செய்திகள்
மார்த்தாண்டம் அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது
மார்த்தாண்டம் அருகே 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டத்தை அடுத்த களியல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், (வயது 70). ராஜேந்திரன் வீடு அருகே ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை ராஜேந்திரன் அடிக்கடி அழைத்து பேசுவார். வீட்டிற்கும் அழைத்துச் செல்வார். சம்பவத்தன்று மாணவியை, ராஜேந்திரன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து மாணவி அழுது கொண்டே வெளியே வந்தார்.
மாணவியின் அழுகை பற்றி அவரது பெற்றோர் கேட்டனர். மாணவி அவர்களிடம் முதியவர் ராஜேந்திரன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தினர். இதில், மாணவிக்கு ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரன் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான ராஜேந்திரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.