்குள்ளும் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாலை மெயின் அருவியில் சற்று தண்ணீர் அதிகரித்ததால் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றி, குளிக்க தடை விதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து திடீரென்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது.
- மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.
இந்த கால அட்டவணைப்படி, இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்பட உள்ளது. ரெயில் இயக்கப்பட்ட பின்னர், நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
இலங்கை கடலோர பகுதி அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து, நேற்று காலை 8.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவியது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- 94.74 சதவீதம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
- 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது வரை 6,07,41,484 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 94.74 சதவீதம் ஆகும். இவற்றில் 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 13.02 சதவீதம் ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
68,467 வாக்குச்சாவாடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
12 மாநிலங்களிலும் 50.25 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 98.54 சதவீதம் ஆகும் எனவும், இவற்றில் 11.76 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளது.






