search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road Blockades"

    • வ.மேட்டூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பஸ் வசதி வேண்டுமெனக் கூறி சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுப்பாக்கம் அருகே உள்ள வ.மேட்டூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பஸ் வசதி இதுவரை செய்து தரவில்லை. இதனால் தங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய தேவைக்காக வெளியூர் செல்லும் சிறு, குறு விவசாயிகள், வணிகர்கள் பஸ்சிற்காக 1 கிலோமீட்டர் நடந்து சென்று பனையாந்தூர் அல்லது வள்ளிமதுரம் கிராமத்திற்கு சென்று பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இதனால் தங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமெனக் கூறி இன்று காலை திட்டக்குடியில் இருந்து நைனார்பாளையம் வரை செல்லும் அரசு பஸ்சை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறைப்பிடித்து திடீரென சாலை மறியல் போராட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை மறியல் நடந்த இடத்திற்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் பள்ளி மற்றும் கல்லூரி மற்றும் வெளியூருக்கு செல்வதற்காக பஸ்சில் காத்திருந்த பயணிகளின் நலன் கருதி தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு பஸ்சை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் பஸ் வசதி செய்து தரவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.

    • குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
    • பெண்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சிக்குட்பட்ட மாதாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதை கண்டித்தும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய கோரியும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் அப்பகுதி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் இக்ன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் கே.கே.நகர் உள்ளது. இங்கு புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியில் நல்ல தண்ணீர் ஊற்றி விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நல்லூர் ஊராட்சி சார்பில் பணியாளர்கள் அந்த தண்ணீர் தொட்டியில் உப்பு தண்ணீர் ஏற்றுவதற்காக குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் பகுதி மக்கள் தண்ணீர் தொட்டி அமைந்திருக்கும் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டியில் நல்ல தண்ணீர் தான் ஏற்ற வேண்டும் என்று கூறி கே.கே.நகர் பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீரென புதுப்பாளையம் பிரிவு அருகே புளியம்பட்டி-பவானிசாகர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகர் அருகே உள்ள பசுவாபாளையம் என்ற பகுதியில் விவசாயி ஒருவர் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டு முன்பு கட்டியிருந்த ஒரு ஆட்டுக்குட்டியை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை தாக்கியது. இதையடுத்து ஆடுகள் சத்தம் போட்டது. இதையடுத்து வீட்டுக்குள் படுத்திருந்த விவசாயி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை ஆட்டை அடித்து கொன்று ரத்தத்தை குடித்துக் கொண்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

    இதையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஆட்டுக்குட்டி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை கால்நடைகளை தாக்கி வேட்டையாடி வருகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

    இது பற்றி தெரிய வந்ததும் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயக்கோபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள மின்னல் இந்திராநகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வினியோகிக்கபட வில்லை.

    இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அன்வர்திக்கான்பேட்டை மின்னல் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அரக்கோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேல் லூயிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    மேலும் பயன்படுத்த படாமல் இருந்த பைப்லைனை சரிசெய்து தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் குடங்களில் குடிநீர் பிடித்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    செய்யாறு அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த அனக்காவூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவிலலை என்று கூறபடுகிறது. இதனால் பெண்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செய்யாறு வந்தவாசி செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    இது குறித்து தகவலறிந்த செய்யாறு தாசில்தார் மூர்த்தி, அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரக்கோணம் அருகே உள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை.

    இது குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கபட வில்லை என்று கூறபடுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் பஞ்சாயத்து செயலர் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    சத்தியமங்கலம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில் வாகனங்கள் காலை 6 மணிக்குதான் அனுமதிக்கப்படுகிறது. இரவில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் காலை 6 மணிக்கு பிறகு ஒட்டுமொத்த வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் இருபுறமும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் லாரிகள் மற்ற வாகனங்கள் உரிய நேரத்தில் போக முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே வாகனங்களை 6 மணிக்கு பதில் அதிகாலை 4 மணிக்கே அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதித்தால் நாங்கள் 6 மணிக்கெல்லாம் மலைப்பாதையை கடந்து விடுவோம்... என்று கூறி இன்று காலை 6 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் காரப்பள்ளம் சோதனை சாவடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் சாலை மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    காலை 6 மணிக்கு நடந்த சாலை மறியல் போராட்டம் 7.30 மணிக்கு ஒரு முடிவுக்கு வந்தது.

    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குறிசிலாப்பட்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்-ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் என்றனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலத்தில் போலீஸ் தாக்கியதால் தள்ளுவண்டி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் ஜாமியா மசூதி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி(வயது40). இவர் அ.ம.மு.க. சிறுபான்மை மாவட்ட இணை செயலாளர். இவர் அந்த பகுதியில் வளையல் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வியாபாரம் செய்வதற்காக காலை தள்ளுவண்டியை வீட்டில் இருந்து கொண்டு வந்தார். அப்போது போலீசார் கடையை இந்த பகுதியில் போட வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. அவர் தள்ளுவண்டியை நகர்த்தும் பகுதி சற்று இறக்கம் என்பதால் சிறிது தாமதமாக வண்டியை தள்ளி அந்த இடத்தை விட்டு சென்றார்.

    இதை பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை அடித்து தகாதவார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள சாலையோர கடையை வைத்திருக்கும் வியாபாரிகள் போலீசாரை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அந்த பகுதிக்கு வந்த உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வியாபாரிகள் முகமது அலியை அடித்த போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அந்த பகுதியை விட்டு கலைய மறுத்து தொடர்ந்து மறியல் செய்தனர். தெடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் தற்போது முதல்-அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார். அதனால் தற்போது இந்த பகுதியை விட்டு கலைந்து செல்லுங்கள், முதல்-அமைச்சர் சென்ற பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

    இதை ஏற்ற வியாபாரிகள் அந்த பகுதியை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்

    4-வது நாளான இன்று சேலம் நாட்டாண்மை கட்டிடம் முன்பு மாவட்டம் முழுவதும் இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

    இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் பள்ளிகளில் கற்பித்தல் பணி, மற்றும் அரசு பணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சில பள்ளிகளை சத்துணவு ஊழியர்களை வைத்து தற்போது நடத்தி வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தல் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4-வது நாளாக இன்று நாமக்கல் பூங்கா சாலையில் திரண்டனர்.

    பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடியே அந்த பகுதியில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதற்கிடையே ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கும் நடவடிக்கையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    விருதுநகர்:

    பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க முடியாது, பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் நீதிமன்ற விதிகளை பின்பற்றி பட்டாசு தயாரிக்க வழியில்லை என்பதால் பட்டாசு ஆலைகளை காலவரையன்றி மூடுவதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையை மாற்ற வேண்டியும், மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

    அதன்படி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சேத்தூர், கீழராஜகுலராமன், சாத்தூர், ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, ஆமத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வச்சக்காரப்பட்டி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி. யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். இவர்கள் 6 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சார்பில் சிவகாசி, மாரநேரி, திருத்தங்கல், தாயில்பட்டி, கன்னிசேரி உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இந்த மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களிலும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) விருதுநகர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. #FireCrackers

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்தி மையமாக இயங்கும் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

    பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும், குறிப்பிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது போன்ற விதிகள் இருந்ததால் பட்டாசு தொழில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

    பட்டாசு உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.

    பட்டாசு தொழிலை காப்பாற்ற விதிகளை தளர்த்த வேண்டுமென வலியுறுத்தி தொழிலாளர்கள் சிவகாசியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 வாரத்திற்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தற்போது வரை பட்டாசு ஆலையை திறப்பதற்கான எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை.

    2 மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பட்டாசு தொழிலாளர்கள் கூறுகையில், பல வருடங்களாக பட்டாசு தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம். திடீரென வேலை நிறுத்தம் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளோம். வேறு வேலையும் தெரியாது. குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது.

    எனவே மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) விருதுநகர் மாவட்டத்தில் 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

    இது குறித்து விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் மகாலட்சுமி விடுத்துள்ள அறிக்கையில், பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை.

    இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை (9-ந் தேதி) சிவகாசி பஸ் நிலையம், திருத்தங்கல், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, மாரனேரி, சாத்தூர், கன்னிச்சேரி, ஆமத்தூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. #FireCrackers

    ×