சத்தியமங்கலம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் காலை 6 மணிக்குதான் அனுமதிக்கப்படுகிறது. இரவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை 6 மணிக்கு பிறகு ஒட்டுமொத்த வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் இருபுறமும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் லாரிகள் மற்ற வாகனங்கள் உரிய நேரத்தில் போக முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே வாகனங்களை 6 மணிக்கு பதில் அதிகாலை 4 மணிக்கே அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதித்தால் நாங்கள் 6 மணிக்கெல்லாம் மலைப்பாதையை கடந்து விடுவோம்... என்று கூறி இன்று காலை 6 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் காரப்பள்ளம் சோதனை சாவடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
காலை 6 மணிக்கு நடந்த சாலை மறியல் போராட்டம் 7.30 மணிக்கு ஒரு முடிவுக்கு வந்தது.