செய்திகள்
ஏலகிரி மலையில் உள்ள தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பண்ணை வீடு.

ஏலகிரி மலையில் துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி

Published On 2021-04-13 02:07 GMT   |   Update On 2021-04-13 02:07 GMT
ஏலகிரிமலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டின் நுழைவு வாயில் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டில் பணம், நகைகள், பொருட்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடி சென்றனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் பண்ணை வீடு உள்ளது. இங்கு துரைமுருகன் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த பண்ணை வீட்டை திருவண்ணாமலை மாவட்டம் புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு துரைமுருகன் பண்ணை வீட்டின் திறந்தவெளியில் உள்ள இடத்தில் படுத்து பிரேம்குமார் தூங்கினார். அப்போது மர்மநபர்கள் யாரோ பண்ணை வீட்டுக்குள் புகுந்து, நுழைவு வாயிலின் பெரிய கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர்.

வீட்டுக்குள் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் வீட்டில் இருந்த பொருட்களான கட்டில், பீரோ, நாற்காலிகள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் அதிக எடையில் இருந்ததால் எடுத்துச் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மர்மநபர்கள் உள்ளே நுழைந்தது கண்காணிப்பு கேமமராவில் பதிவாகியிருக்கும் என கருதி கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கை திருடி சென்றுள்ளனர்.

நேற்று அதிகாலை தூய்மைப் பணியை மேற்கொள்ள பிரேம்குமாரும், அவரின் மனைவியும் படுக்கையில் இருந்து எழுந்து வந்து பார்த்தபோது, பண்ணை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து துரைமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஏலகிரிமலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து, கைரேகையை பதிவு செய்து மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News