செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

அன்பழகன் மறைவுக்கு அதிமுக இரங்கல்

Published On 2020-03-07 07:08 GMT   |   Update On 2020-03-07 07:08 GMT
பேராசிரியர் அன்பழகனின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

தமிழ்ப்பற்றும், தேசிய உணர்வும் கொண்ட குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் அன்பழகன் கல்லூரிப் பேராசிரியராக தனது வாழ்வைத் தொடங்கி, மக்களாட்சியின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற்று பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.

பேராசிரியர் அன்பழகன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அமைச்சராகவும், உறுப்பினராகவும் பணியாற்றிய ஆண்டுகளில், அவரது தமிழ்ப் புலமையையும், பெருந்தன்மையான உரைகளையும், கொள்கை மாறாத நட்புறவையும், வியப்புக்குரிய உழைப்பையும் கண்டு வியந்திருக்கிறோம்.

75 ஆண்டுகள் பொது வாழ்வில் பங்கு பெற்ற அயராது உழைத்து விடை பெற்றுச்சென்றிருக்கும் பேராசிரியர் அன்பழகனின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News