செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப்

Published On 2019-09-14 14:03 GMT   |   Update On 2019-09-14 14:03 GMT
அல்கொய்தா இயக்கத்தின் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தினார்.
வாஷிங்டன்:

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.

பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசராகவும்  பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. 
 
அதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. 



இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. 

இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்க பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப் படையினரால் கொல்லப்பட்டான் என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News