என் மலர்
இந்தியா
- அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
- தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு உதாரணம் தான் இந்த விழா.
* கோவிலுக்குள் அனைவரும் வரலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்.
* கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என கூறியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
* அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
* இறைப்பற்றை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதுதான்.
* நான் அதிகமாக கலந்துகொண்ட துறை நிகழ்ச்சி என்றால் அது அறநிலையத்துறையின் நிகழ்ச்சி தான்.
* தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 29 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* அறநிலையத்துறையில் 900-க்கும் அதிகமானவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
* 11 பெண்கள் உட்பட 41 ஓதுவார்களை நியமனம் செய்துள்ளோம்.
* கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
* ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய்.
- கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 23-ந்தேதி வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அடுத்த கூட்டம் தஞ்சாவூரில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வரும் 4-ந்தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வரும் விஜய் வருகிற புதன்கிழமை தஞ்சாவூரில் நிர்வாகிகளை சந்திக்கிறார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனுமதி கோரி த.வெ.க. நிர்வாகிகள் தரப்பில் காவல்துறையிடம் இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதித்தனர்.
- சிலுவை பாதை நிகழ்ச்சியில் இரு நாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர்.
ராமேசுவரம்:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றனர். இதன்படி, இந்தாண்டு விழா நேற்று தொடங்கியது.
இதற்காக ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகள் மற்றும் 26 நாட்டுப்படகுகளில் மொத்தம் 3500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி சங்கர நாராயணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு மீரா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார், சுங்கத் துறையினரின் சோதனைக்குப் பிறகு பக்தர்கள் படகில் செல்ல அனுமதித்தனர். அவர்கள் நேற்று மதியம் கச்சத்தீவை சென்றடைந்தனர். இலங்கை சார்பில் இந்த விழாவிற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு அந்தோணியார் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதில் இலங்கையின் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றினார். தொடர்ந்து ராமேசுவரம் வேர்க்கோடு ஆலய பங்குத் தந்தை தாமஸ் பரிபாலன் தலைமையில் முதல் நாள் திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்ச்சியில் இரு நாட்டு பக்தர்களும் சிலுவையை சுமந்து ஆலயத்தை வலம் வந்தனர். சிறப்பு ஆராதனைக்கு பிறகு கிறிஸ்தவ பக்தர்களுக்கு நன்மை வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன், யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரத்னம் உள்ளிட்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை சிறப்பு திருப்பலி, கூட்டு பிராத்தனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் தலைமையில் நடந்தது. முதலில் தமிழிலும், பின்னர் சிங்களத்திலும் திருப்பலி நடைபெற்றது.
இதில் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். கூட்டுத்திருப்பலியைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வந்த பக்தர்கள் இலங்கை கடற்படையின் சோதனைக்கு பிறகு விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலம் தமிழக பக்தர்கள் தாயகம் திரும்பினர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற தமிழக பக்தர்களை நடுக்கடலில், இந்திய கடலோர காவல் படையினர் சோதனை நடத்தினர்.
ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவிழா என்பதால் இரு நாட்டு பக்தர்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும், இரவு நேரங்களில் இரு நாட்டு பக்தர்களும் தங்களது மகிழ்ச்சி மற்றும் சோகத்தை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். இதனால் அங்கு ஒருவித நெகிழ்ச்சியான சூழல் நிலவியது.
- 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது.
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள்.
இந்நிலையில் மதுரையில் இன்று இரவு அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. தேர்தல் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலுடன் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனவும் தெரிய வந்துள்ளது. இன்றைய பேச்சின் தொடர்ச்சியாக நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. அறிவிப்பதற்கு முன்பாக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது.
- விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
9-வது நாளாக இன்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது.
9-வது நாளான இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, கழக அமைப்பு துணை செயலாளர் ஆஸ்மன், அண்ணா அறிவாலய மேலாளர் பத்மநாபன் ஆகியோர் பெற்றனர். அப்போது கழகத்தினர் ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
தற்போது விருப்ப மனுக்களைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளுக்கும் பெறப்படுகிறது. இதே போன்று, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து திரண்டு விருப்ப மனுக்களை வாங்கிச் செல்கின்றனர்.
தி.மு.க.வில் போட்டியிட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் திருவிழா போல் கூட்டம் காணப்படுகிறது. விருப்ப மனு விநியோகம் வருகிற மார்ச் 2-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
- கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
இந்த மாதத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு நகரங்களுக்கு 26 ஆயிரத்து 733 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 9.3 சதவீதம் குறைவாகும். அதேசமயம் உள்நாட்டு நகரங்களுக்கு 2 லட்சத்து 82 ஆயிரத்து 731 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 7.4 சதவீதம் அதிகமாகும்.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமாகும். விமான இயக்கங்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டு நகரங்களுக்கு 130.5 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு நகரங்களுக்கு 830 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 960.5 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளது.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 4 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 3 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- 2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- பிளஸ்-2 செய்முறை தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெற்றது.
சென்னை:
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அட்டவணையை தேர்வு துறை வெளியிட்டது.
ஏப்ரல் மாதம் 2-வது வாரத்திற்குள் அனைத்து தேர்வுகளையும் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் 2-ந்தேதி தொடங்குகிறது.
2-ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகிறார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 பேரும் தனித்தேர்வர்கள் 27,783 பேரும் எழுதுகின்றனர். 7545 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 3412 தேர்வு மையங்களில் இத்தேர்வினை எழுத உள்ளனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பல்வேறு வசதிகளை அரசு செய்து உள்ளது. தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மின்சார வாரியம் எடுத்துள்ளது. பிளஸ்-2 செய்முறை தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு தொடங்குவதால் அரசு தேர்வுத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
தேர்வு மையத்தில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றுதல், காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் தேர்வு எழுதுவதற்கு 3 ஆண்டு காலம் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முடிகிறது. கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மார்ச் 3-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடக்கிறது.
பிளஸ்-2 பொதுத்தேர்வினை 4540 பறக்கும் படையினர் கண்காணிக்கிறார்கள். 44 ஆயிரத்து 624 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- நேற்று தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- இரண்டாவது நாளாக நேற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கும் நேற்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360
25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-02-2026- ஒரு கிராம் ரூ.295
26-02-2026- ஒரு கிராம் ரூ.295
25-02-2026- ஒரு கிராம் ரூ.295
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
- மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
- பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுரை மண்டேலா நகர் சுற்றுச்சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறர்கள். இதற்காக 120 ஏக்கர் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மற்றும் பிரதமர் மோடி செல்லும் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். மதுரை விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி விமான நிலையத்திலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் 3 வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரவீன்குமார் எச்சரித்துள்ளார்.
- திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
- காலையில் மணக்கோலத்தில் இருந்த கணவன், பிணமாக கிடந்ததை கண்டு சந்தியா அலறித்துடித்தார்.
ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவர் சூரியபிர காஷ் (வயது 41). உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
மேடபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா. ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு சந்தியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால், கிரிபாபு ஆகியோர் நள்ளிரவு சூரியபிரகாஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கினார்கள்.
பின்னர் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லை தூக்கி சூரியபிரகாசின் தலையில் போட்டனர். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
காலையில் மணக்கோலத்தில் இருந்த கணவன், பிணமாக கிடந்ததை கண்டு சந்தியா அலறித்துடித்தார். துணி வியாபாரி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பொதுமக்கள் திரண்டுவந்து, சந்தியாவின் சகோதரர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபால், கிரிபாபு ஆகியோரை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.
- இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி, தரம் குறைந்ததாக இருப்பதால், மின்உற்பத்தி ஆலைகள் அதை செயல்படுத்த முடியவில்லை.
இருப்பினும், உள்நாட்டு நிலக்கரியின் தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், வெளிநாட்டு நிலக்கரி மூலம் 17 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டில், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி டன் நிலக்கரியை இந்திய மின்உற்பத்தி ஆலைகள் பயன்படுத்தின.
ஆனால், நடப்பாண்டில் இதில் 1 கோடியே 50 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத 2 மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது. 30 சதவீத நிலக்கரி இறக்குமதி குறைக்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனமான கோல் இண்டியா மற்றும் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளன.
மேலும், நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடங்கள் அருகே புதிதாக நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளதாக நிலக்கரி வர்த்தகர் ராஜீவ் ராம்நாராயணன் என்பவர் தெரிவித்தார்.
இந்த காரணங்களால், வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.






