செய்திகள்

பாகிஸ்தான்: ஊழல் தடுப்பு ஆணையத்தில் நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் ஆஜராக உத்தரவு

Published On 2017-08-17 15:19 GMT   |   Update On 2017-08-17 15:19 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது இரு மகன்களும் பனாமா கேட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
லாகூர்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான்
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது.

இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமான அதிகாரிகள் அனைவரிடமும்
விசாரணை முடிந்தது.

சிறப்பு கூட்டு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால், அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார். அப்போது பாகிஸ்தானின் உயர்ந்த அமைப்பாக கருதப்படும் என்.ஏ.பி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், பண மோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது இரு மகன்களான ஹசன் நவாஸ் மற்றும் உசேன் நவாஸ் ஆகியோருக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

இதையடுத்து, லாகூரில் உள்ள அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், என்.ஏ.பி சம்மனை ஏற்று நவாஸ் ஷெரீப் விசாரணைக்கு ஆஜராவது சந்தேகமே என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News