செய்திகள்
மரணம்

பெரம்பலூர் அருகே நடைபாதை பிரச்சினையில் அதிகாரிகள் முன்பு தீக்குளித்த பெண் பலி

Published On 2019-09-23 05:36 GMT   |   Update On 2019-09-23 05:36 GMT
பெரம்பலூர் அருகே நடைபாதை பிரச்சினையில் அதிகாரிகள் முன்பு பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அல்லிநகரம் ஊராட்சியை சேர்ந்த மேல உசேன் நகரம் கிராமத்தில் சீமான் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேட்டுப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி, மேல உசேன் நகரம், கீழ உசேன் நகரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த பகுதியில் உள்ள மின் மோட்டார் அறையின் பின்புற பகுதியில் ராமதாஸ் மனைவி பூங்கொடி (வயது 56) வீடு கட்டி வசித்து வந்தார். அவர், மின்மோட்டார் அறை உள்ள பகுதி தனது வீட்டிற்கு செல்லும் பாதையில் உள்ளது, எனவே வீட்டிற்கு செல்ல வசதியாக பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், பூங்கொடியின் வீட்டிற்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை எதிர்த்து அல்லி நகரம் ஊராட்சி சார்பில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் அங்குள்ள ஆழ்குழாய் கிணறு பழுதடைந்ததால், அல்லிநகரம் ஊராட்சி சார்பில் அதனருகே புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு பூங்கொடி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் உத்தரவின்பேரில் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் சுப்பிரமணி, எலக்ட்ரீசியன் சுப்ரமணியன் மற்றும் அல்லிநகரம் ஊராட்சி செயலாளர் கலையரசி ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று, மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்கொடி, அவரது மருமகள் தங்கலட்சுமி (33) ஆகியோர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். மேலும் 2 பேரும் திடீரென்று உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டனர்.

உடனே பொதுமக்கள் அவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பூங்கொடி இறந்தார்.

இதுதொடர்பாக குன்னம் போலீசார், ஆலத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன், ஊராட்சி செயலாளர் கலையரசி, புவனேஸ்வரி, குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர் சுப்பிரமணி, எலக்ட்ரிஷியன் சுப்பிரமணியன் மற்றும் அழகப்பன், ராஜேந்திரன், முருகேசன், ஆனந்த், மலையம்மாள், சந்திரா, செல்வ காந்தி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News