வேடசந்தூரில் கனமழை- இடி தாக்கியதில் தனியார் ஆலையில் காம்பவுண்டு சுவர் இடிந்தது
- 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
- அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக அப்பொழுது யாரும் செல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 284 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வேடசந்தூரில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதில் அங்குள்ள காம்பவுண்டு சுவர் இடிந்து தரைமட்டமானது.
வேடசந்தூர் அருகே தனியார் நிறுவனத்தின் சோப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையின் எதிரே தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததுடன் கற்கள் 15 மீ. தூரம் தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக அப்பொழுது யாரும் செல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காம்பவுண்டு சுவர் இடிந்து சிதறி கிடப்பதை கண்டு கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த கற்களை அங்கிருந்து ஊழியர்கள் அகற்றினர். இடி தாக்கி காம்பவுண்டு சுவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.