செய்திகள்
விஷம்

பரமத்திவேலூர் அருகே கணவன், மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2020-10-27 06:53 GMT   |   Update On 2020-10-27 06:53 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராம்பூர் அருகே தீபபாரா பகுதியை சேர்ந்தவர் பரசுராம் மகன் டேங்க்தர்பிசி(24). இவரது மனைவி ஜமுனாபிசி(26). இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குல்தீப் (23) என்பவர் மூலம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள சுந்தரராஜன் என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு வேலைக்காக வந்த‌னர். அங்கு வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இருவருக்கும் இடையே தரராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை இருவரும் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் பலியானார்கள்.

இது குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சின்னத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தற்கொலை செய்த கணவன், மனைவி உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News